Thursday, January 6, 2011

உணவு பரிமாறும்போது…

உணவு பரிமாறும்போது…


தர்ம சாஸ்திரத்தில், பல தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. உணவு பரிமாறும்போதும், உட்கொள்ளும் போதும், சில சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும். உணவில் ரோமம் (தலைமுடி) இருந்தால், அந்த உணவை நிராகரிக்க வேண்டும். அதனால், உணவில் ரோமம் வந்து விடாமல், கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறது. தலையில் இருக்கும் வரைக்கும் அது சிகை அல்லது கூந்தல். அப்போது, அதற்கு எண்ணெய் தடவி, சீவி, சிங்காரித்து பூ வைப்பர். அதுவே கீழே விழுந்து விட்டால், வேண்டாத பொருளாக மாறி விடுகிறது. அதை துடைப்பத்தால் பெருக்கி, வாசலில் தள்ளி விடுவர். ஆக, இந்த ரோமம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் மரியாதை.

கன்யாகிப்ஜம் என்ற நாட்டில் குணசீலன் என்ற ராஜா இருந்தான். ரொம்ப பக்திமான். ஒரு நாள், துர்வாச மகரிஷி அரண்மனைக்கு வந்தார். அவரை உபசரித்து, அறுசுவை உணவளித்தான் ராஜா. சாப்பிடும்போது உணவில் ஒரு ரோமம் இருந்ததைக் கண்டு, “கவனமில்லாமல், ரோமம் கலந்த உணவை அளித்ததால் நீ ஒரு கரடியாகி போகக் கடவது!’ என்று சபித்தார் துர்வாசர். அவரிடம் மன்னிப்புக் கேட்டு, சாப விமோசனம் கேட்டான் ராஜா. கோபம் தணிந்த துர்வாசர், “நீ கரடியாக காட்டில் இருக்கும்போது, துளசி மாலை அணிந்த சாது ஒருவர் வருவார். அவர், தன் கழுத்திலிருந்து துளசி மாலையை எடுத்து வீசுவார். அந்த துளசி மாலை, உன் கழுத்தில் விழும்போது, கரடி உருவம் நீங்கி, மீண்டும் ராஜாவாகப் பிறப்பாய்…’ என்று சொல்லிவிட்டு போய் விட்டார். ராஜா, கரடியாக மாறி, காட்டில் உட்கார்ந்தபடி, துளசி மாலையுடன் சாது வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்; நாட்கள் ஓடியது. ஒரு நாள், அந்த வழியாக வந்தார் ஒரு சாது. அவர் தன் கழுத்திலிருந்த துளசி மாலையை எடுத்து வீசியெறிந்தார். அது, கரடியின் கழுத்தில் வந்து விழுந்தது. உடனே கரடி உருவம் நீங்கி, ராஜ உருவம் பெற்றார். அவர், சாதுவைப் பார்த்து, “எனக்கு ராஜாவாகப் பிறக்கும் பாக்கியம் எப்படி ஏற்பட்டது; ஏன் கரடியாகும்படி சாபம் கிடைத்தது?’ என்று கேட்டார். தன் ஞான திருஷ்டியால் பார்த்து, “நீ பூர்வத்தில், கந்தர்வனாக இருந்தாய். இந்திர சபையில் நீ இருந்தபோது, பூலோகத்திலிருந்து சில அரசர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்களின் ஆடம்பரத்தைப் பார்த்த நீ, நானும் ஒரு ராஜாவாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய். இதையறிந்த இந்திரன், உன்னை ஒரு ராஜாவாகப் பிறக்கும்படி சபித்தார். “நீ சாப விமோசனம் கேட்டதும், “நீ பூலோகத்தில் ராஜாவாக பிறந்து, ஒரு முனிவரின் சாபத்தால் கரடியாகி, பிறகு ஒரு சாதுவின் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும். பிறகு, நீ இங்கே வரலாம்!’ என்றார் இந்திரன். அதன்படி எல்லாம் நடந்துள்ளது!’ என்றார் சாது. இதைக் கேட்ட ராஜா, கந்தர்வனாக மாறி, சாதுவுக்கு நன்றி சொல்லிவிட்டு, இந்திர சபையை அடைந்தார் என்பது கதை.அதனால், உணவு பரிமாறும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எதையெல்லாம் கரண்டியால் பரிமாற வேண்டும்; எதையெல்லாம் கையால் பரிமாறலாம்; தீர்த்த பாத்திரம் எந்த பக்கம் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூட சாஸ்திரங்களில் உள்ளன; அதன்படி நடந்தால் நல்லது.

No comments:

Post a Comment