Sunday, February 6, 2011

கலிய நாயனார்

விளக்கேற்றினால் புண்ணியம் -ஒரு எண்ணெய் விளக்கு கூட இல்லாத பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. நம் முன்னோர் நமக்குத் தந்த கலைப் பொக்கிஷங்களை, கடவுள் வாழும் இல்லங்களை, இவ்வாறு வைத்திருப்பது பெரும் பாவம். கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்ன நம் முன்னோர், கோவில்கள் இருண்டு கிடப்பதை இன்னும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். சென்னையில் வசித்த கலியர் எனும் சிவபக்தரின் வாழ்க்கை வரலாறைக் கேளுங்கள்…
சென்னை திருவொற்றியூரில் பிறந்தவர் கலியர். இவர் மிகச்சிறந்த சிவபக்தர். எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். பெரும் செல்வந்தராக இருந்த இவர், தன் வருமானத்தின் பெரும்பகுதியை தன் ஊரில் இருந்த படம்பக்கநாதர் கோவில் திருப்பணிக்கு செலவிட்டு வந்தார். மிக முக்கியமாக, எந்தச் சன்னதியிலும் விளக்கு எரியாமல் இருந்ததில்லை. பகலும், இரவும் அணையாத தீபங்களை ஏற்றி வந்தார். எண்ணெய் வாங்கவே பெரும் பணம் செலவாயிற்று.
பக்தனைச் சோதித்துப் பார்ப்பது பரமனுக்கு விளையாட்டான வேலை. தன் பக்தனிடம் செல்வம் கொட்டிக்கிடப்பதால் தானே, தனக்கு தினமும் விளக்கேற்றுகிறான். அவனுக்கு வறுமையைக் கொடுத்துப் பார்ப்போமே என, முடிவெடுத்தார் சிவபெருமான். காலப்போக்கில், கலியர் செய்து வந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. எண்ணெய் உற்பத்தி குறைந்ததால், வாடிக்கையாளர்களுக்கே போதுமான அளவு கொடுக்க முடியவில்லை. கிடைத்த எண்ணெய் கோவிலுக்கே போதுமானதாக இருந்தது. அரை வயிறு சாப்பிட்டு, சிவத்தொண்டை தொடர்ந்தார் அவர்.
அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் சிவபெருமான். சொட்டு எண்ணெய் கூட வராத அளவுக்கு செக்குகளை எல்லாம் விற்கிற நிலைமைக்கு, கலியரைக் கொண்டு வந்தார். எல்லாவற்றையும் இழந்தாலும், கலியர் மனம் கலங்கவில்லை. சற்றும் கவுரவம் பாராமல், இன்னொரு எண்ணெய் வியாபாரியிடம் கூலி வேலைக்குச் சென்றார். செக்கில் எண்ணெய் எடுக்கும் பணியைச் செய்தார். அதில் கிடைத்த கூலியைக் கொண்டு, எண்ணெய் வாங்கி, கோவிலுக்கு கொடுத்தார். மீதியைக் கொண்டு, தன் மனைவியுடன் வாழ்க்கையை ஓட்டினார். இப்போதும் விடவில்லை சிவபெருமான். ஒருநாள், அந்த கூலி வேலையும் இல்லாமல் போயிற்று. கலியருக்கு மிகுந்த மனவருத்தம். மனைவியுடன் கோவிலுக்குச் சென்றார். “இன்றுமுதல் கோவிலுக்கு எண்ணெய் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதோ… என் ரத்தத்தை எண்ணெயாக ஏற்றுக்கொள்…’ என்று, கத்தியை எடுத்து கழுத்தில் வைக்கவும், சிவபெருமானும், பார்வதிதேவியும் அவர் முன் தோன்றி தடுத்தனர். அவரது பக்தியைப் பாராட்டினர். முன்பையும் விட நிறைந்த செல்வத்தைக் கொடுத்தனர். அந்த பக்த தம்பதியர் தொடர்ந்து தீபமேற்றி வழிபட்டனர். இன்றும் பல கோவில்களில் இந்த நிலைமை இருக்கிறது. உங்கள் ஊர் கோவில்கள் நிறைந்த ஒளியுடன் இருக்க வேண்டும். அதற்கு ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, கோவிலுக்கு தாராளமாக எண்ணெய், மின்விளக்குகள் கொடுக்க வேண்டும். நம் கோவில்கள் ஒளிவெள்ளத்தில் மிதக்க வேண்டும். கோவில்களுக்கு தடையற்ற மின்சாரம் தர, அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும். கலியரின் குருபூஜை நன்னாளில் இவற்றைத் துவங்குவோமா

No comments:

Post a Comment