Tuesday, February 22, 2011

நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது.

நோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்

நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் மகாவிஷ்ணவே நம !
பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே,
தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும்
தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான
ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.

தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்.




No comments:

Post a Comment