Saturday, February 12, 2011

முதுமை, இறப்புகளைத் தடுப்பது எப்படி?

முதுமை, இறப்புகளைத் தடுப்பது எப்படி?


முதுமை,இறப்புகளைத் தடுப்பது எப்படி? என தருமர் வினவ பீஷ்மர் சொல்கிறார்
இத்தகைய வினாவை ஜனகர், பஞ்சசிகர் என்னும் முனிவரிடம் ஒரு சமயம் வினவினார்.அதற்கு அம்முனிவர் 'மூப்பையும், மரணத்தையும் யாராலும் தடுக்க இயலாது.எந்த உயிரினமும் இவற்றிலிருந்து தப்ப முடியாது.சென்ற பகல்களும்,இரவுகளும், வாரங்களும்,மாதங்களும், ஆண்டுகளும் திரும்பி வருவதில்லை.நிலையில்லாத காலம் எல்லாவற்றையும் நிலையில்லாததாகச் செய்து விடுகிறது.உயிரினங்கள் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுவது போலக் காலமானது எல்லாவற்றையும் அழித்துவிடுகிறது.
கல்லும், மண்ணும்,மரமும் கூடக் காலப்போக்கில் தம் தன்மையை இழந்து விடுகின்றன.காலமாகிய வெள்ளத்தினின்று யாரும் தப்பிக் கரையேற முடியாது.அழிவைச் சந்தித்தே ஆக வேண்டும்.மனைவியோடும்,மக்களோடும்,உறவினரோடும் உண்டான தொடர்பு ஏதோ வழிப்போக்கரிடம் ஏற்படும் தொடர்பு போன்றது.இத் தொடர்பு பிறவிதோறும் இதே உறவு முறைகளோடு தொடர்வதில்லை.உயிர் எந்த நாட்டிலோ,எந்தக் காட்டிலோ,எந்த நதியிலோ ,எந்த மலையிலோ எத்தகைய பிறவி எடுக்கும் என யாராலும் கூற முடியாது.
கர்மவினைக்கேற்பக் காலம் உயிர்களை பல்வேறு இடங்களில் பல்வேறு பிறப்புகளில் தள்ளிவிடுகிறது.அவற்றின் ஆயுள் முடியும் காலத்தில் மரணம் அவற்றை அழித்துவிடுகிறது.மூப்பும்,மரணமும் செந்நாய்களைப் போல வலிமையுள்ளவற்றையும்,சிறியனவும் பெரியனவுமான எல்லாவகை உயிர்களையும் விழுங்கி விடுகின்றன.எந்த நேரத்திலும் மரணம் என்பது உறுதி.உயிரினங்களின் வாழ்க்கைத் தன்மை இவ்வாறு இருக்கும் போது பிறப்புக்காக மகிழ்ச்சியடைவதும்,இறப்புக்காக வருந்துவதும் ஏன்?
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தோர்..வாழ்க்கை இனிது என மகிழவும் மாட்டார்கள்.துன்பமானது என இகழவும் மாட்டார்கள்.உண்மைநிலை இப்படி இருக்க நீ ஏன் மனவருத்தம் கொள்கிறாய்? நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்?எங்கே செல்லப் போகிறேன்? என்று ஏன் ஏக்கம் கொள்கிறாய்?சுவர்க்கத்தை கண்டவர் யார்?நரகத்தைக் கண்டவர் யார்? அப்படி அவற்றைப் பார்த்தவர்களை நாம் பார்த்ததில்லை.எனவே, வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நல்ல கதி கிடைக்க வேண்டுமாயின் தான தருமங்களை செய்வாயாக' என பஞ்சசிகர் ஜனகரிடம் கூறினார்." என்று பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.

No comments:

Post a Comment