Monday, February 14, 2011

கழற்சிங்கநாயனார் புராணம்

கழற்சிங்கநாயனார் புராணம்

காடவர்தம் குலமுவந்த கழலார் சிங்கர்
காதன்மிகு தேவியுடன் காவ லாரூர்
நாடவல பெருமானைப் பணிவா ரங்கோ

ரகன்றமலர் தனைமோந்த வரிவை மூக்கைச்
சேடுடைய செருத்துணையா ரரியக் கேட்டுத்
திறலரசர் மலரெடுத்த செங்கை யென்றே
சூடகமுன் கைதடிந்து ஞாலங் காத்த
தூய்மையா ரருள்சேர்ந்த வாய்மை யாரே

காடவர்குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி மற்றொன்றையும் அறியாத கழற்சிங்கநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனது திருவருள் வலிமையினால் வடபுலத்தரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் நாடுகளைக் கவர்ந்து எங்குஞ் சைவசமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டார்.
இப்படி யொழுகுநாளிலே மாதேவியோடு சிவஸ்தலங்கடோறுஞ்சென்று, சுவாமிதரிசனம் பண்ணித் திருத்தொண்டு செய்வாராகி, திருவாரூரை அடைந்து திருக்கோயிலிலே பிரவேசித்துச் சுவாமியை வணங்கினார். அப்பொழுது அவருடைய மாதேவி திருக்கோயிலை வலஞ்செய்து, அங்குள்ள சிறப்புக்களெல்லாவற்றையுந் தனித்தனியே பார்த்துக்கொண்டு வந்து, திருமாலைகட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப்பூவை எடுத்து மோந்தாள். உடனே செருத்துணைநாயனார் இதனைப் புஷ்பமண்டபத்துள் எடுத்து மோந்தாள் என்று நினைத்து, விரைந்து ஓடி வந்து, அவளைக் கூந்தலிலே பிடித்து இழுத்து வீழ்த்தி, அவளுடைய மூக்கைப் பிடித்துக் கத்தியினாலே அரிந்தார். அவள் சோர்ந்து புலம்பினாள். அப்பொழுது கழற்சிங்கநாயனாரும் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு, அவளுக்குச் சமீபத்தில் வந்து, அவளைப் பார்த்து, மிகக்கோபித்து, 'சிறிதும் அஞ்சாமல் இந்தக் கொடுஞ்செய்கையைச் செய்தவர்யாவர்" என்று வினாவ, செருத்துணை நாயனார் "இவள் சுவாமிக்குச் சாத்தற்பாலதாகிய புஷ்பத்தை எடுத்து மோந்தமையால் நானே இப்படிச் செய்தேன்" என்றார். அப்பொழுது கழற்சிங்கநாயனார் அவரை நோக்கி, "புஷ்பத்தை எடுத்த கையையன்றோ முன் துணிக்கவேண்டும்" என்று சொல்லி, கட்டிய உடைவாளை உருவித் தம்முடைய மாதேவியினது புஷ்பமெடுத்த கையைத் துணிந்தார். அது கண்டு, தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள். இவ்வரிய திருத்தொண்டைச் செய்த கழற்சிங்கநாயனார் நெடுங்காலஞ் சைவநெறி தழைத்தோங்க அரசியற்றிக் கொண்டிருந்து பரமசிவனுடைய திருவடிநீழலை அடைந்தார்.



No comments:

Post a Comment