Monday, February 14, 2011

கலிகம்பநாயனார் புராணம்

கலிகம்பநாயனார் புராணம்

கடவுளருட் கண்ணார்கள் பயிலுந் தொல்லைக்
கடந்தைநகர் வணிகர்கலிக் கம்ப ரன்பர்க்
கடிமையுற வமுதளிபா ரடியா னீங்கி
யருளுருவா யன்பருட னணைய வேத்தி
யிடையிலவ ரடியிணையும் விளக்கா நிற்ப
விகழ்மனைவி கரகமலி யிரண்டு கையும்
படியில்விழ வெறிந்தவள்செய் பணியுந் தாமே
பரிந்து புரித் தரனருளே பற்றி னாரே.

நடுநாட்டிலே, திருப்பெண்ணாகடத்திலே, வைசிய குலத்திலே, கலிக்கம்பநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத் திருப்பதியில் உள்ள திருத்தூங்கானை மாடமென்னுந் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்பவர்; சிவலிங்கத்தை வழிபடினும் சிவனடியார்களை வழிபடாதொழியின் அவ்வழிபாடு சிறிதும் பயன்படாது என்று சிவாகமஞ் செப்புதலால், தினந்தோறும் சிவனடியார்களைப் பேராசையோடு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் கொடுப்பார்.
இப்படி யொழுகுநாளிலே, ஒருநாள் தமது வீட்டிலே திருவமுது செய்யவந்த சிவனடியார்களெல்லாரையும் பழைய முறைப்படி திருவமுதுசெய்யத் தொடங்குவித்தற்கு, அவர்களை முன்பு அழைத்து, தமது மனைவியார் கரகநீர் வார்க்க அவர்களுடைய திருவடிகளை விளக்கும்பொழுது, முன்பு தமக்குப் பணிவிடைக்காரராய் இருந்து பணிவிடையை வெறுத்துச் சென்ற ஒருவர் சிவவேடந் தாங்கிவர அவருடைய திருவடிகளையும் விளக்கப்புகுந்தார். மனைவியார் 'இவர் எங்களிடத்திலே பணிவிடைக்காரராய் இருந்து போனவர் போலும்" என்று சிந்தித்தலால் கரகநீர் வார்க்கத் தாழ்க்க; கலிக்கம்பநாயனார் அதுகண்டு, "இவள் இந்தச் சிவனடியாருடைய முந்திய நிலையைக் குறித்து வெள்கி நீர் வாரா தொழிந்தாள்" என்று துணிந்து, வாளை எடுத்து, அம்மனைவியார்கையிற் கரகத்தை வாங்கி வைத்து விட்டு, அக்கையைத் தறித்து, அக்கரக நீரை எடுத்து; தாமே அவருடைய திருவடிகளை விளக்கி, அத்தியந்த ஆசையோடு தாமே வேண்டுவனவெல்லாஞ் செய்து, அவ்வடியார்களைத் திருவமுது செய்வித்தார். அந்நாயனார் பின்னுஞ் சிலகாலந் திருத்தொண்டின் வழிநின்று சிவபதத்தை அடைந்தார்.







No comments:

Post a Comment