Sunday, January 30, 2011

அத்வைதம்,துவைதம்,விசிஷ்டாத்வைதம்,

அத்வைதம்
அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) - அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் தத்துவம்.
கி.பி. 788-820ம் காலத்தே வாழ்ந்த சங்கரராய் (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.
இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார்.
சங்கரரின் பரமகுருவாகிய கௌடபாதரின் (மாண்டூக்கியரின்) மாண்டூக்கிய காரிகை பிரம்மசூத்திரத்தினை விளக்க எழுந்தது. இதில் கூறப்பட்ட விளக்கங்கள் போதிய தெளிவுடன் காணப்படாமையால் அதனை மேலும் இலகுபடுத்தி விளக்கும் பொருட்டு எழுந்ததுவே சங்கரரின் அத்வைத சிந்தனையாகும்.
அத்வைதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள்
1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.
2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.
3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா, ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.
4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை இடைநிலை விள்க்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.

இதனையே சுருக்கமாகச் சொல்வதாயின்...

1. பிரம்மத்தின் இரண்டற்ற நிலை.

2. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.

3. உலகத்தின் உண்மையற்ற நிலை.

எனக் கூறலாம்.

ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்கள்
ஜைனம் பௌத்தம் துவைதம் விசிஷ்டாத்வைதம் முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும். இவற்றை முறையே மகாவீரர் புத்தர் மத்வர் இராமானுஜர் அகியோர் பிரதானமாக முன்மொழிந்தனர். மத்வரின் துவைதமும் புத்தரின் பௌத்தமும் இணைந்த கருத்துக்களை அத்வைதம் பறைசாற்றுகிறது. அத்வைதத்திற்கு இன்னும் தெளிவினைக் கொடுக்க விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் முன்மொழியப்பட்டது.
ஆன்மா என்னும் ஒன்றினை ஏற்கும் இத்தத்துவங்கள் அதன் தன்மையைப் பற்றி தமக்குள் மாறுபட்ட நிலைப் பாட்டினைக் கொண்டுள்ளன. மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இவற்றுள் பௌத்தம் மற்றும் சமணத்தை தனியானதொரு சமயமாக எழுதியதின் தாக்கம் இவ்விரண்டும் தனி மதங்களாகவும் துவைதம் விசிஷ்டாத்வைதம் மற்றும் அத்வைதம் ஹிந்து மத தத்துவங்களாகவும் இன்று அடையாளங்காணப் படுகின்றன. ஆன்மீகம் என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
துவைதம்
இந்நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் மத்துவர். இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் அநந்தேஸ்வரம் என்னும் கிராமத்தில் அவதரித்தார். தமது ஒன்பதாம் வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார். துவைதம்- துவி என்றால் இரண்டு. பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை என்பதாம். பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.
விசிஷ்டாத்வைதம்
இவ்வேதாந்த நெறியை உலகிற்கு அளித்தவர் இராமானுஜர் ஆவார். பிரம்ம சூத்திரம் பகவத் கீதை முதலியவற்றிற்கு தமது விசிஷ்டாத்வைதக் கொள்கைப்படி உரை எழுதினார். விசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத்வைதம். அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் - விசேஷம். விசிஷ்டாத்வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு, சுருதி, ஸ்மிருதி þ நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.

3 comments:

  1. அருமை விளக்கம்.

    ReplyDelete
  2. இந்துமத தத்துவங்கள் என கருதப்படும் அத்வைதம் துவைதம் வசிஷ்டாத்வைதம் பற்றிய எளிய அறிமுக உரை நன்றி

    ReplyDelete
  3. சிறந்த கருத்து

    ReplyDelete