Thursday, January 6, 2011

வேதங்கள் 4 வகைகள்

இருக்கு வேதம் (ரிக்வேத)
இந்து சமயத்தின் அடிப்படையாகக் கொள்ளப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இந் நான்கு வேதங்களில் மிகப் பழமையானதும் இதுவே. சமசுகிருத மொழியில் அமைந்த சுலோகங்களின் தொகுப்பான இது, எந்தவொரு இந்தோ ஐரோப்பிய மொழியிலும் எழுதப்பட்டு இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய நூலாகவும் திகழ்கிறது. இது ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்பட முடியாவிட்டாலும், பொதுவாக கி.மு 1500 க்கும், கி.மு 1200 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இருக்கு வேதம், வேதகால சமசுகிருதத்தில் ஆக்கப்பட்ட 1,017 சுலோகங்களால் ஆனது. இச் சுலோகங்களுட் பல வேள்விக் கிரியைகளில் பயன்படுத்துவதற்காக உருவானவை. இவ்வேதம் பத்து மண்டலங்களாகப் (பகுதிகள்) பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான சுலோகங்கள் கடவுள்களைப் போற்றும் நோக்கிலே அமைந்தவை. சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. முக்கியமாக ஆரியர்களுக்கும், அவர்களது எதிரிகளான தாசர் எனபடும் இனத்தாருக்கும் இடையிலான போர்கள் பற்றிய குறிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
இருக்கு வேதத்தில் முதன்மையாகக் குறிப்பிடப்படும் கடவுள்கள், தீக்கடவுளான அக்கினி, தேவர்கள் தலைவனும், வீரனுமான இந்திரன், சோமன் என்போராவர். இவர்களைவிட மித்திரன், வருணன், உஷாக்கள், அஸ்வின்கள் என்போரும், சவிதர், விஷ்ணு, உருத்திரன், பூஷண், பிருஹஸ்பதி, பிரமனஸ்பதி, தியாயுஸ் பிதா, பிரிதிவி, சூரியன், வாயு, பர்ஜான்யன், வசுக்கள், மாருத்கள், ஆதித்தர்கள், விஸ்வதேவர்கள் போன்ற கடவுளர்களும், இந் நூலில் போற்றப்படுகிறார்கள்.இருக்கு வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில, வேறு இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டார் (Jupiter) (தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை இருக்கு வேதக் கடவுட் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம்.



யசுர் வேதம்
 yajus "வேள்வி" + veda "அறிவு" என்பவற்றின் சேர்க்கையில் உருவானது.) இந்துக்களினால் புனிதமாகக் கருதப்படும் நான்கு வேதங்களுள் ஒன்று. இவ்வேதம், பொது வழிபாடு, கிரியைகள், வேள்விகள் என்பவை பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறுகின்றது. இது கி.மு 1500 க்கும், 500 க்கும் இடையில் எழுத்து வடிவில் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. யசுர் வேதம் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை சுக்கில யசுர்வேதம், கிருஷ்ண யசுர்வேதம் எனப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே கிரியைகளுக்கு வேண்டிய சுலோகங்களைத் தம்முள் கொண்டுள்ளன. கிருஷ்ண யசுர்வேதம், மேலதிகமாக உரைநடை விளக்கங்களையும், விரிவான அறிவுறுத்தல்களையும் தன்னுள் அடக்கியுள்ளது.கிருஷ்ண யசுர்வேதம் கிருஷ்ண யசுர்வேதத்துக்கு நான்கு உட்பிரிவுகள் (சாகைகள்) உள்ளன. அவை: தைத்திரீய சம்ஹிதைமைத்திராயனீ சம்ஹிதைசரக-கதா சம்ஹிதைகபிஸ்தல-கதா சம்ஹிதைஎன்பனவாகும். இவற்றுள் பிரபலமானது தைத்திரீய சம்ஹிதை ஆகும். இது ஏழு காண்டங்களாகப் (பிரிவுகள்) பிரிக்கப்பட்டுள்ளது. மேற்படி உட்பிரிவுகள் ஒவ்வொன்றும், அவற்றுடன் இணைந்த ஒரு பிராமணத்தையும் (வேதவிளக்கம்) கொண்டுள்ளன. சில உட்பிரிவுகள், அவற்றுடன் இணைந்த சிரௌதசூத்திரங்கள், கிருஹ்யசூத்திரங்கள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், பிரதிசாக்கியங்கள் என அழைக்கப்படும் துணை நூல்களையும் கொண்டு விளங்குகின்றன. சுக்கில யசுர்வேதம் சுக்கில யசுர்வேதம் முனிவர் ஸ்ரீ யோகீசுவர யாக்கியவல்கியரால் தோற்றுவிக்கப்பட்டது எனவும் இதை யாக்கியவல்கியர் சூரிய பகவானிடமிருந்து, அவர் சுற்றி வரும் வேகத்திலேயே சென்று நேரடியாகப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. சுக்கில யசுர்வேதம் பதினைந்து சாகைகள் (உட்பிரிவு) கொண்டது எனவும் தற்போது இரண்டு உட்பிரிவுகள் மட்டுமே உள்ளன எனவும் நம்பப்படுகிறது. அவை: வஜசனேயி மாத்தியந்தினியம்வஜசனேயி கான்வம்என்பனவாகும். முன்னையது வட இந்தியாவிலும் குசராத்திலும் நாசிக்குக்கு வடக்கேயுள்ள மகாராட்டிரத்திலும் பிரபலமானது. பின்பற்றும் மக்கள்தொகையின் அடிப்படையில், இந்தியாவில் மிகப்பெரிய வேத மரபுகளுள் ஒன்றாகும். கான்வ சாகை (கான்வ உட்பிரிவு)நாசிக்குக்கு தெற்கேயுள்ள மகாராட்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ,கேரளா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்படுகின்றது. ஜகத்குரு என அழைக்கப்படும் ஆதி சங்கரர் கான்வ சாகையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள இந்தியாவின் மிகப்பெரிய இந்துக்கோயிலான ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோயில் கிரியைகளும் இம்மரபின்படியே நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது. மிகவும் சிறப்புப் பெற்ற உபநிடதங்களான ஈசாவாஸ்யம், பிருஹதாரணியம் ஆகியவை சுக்கில யசுர்வேதத்துக்கு உரியவை. பிருஹதாரணியமே எல்லா உபநிடதங்களிலும் பெரியது என்பதுடன் மிகவும் செம்மையானதும் அதுவே என்று கூறப்படுகின்றது.பிராமணம்மாத்தியந்தினியம், கான்வம் இரண்டு உட்பிரிவுகளிலுமே சதபத பிராமணம் என்ற வேத யாகத்தொகுப்பு உள்ளது.
சாம வேதம்
 "கிரியைகளுக்கான மந்திரங்கள்" + veda "அறிவு" ), என்பது இந்துசமயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். ஆனால், புனிதத் தன்மையில் ரிக் வேதத்துக்கு அடுத்ததாக இது இரண்டாவது நிலையில் இருப்பதாகக் கருதப்படுகின்றது. அளவில் இது ரிக்வேதத்தில் ஏறக்குறைய பாதியளவு இருக்கும்.
அதர்வண வேதம் இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.


அதர்வண வேதம்ஒரு சிறு அறிமுகம்
பொதுவாக அதர்வண வேதம் பில்லி சூனியங்களைப் பற்றியது என்ற தோற்றம் நிலவுகிறது.
கருவான ருக் வேதத்தின் பரிணாமம் தான் யஜுர், ஸாமம் மற்றும் அதர்வண வேதங்கள் என்பவை. கருவாக இருந்தது ருக் வேதம். யாக யக்ஞத்திற்காக மந்திரங்களாக உருவெடுத்த போது யஜுர் வேதம் எனப்பட்டது. பண் கூட்டி இசைத்த போது ஸாமம் எனப்பட்டது. மனதை நிறுத்தி யோகமாய்ப் பயிலுங்கால் அதர்வம் எனப்பட்டது. தர்வ என்றால் குறிக்கோளின்றி திரிவது (eccentric). குறிக்கோளில்லாமல் இயங்குவர்களை தமிழில் தறுதலை என்பதும் இந்த வேத வழக்கை ஒட்டித்தான். இதற்கு எதிராக மனதை ஒருநிலைப்படுத்தி உறுதியான குறிக்கோளோடு இயங்குவதுஅதர்வஎனப்பட்டது. இவ்வாறு அலைகின்ற மனதை ஒருமுகப்படுத்தும் போது உடலில், எண்ணங்களில் மாற்றம் ஏற்படுகிறது. இதனை இந்த மாற்றத்தைஅங்க ரஸம்என்பர். அங்கரஸா வை அங்கீரஸா என்று நிருக்தம் கூறும். அதாவது உடலில் ஏற்படும் மாற்றம் உடலைச் சார்ந்தவனின் உள்ளத்தையும் பாதிக்கும் என்பதாகும். அதே போல உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் உடலை பாதிக்கும்.
நவீன விஞ்ஞானம், மனத்தில் சந்தோஷம் ஏற்படும் போது ரத்தத்தில் செரடானின்(serotonin) என்னும் என்ஸைம் (enzyme) அதிகமாக உண்டாவதாக கூறுகிறது. கோபம் ஏற்பட்டால் அட்ரினலின் (Adrenaline) என்னும் என்ஸைம் அதிகமாக சுரக்கிறது எனவும் கூறுகிறது. மேலும் கருவுற்றிருக்கும் தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அது கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் எனவும் அறுதியிட்டு கூறுகிறது. மேற்சொன்ன உதாரணங்களால் உள்ளம் உடலையும், உடல்நிலை உள்ளத்தையும் பாதிக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆக அதர்வன் என்னும் நிலை வந்தால் அங்கரஸம்/அங்கீரஸம் ஏற்படும் என்பதால் அதாவது மனம் ஒருமுகப்பட்டால் உடலில், எண்ணங்களில் மாறுபடும் என்பதால் வேதத்தில் அதர்வனும் அங்கீரஸனும் இணைத்தே கூறப்படுகிறது. மேலும் தைத்திரியோபநிஷத், வேதத்தை பறவையாக உருவகித்து சொல்லும் போது, அதர்வாங்கீரஸை அப்பறவையின் வால் என்றது. பறவைக்கு மேலே பறப்பதற்கோ, கீழே இறங்குவதற்கோ, அதே நிலையில் பறப்புதற்கோ வால் தான் காரணமாக இருக்கிறது. அதைப் போல ஒருவனின் மனநிலை தான் அவனை மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ, அதே நிலையிலோ வைக்கக் காரணமாகிறது என்ற ஆழமான தத்துவத்தை இங்கே தெரிவிக்கிறது. உள்ளத்தனையது உயர்வு என்று வள்ளுவனாரும் கூறியது இதனால் தான்.
ஆக அதர்வண வேதம் என்பதை ஆழ்மனவியல் (Parapsychology) சம்பந்தப்பட்டது என்று சொல்லுவதே சாலப் பொருத்தமாக இருக்கும். இதனால் தான் உயர்ந்த/ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட முண்டகோபநிஷத் அதர்வண வேதத்தின் அங்கமாக இருக்கிறது.
குறிக்கோளோடு இயங்கும் இந்த அதர்வ நிலை தான் ஒருவன் செல்லவேண்டிய வழி என்பதால் இந்த வேதவழக்கை ஒட்டி தமிழ்மொழியில் அதர் என்றால் வழி என்றனர். (உதாரணம்: காலதர் = ஜன்னல். கால் என்றால் காற்று. ஆக காற்று வருகின்ற வழியை காலதர் என்றது. இது பிறழ்ந்து சாளரம் என்று ஆயிற்று.)
நன்றி: ஸ்ரீ பகவத் கீதா ஸம்மேளனம்.

2 comments:

  1. வணக்கம்
    மிக அருமையான விளக்கங்களை உங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களால் எழுத முடியும் .மேலும் உங்களுடைய பதிவுகளை
    வாசிப்பதற்கு காத்திருக்கிறோம்

    ReplyDelete
  2. வணக்கம்
    மிக அருமையான விளக்கங்களை உங்களைப் போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களால் எழுத முடியும் .மேலும் உங்களுடைய பதிவுகளை
    வாசிப்பதற்கு காத்திருக்கிறோம்

    ReplyDelete