Tuesday, February 15, 2011

கோச்செங்கட்சோழநாயனார் புராணம்

கோச்செங்கட்சோழநாயனார் புராணம்


வெண்ணாவ விறைக்கொளிநூற் பந்தர் செய்த
வியன்சிலம்பி யதுவழித்த வெள்ளா னைக்கை
யுண்ணாடிக் கடித்தவுட லொழியச் சோழ
னுயர்குலத்துச் சுபதேவன் கமலத் தோங்கும்
பெண்ணாகி யவள்வயிற்றில் வைகிச் செங்கட்
பெருமானாய்த் தென்னவனாய்ப் பெருங்கோயில்பலவுங்
கண்ணார்வித் துயர்தில்லை மறையவர்க்கு முறையுள்
கனகமய மாக்கியருள் கைக்கொண் டாரே.

சோழமண்டலத்திலே, சந்திரதீர்த்தத்தின் பக்கத்திலே ஒரு வனம் இருந்தது. அதிலே நின்ற ஒரு வெண்ணாவன் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் வெளிப்படலும், ஒரு வெள்ளானை அதைக்கண்டு, நாடோறும் புழைக்கையினாலே தீர்த்தம் முகந்து ஆட்டி, புஷ்பங்களைச் சாத்தி, வழிபட்டு ஒழுகுவதாயிற்று. அதனால் அந்த ஸ்தலத்துக்குத் திருவானைக்கா என்று பெயராயிற்று. அறிவினையுடைய ஒரு சிலந்தி, அந்தச் சிவலிங்கத்தின் மேலே சருகு உதிராவண்ணம், தன் வாய்நூலினாலே மேற்கட்டி செய்தது. சிவலிங்கத்தை வணங்கவந்த வெள்ளானை அதைக்கண்டு, அது அநுசிதம் என்று நினைந்து, அதைச் சிதைக்க; சிலந்தி மீளவும் மேற் கட்டி செய்தது, வெள்ளானை மற்றநாளும் அதைச் சிதைத்தது. அது கண்டு சிலந்தி "எம்பெருமான் மேலே சருகு உதிராவண்ணம் நான் வருந்திச் செய்த மேற்கட்டியை இது அழிக்கலாமா" என்று கோபித்து, வெள்ளானையினது புழைக்கையினுள்ளே புகுந்து கடிக்க; வெள்ளானை கையை நிலத்திலே மோதிக்கொண்டு விழுந்து இறந்தது. கையை நிலத்திலே மோதியபோது, அதனுள்ளே புகுந்த சிலந்தியும் இறந்தது வெள்ளானை சிவகணநாதராகித் திருக்கைலாசமலையை அடைந்து, சிவபெருமானைச் சேவித்துக் கொண்டிருந்தது.
சுபதேவனென்னுஞ் சோழமகாராஜன் தன் மனைவியாகிய கமலவதியுடன் சிதம்பரத்தை அடைந்து, சபாநாயகரை உபாசனை செய்துகொண்டிருக்கு நாளிலே; கமலவதி புத்திரபாக்கியம் இன்மையால் வரம் வேண்ட; அந்தச் சிலந்தி சபாநாயகரது திருவருளினாலே அவளுடைய வயிற்றிலே மகவாய் வந்து அடைந்தது. கமலவதிக்குப் பிரசவகாலம் அடுத்தபொழுது, சோதிடர்கள் "இந்தப்பிள்ளை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாகில், முப்புவனங்களையும் அரசாளும்" என்றார்கள். கமலவதி "என் பிள்ளை இப்போது பிறவாமல் ஒருநாழிகை கழித்துப் பிறக்கும்படி என்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள்" என்று சொல்ல; அங்குள்ளவர்கள் அங்ஙனங் கட்டித் தூக்கி, சோதிடர்கள் குறித்த காலம் அணையக் கட்டவிழ்த்து விட்டார்கள். கமலவதி பிள்ளையைப் பெற்று, அது பிறக்குங்காலந் தாழ்த்தமையாற் சிவந்த கண்களையுடையதாய் இருத்தல்கண்டு, "என்கோச்செங்கண்ணானோ" என்று சொல்லிக்கொண்டு, உடனே இறந்துவிட்டாள். சுபதேவன் அப்புதல்வரை வளர்த்து முடிசூட்டி, அரசை அவரிடத்தில் ஒப்பித்து, தான் தவஞ்செய்து சிவலோகத்தை அடைந்தான்.
கோச்செங்கட்சோழநாயனார் பரமசிவனது திருவருளினாலே பூர்வசன்ம வுணர்ச்சியோடு பிறந்து, சைவத்திருநெறி தழைக்க அரசியற்றுவாராகி, சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுவிக்கத் தொடங்கினார். திருவானைக்காவிலே தாம் முன்னே அருள் பெற்றதை அறிந்து, அங்கே வெண்ணாவலுடன் பரமசிவனுக்குத் திருக்கோயில் கட்டுவித்தார். மந்திரிகளை ஏவி, சோழநாட்டில் வெவ்வேறிடங்களிலே சிவாலயங்கள் கட்டுவித்து, அவ்வாலயங்கடோறும் பூசை முதலியவற்றிற்கு நிபந்தங்கள் அமைத்தார். பின்பு சிதம்பர ஸ்தலத்தை அடைந்து, சபாநாயகரைத் தரிசித்து வணங்கி தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்து, பின்னும் பல திருத்தொண்டுகளைச் செய்து கொண்டிருந்து, சபாநாயகருடைய திருவடி நீழலை அடைந்தார்.



No comments:

Post a Comment