Sunday, February 6, 2011

மறுபடியும் பாவம் புண்ணியம் கவியரசு கண்ணதாசன்

மறுபடியும் பாவம் புண்ணியம் கவியரசு கண்ணதாசன்
இந்து மதத்தைப் பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது.
இந்து மதத்தைப் பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஷயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை.
ஆனால், அவர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை நடக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை.
“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது” என்பது அவர்கள் வாதம்.
அப்படி விவாதித்தபோது கண்ணெதிரே நடந்த சாட்சியங்களை அவர்கள் காட்டவில்லை. தத்துவார்த்த விளக்கமே கூறினார்கள்.
அந்தத் தத்துவார்த்தம் என்னைப் போன்றவர்களுக்கு.
அந்தத் தத்துவப்படி நடந்த சம்பவங்களை நான் எழுதுவது உன்னைப் போன்றவர்களுக்கு.
பாவம் புண்ணியம் என்பதையெல்லாம், வெறும் தத்துவமாகவே கேட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினால் விளங்கும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.
வாழ்க்கை ஒழுக்கத்தை, சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறுத்துவது இந்து மதம்தான்.
அதன் பண்பாடுகள் உன்னதமானவை; அதன் சடங்குகள் அர்த்தமுள்ளவை.
மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது இந்துக்களிடம்தான். சில சின்னங்களை மங்கலமாகவும், சிலவற்றை அமங்கலமாகவும் அவர்கள் காட்டினார்கள்.
மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில், அமங்கல வார்த்தைகூடக் கேட்கக்
கூடாது என்றார்கள்.

பெண்ணுக்கு மங்கலம் என்பது தாலி.
திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை மரணத்தின் போது தான் கழற்ற வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போதுகூடக் கழற்றக் கூடாது. அவ்வளவு புனிதமானது அது.
ஒரு உத்தமியின் கழுத்திலுள்ள தாலியை யார் அபகரித்தாலும், அந்தத் தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது, இந்துக்கள் நம்பிக்கை.
எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நான் படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத்திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக்க விரும்பினேன்.
நன்கு பாடக்கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன்.
ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர் நான் ஒப்பந்தம் செய்தபோது வறுமையிலிருந்தார். அவருடைய மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை. அரக்கு மஞ்சளை மஞ்சள் நூலில் கோர்த்து அணிந்திருந்தார்.
தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதாக நடிகர் கூறினார். உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவரைக் கூட்டிக்கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டிற்குப் போனேன்.
நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான் அடகு வைக்கப்பட்டிருந்தன. தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன்.
அவர் பணத்தையும் வாங்கிக்கொண்டு, “ஏராளமான வட்டி பாக்கிஇருக்கிறது, இதை வட்டிக்கு வரவு வைத்துக் கொள்கிறேன்; தாலியைத் தரமுடியாது” என்று சொல்லிவிட்டார்.
பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை.
பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து அவர் புதிய தாலியையே வாங்கி, தன் மனைவியின் கழுத்தில் கட்டினார்.
என் படம் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த நடிகர் `இன்சால்வென்ட்’ ஆனார்.
ஆனால், மூன்றாவது மாதமே படம் வெளிவந்ததும் பத்துப் படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணமும் வந்தது. `இன்சால்வென்சி’யும் ரத்தாயிற்று. அவருடைய சொத்துக்கள் அவருக்கே திரும்பி வந்தன. இன்று அவர் சுகமாக நாடகங்களிலும் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய மனைவி உத்தமி. புராண காலத்து சீதை, வரலாற்றுக் காலத்துக் கண்ணகிக்கு நிகரான சத்தியவதி.
அந்தச் சத்தியவதியின் தாலியை வைத்திருந்தாரே அவரது குடும்பம் பட்டபாடும், அதில் ஏற்பட்ட குழப்பமும், அவர் நோயில் இழுத்துக் கிடந்து மாண்டதும் விவரிக்க முடியாத பெருங்கதை.
அந்தத் `தாலி’ அவரது குடும்பத்தின் நிம்மதியையே அழித்து விட்டது. இந்துக்களின் மங்கல சூத்திரம் தன் சக்தியைக் காட்டிவிட்டது.
பாவத்தின் விலை, அவரது வாழ்நாளிலேயே கிடைத்து விட்டது. நிற்க.
“அன்னையும் பிதாவும் முதல் தெய்வம்” என்பது இந்துக்கள் சம்பிரதாயம்.
“தாயைப் பணிந்தவன் கோவிலுக்குப் போக வேண்டாம்” என்பார்கள்.
தாய் தந்தையைச் சுற்றி வந்த கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.
தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒரு பக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிக்கவில்லை என்றும், இறைவன் ஆத்திரமுற்றபோது `தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாகக் கூறினான் என்றும், இறைவனே மனமயங்கி, அவன் பாதத்தில் விழுந்தான் என்றும் நாம் படிக்கிறோம்.
அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும் எவனுக்கும் எதிர்காலம் உண்டு.
நான் கண்ணெதிரிலேயே பார்க்கிறேன், பலரை.
ஆனால், தாயின் குரலைக் கேளாத ஒருவருடைய கதையை உனக்குச் சொல்ல வேண்டும்.
அவர் என்னுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்; ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர்.
அவரது விதவைத் தாய் தன் வயிற்றைக் கட்டிவைத்து மகனுக்குச் சோறூட்டுவாள்.
எங்கள் பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத பணக்காரர்கள் `சுவிகாரம்’ எடுக்கும் பழக்கம் பரவலாக உண்டு.
அந்தச் சுவிகாரத்தில் பிள்ளையைப் பெற்ற தாய்க்கு விலையாக ஒரு தொகையையும் தருவார்கள்.
அந்தத் தொகைக்காகவும், தன் பிள்ளையாவது நல்ல இடத்தில் வாழட்டுமே என்று சுவிகாரம் விட்டு விட்டாள், அந்தத் தாயார்.
ஏழை மகன் லட்சாதிபதியானான். பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். வசதியான வாழ்க்கையில், பெற்ற `தாயையே’ மறந்துவிட்டான்.
அவனால் மறக்கமுடிந்தது; தாயினால் அது முடியவில்லை.
ஒருநாள் நான் அந்த மனிதனைப் பார்க்கப் போனேன். காய்கிற வெயிலில், அந்த வீட்டின் வெளித்திண்ணையில் அந்த அம்மையார் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் “ஐயா, நீ யார்?” என்று கேட்டார்கள்.
“என்ன ஆச்சி? என்ன வேண்டும்?” என்று நான் கேட்டேன்.
உடனே அந்த மூதாட்டி, “தம்பி, உள்ளே இருப்பது என் பிள்ளைதான். சுவிகாரம் விட்டு
விட்டேன். அவனைப் பாக்குறதுக்காகக் காலையில் இருந்து திண்ணையிலேயே உட்கார்ந்திருக்கேன். ஒருத்தரும் விடமாட்டேங்கிறாங்க. நீயாவது எம் மகங்கிட்ட கொஞ்சம் சொல்லேன்” என்றார்கள்.

என் கண்கள் கலங்கிவிட்டன.
ஆசையாக, ஒரு கூடையில் பணியாரமும் உளுந்துவடையும் கொண்டு வந்து, துணியால் அதை மூடி வைத்திருக்கிறார்கள், தன் மகனுக்குத் தன் கையாலேயே ஊட்டி விடுவதற்காக.
நான் வேகமாக உள்ளே போய், அந்தப் பையனைப் பார்த்து, “உன்னைப் பெற்ற தாயார் வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உள்ளே கூப்பிட்டு உட்கார வையப்பா” என்றேன்.
அவர் கோபமாக, “அவுங்களுக்கு எப்பவும் இதே வேலையாய்ப் போச்சு. வராதே வராதேன்னா எதுக்காக வர்ராக?” என்று கூறிவிட்டு, கணக்குப் பிள்ளையை அழைத்து, “இந்தா, ஆத்தா வந்திருக்காளாம், ஒரு இருநூறு ரூபாய் கொடுத்து, இனிமே இந்தப் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லு” என்றார்.
“அதை நீயே கூப்பிட்டுச் சொல்லேன்” என்றேன் நான்.
அவர் மறுத்துவிட்டார், மனைவிக்குப் பயந்து.
கணக்குப்பிள்ளை அந்தப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்ததும் அந்த அம்மையார்.
“அப்பச்சி! தம்பி! ஐயா! ஒருதரமாவது பார்த்துட்டுப் போயிடுறேன்!” என்று சத்தம் போட்டார்கள்.
அந்தக் குரல் அந்தப் பாவியின் காதில் விழவில்லை. விளைவு என்ன தெரியுமா?
தாயின் குரலைக் கேட்காத அந்தக் காதுகள், வேறு எந்தக் குரலையும் கேட்க முடியாதபடி, `டமாரச்’ செவிடாகி விட்டன.
மனைவி மயக்கத்தில் மாதாவை மறந்தவன் கதி என்ன என்பதைப் புராணங்களைப் படித்து நீ நம்பவில்லையானால், உன் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பார். இப்படியொரு சம்பவம் அங்கேயும் நடந்திருக்கும்.
தாய் தகப்பனுக்குச் செய்யும் பாவம் உன் தலையைச் சுற்றி அடிக்கும்.
ஆயிரம் மனைவிமார்களை விலைக்கு வாங்கலாம்; அன்னையும் பிதாவும் மறுபடி வரமுடியாது.
இந்துக்கள் சொன்ன தத்துவம் வேடிக்கைக் கதையல்ல.
`யாருக்கு நீ பாவம் செய்தாலும் அதற்குத் தண்டனை உண்டு’ என்பது அழிக்க முடியாத உண்மை.
இத்தகைய நிகழ்ச்சிகளை நான் விவரித்துக் கொண்டே போகலாம்.
எவ்வளவோ பாவிகள் தங்கள் வாழ்நாளிலே தண்டிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.
`பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனை’ என்பது, எவ்வளவு உண்மை!
இறைவன் தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை இந்துக்கள் சொன்னது போல் வேறு யார் சொன்னார்கள்?
இறைவா, இந்து சமூகம் உன்னையும் உன் ராஜாங்கத்தையும் சரியாக அளந்து வைத்திருப்பதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன்.
சொந்த நிகழ்ச்சிகளில் இந்த அனுபவத்தைக் காணாதவரை, ஞானமார்க்க உபதேசிகளை நான் கேலி செய்ததுண்டு.
ஒவ்வொரு படிக்கட்டிலும், ஒவ்வொரு உண்மையைக் காணக் காண, நமது ஞானிகள் `அறிவுலகத்தின் சுடரொளிகள்’ என்றுதான் நான் நம்புகிறேன்.
இசையின் சுவையைப் பாடல் அதிகப்படுத்துவது போல், தத்துவத்தின் உண்மையைச் சம்பவங்களே உறுதி செய்கின்றன.
`இந்து மகாசமுத்திரம்’ என்ற பெயர், இந்துமதத்துக்கே பொருந்தும்.
`பாவமும் குற்றமும் செய்துவிட்டுத் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?’

No comments:

Post a Comment