Monday, February 14, 2011

சாக்கியநாயனார்

சாக்கியநாயனார் புராணம்


சங்கமங்கை வரும்வேளாண் தலைவர் காஞ்சிச்
சாக்கியரோ டியைந்தவர்தந் தவறுஞ் சைவத்
துங்கமலி பொருளுமுணர்ந்து அந்த வேடம்
துறவாதே சிவலிங்கந் தொழுவோர் கண்டோர்
அங்கல் மலர் திருமேனி அழுந்தச் சாத்தி
அமருநாள் மறந்தொருநாள் அருந்தா தோடிச்
செங்கலெறிந் திடுமளவில் மகிழ்ந்த நாதன்
திருவருளால் அமருலகஞ் சேர்ந்து ளாரே.

திருச்சங்கமங்கையிலே, வேளாளர் குலத்திலே உதித்த ஒருவர் சனனமரணத் துன்பங்களை நினைந்து நினைந்து கவலை கொண்டு அவைகளினின்று நீங்கு நெறி யாது என்று ஆராய்வாராயினார். அந்நாளிலே காஞ்சீபுரத்தை அடைந்து, பெளத்தர்களை அணுகி, அவர்கள் அநுட்டிக்கும் பெளத்த சமயத்திலே பிரவேசித்து, அச்சமய நூல்களை ஓதி, அவற்றின் பொருள்களை ஆராய்ந்தார். ஆராய்ந்தபொழுது, அச்சமயம் சற்சமயன்றென்பது அவருக்குத் தெள்ளிதிற் புலப்பட்டது அதுபோல மற்றைச் சமயநூல்களையும் ஆராய்ந்து அவைகளும் மெய்யல்லவெனத் தெளிந்து, பரமசிவனது திருவருள்கூடுதலால், அறிவிக்க அறியும்சித்தாகிய ஆன்மாக்களும் அவ்வான்மாக்களினாலே செய்யப்படுஞ்சடமாகிய புண்ணியம் பாவம் என்னும் கர்மங்களும் அக்கர்மங்களாலே பெறப்படுஞ் சுகம் துக்கம் என்னும் பலங்களும் அப்பலங்களைக் கொடுக்கின்ற தானே அறியுஞ் சித்தாகிய பதியும் எனப் பொருள்கள் நான்கு என்றும், அவைகளைப் பூர்வோத்தர விரோதமின்றி யதார்த்தமாக உணர்ந்தும் நூல் சைவ சமய நூலே என்றும், அந்நூல் உணர்த்தும் பதி பரமசிவனே என்றும் அறிந்துகொண்டார். எந்த நிலையிலே நின்றாலும் எந்த வேஷத்தை எடுத்தாலும் பரமசிவனுடைய திருவடிகளை மறவாமையே பொருள் என்று கருதி, தாம் எடுத்த பெளத்த வேஷத்தை துறவாமல், பரமசிவனை மிகுந்த அன்பினோடு இடைவிடாது தியானஞ்செய்வாராயினார்.
சிவசாதாக்கியம், அமுர்த்திசாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திருசாதாக்கியம், கர்மசாதாக்கியம், என்னும் பஞ்சசாதாக்கியங்களுள், கர்மசாதாக்கியமாகிய சிவலிங்கத்தின் மகிமையை உணர்ந்து, தினந்தோறும் சிவலிங்க தரிசனஞ் செய்து கொண்டே போசனம்பண்ணல் வேண்டும் என்று விரும்பி, சமீபத்தில் ஓர் வெள்ளிடையிலிருக்கின்ற சிவலிங்கத்தைத் தரிசித்து, பேரானந்தம் உள்ளவராகி, தாஞ்செய்யுஞ் செயல் இதுவென அறியாது, அருகிலே கிடந்த ஒரு செங்கல்லைக் கண்டு, அதைப் பதைப்பினுடனே எடுத்து, அச்சிவலிங்கத்தின்மேல் எறிந்தார். சிறுபிள்ளைகள் செய்யும் இகழ்வாகிய செய்கைகளும் தந்தையர்களுக்குப் பிரீதியாமாறுபோல, அந்தச்சாக்ய நாயனாருடைய செய்கையும் பரமசிவனுக்குப் பிரீதியாயிற்று. அந்நாயனார் அன்று போய் மற்றை நாள் அந்நியமத்தை, முடித்தற்கு அணைந்த பொழுது, முதனாளிலே தாஞ்சிவலிங்கத்தின்மேற் கல்லெறிந்த குறிப்பை நின்று ஆலோசித்து, "நேற்று எனக்கு இவ்வெண்ணம் வந்தது பரமசிவனது திருவருளே" என்று துணிந்து, அதனையே திருத்தொண்டாக நினைத்து, எப்பொழுதும் அப்படியே செய்யக்கருதினார். எல்லாச் செயல்களும் சிவன் செயல் என்றே தெளிந்தமையால் அந்நியதியைத் தினந்தோறும் வழுவாமல் அன்பினுடன் செய்ய; அது ஆன்மாக்கடோறும் வியாபித்திருந்து எல்லாவற்றையும் உணருஞ் சிவபெருமானுக்கு மிகச் சிறந்த திருத்தொண்டாகி முடிந்தது. ஒருநாள் அந்நாயனார் திருவருளினாலே மறந்து போசனஞ்செய்யப் புகும்பொழுது, இன்றைக்கு எம்பெருமானை அறியாமல் மறந்துவிட்டேன்" என்று எழுந்து, அத்தியந்த ஆசையுடன் மிகவிரைந்து புறப்பட்டு, சிவலிங்கத்தை அணைந்து, ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிய; பத்திவலையிற்படுவாராகிய பரமசிவன் உமாதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றி, அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார்.





No comments:

Post a Comment