Sunday, February 27, 2011

புதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன?

புதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன?

முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து மூவர்கள், அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு, சக்தி என அத்தனை தெய்வங்களும் குடிகொண்டிருக்கும் ஜீவராசி பசு. அதனால்தான் பசுவை குருவின் அம்சம் என்று சொல்வார்கள். பிரகஸ்பதி, குரு மாறுகிறாரே அதனுடைய அம்சம் பசு. பசுவின் கொம்பில் இருந்து, கண் இமையிலிருந்து, வாய் நுனி வரைக்கும் அத்தனையிலும் தேவர்களும், மூவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
பசுவின் பின் பக்கத்தில் லட்சுமி தேவதை குடியிருக்கிறார். அதனால் பசுவை பின் பக்கத்தில் தொட்டுக் கும்பிடுவார்கள். லட்சுமி கடாட்சம் உண்டாகட்டும் என்பதற்காக. காரணம், பசு தனக்கென்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. பசுஞ்சாணம், பசுங்கோமியம் அத்தனையும் அறிவியல்பூர்வமாக பார்க்கும் போது கிருமி நாசினியாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நல்ல பசும்பால் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு சமமாக உள்ளது. குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு சிறந்த உணவாகவும் அது அமைகிறது.
அதனால்தான் பசுவை வீட்டிற்குள் அழைத்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களில் இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில் இருந்து அத்தனை பேரும் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவை அழைத்து வரும் போது அந்த வீட்டில் கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோ அவர்களுக்கு இன்னமும் அதிர்ஷ்டம் என்றும் நம்பப்படுகிறது.
தரையில் பசுஞ்சாணத்தை தெளித்து மெழுகி கோலம் போட்டு வந்தால், அந்த பசுஞ்சாணம் தெளித்த இடத்தில் ஒரு செழிப்பு தெரியும். அதனால்தான் முக்கியமான நிகழ்ச்சிகளிலெல்லாம் பசுஞ்சாணத்தை தெளித்து, மெழுகி செய்வார்கள். இன்னும் சிலர் பசுஞ்சாணத்தை உருட்டி அதன் மீது விளக்கேற்றுவார்கள். பிள்ளையாரையும் பசுஞ்சாணத்தால் பிடித்து அதன் மீது அருகம்புல் செருகி மந்திரங்களை சொல்லும் போது உடனடியாக நமக்கு எல்லா பலன்களும் கிடைக்கும்.
இதுபோல பசுவினுடைய அத்தனையும் நமக்கு எல்லா வகையிலும், எல்லா விதத்திலும் பயன்படுகிறது. பசுவிற்கு பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எல்லா தோஷத்தையும் நீக்கக் கூடிய சக்தி உண்டு. இந்த மாதிரியான தெய்வ அமைப்பு பசுவிற்கு மட்டும் அமைந்துள்ளது. தற்பொழுது இவர்கள் ஜெர்சி பசுவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லை. நம்ம நாட்டுப் பசு, அதற்கும் முன்பாக பார்த்தால் காராம்பசு.
என்னுடைய தாத்தா காலத்திலெல்லாம் காராம் பசுக்கள் நிறைய இருந்தது. காராம்பசுவினுடைய காம்புகளைப் பார்த்தால் சிறியதாக இருக்கும். ஆனால் கறக்க கறக்க பால் வரும். அந்தப் பால் பணங்கற்கண்டு பால் போன்று இருக்கும். அப்படியே குடிக்கலாம். அதற்கடுத்து, அதற்கு சில தெய்வீக அமைப்பெல்லாம் உண்டு.
அதாவது, புல் பூண்டுகளைக் கூட தேர்ந்தெடுத்துதான் மேயும். நாட்டுப் பசுவிற்கும், காராம்பசுவிற்குமே அதிக வித்தியாசம் உண்டு. நாட்டுப் பசு எல்லா புற்களையுமே மேயும், ஆனால் காராம் பசு சில வகையானப் புற்கள், சில வகையான இலைகள் மட்டும்தான் சாப்பிடும். மிகவும் சென்சிடிவானது. கோபத்துடன் தொட்டால் கூட சாப்பிடாது.
இந்த மாதிரியான தெய்வ லோக, தெய்வத் தன்மையுடைய பசுவெல்லாம் .

பசு எ‌ன்பது ‌விரு‌த்‌தி‌யி‌ன் ‌அ‌ம்ச‌ம்!

புதுமனை புகுவிழாவிற்கு பசுவை கொண்டு வருவது பற்றி ஒரு வாசக‌ர் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், அயல்நாடுகளில் எத்தனையோ மாடிக் கட்டடம் கட்டுகிறார்கள். அவர்களெல்லாம் பசு மாட்டை ஒன்றும் கூப்பிட்டுச் செல்வதில்லை. ஆனால் அந்தக் கட்டடங்கள் உறுதியாக இருக்கின்றனவே என்று கேட்டிருக்கிறார்.
கட்டடம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பசுவை கொண்டு செல்வது கிடையாது. விருத்தி அம்சத்திற்காகத்தான் பசுவை நாம் கொண்டு செல்கிறோம். இந்தக் கட்டடம் 200 வருடம் இருந்தது, 300 வருடம் இருந்தது என்பது முக்கியம் கிடையாது. இப்பவும், சில இடங்களுக்கு, சில வீடுகளுக்கு இந்த வீட்டிற்கு வந்தோம், 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. தற்பொழுது குழந்தை பிறந்திருக்கிறது. அது அந்த வீட்டின் ராசி என்றெல்லாம் சொல்கிறார்கள். சிலரெல்லாம் வீடு கட்டி கோலாகலமாக கிரகப் பிரவேசம் செய்து குடியேறுகிறார்கள். ஆனால் அங்கு சென்ற பிறகு ஒவ்வொன்றாக இழக்கிறார்கள். சிலர் ஒவ்வொன்றாய் பெறுகிறார்கள். பசு என்பது விருத்தி அம்சத்திற்குரிய ஜீவராசி. அது காலடி எடுத்து வைத்தால் விருத்தி வரும். நிறைய பணம் வைத்திருப்பார்கள். ஆனால் நோயாளியாக இருப்பார்கள். பசுவை கொண்டு செல்வது சாந்தம், சாத்வீகம், செளபாக்கியம் என எல்லா அம்சங்களும் வரவேண்டும் என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதி என அனைத்து செளபாக்கியமும் பெறவேண்டும் என்ற காரணத்தினால்தான் பசுவை கொண்டு செல்கிறோம்.

இந்திய மண் என்பது பரிகார பூமி. இன்றைக்கும் சொல்கிறார்கள், தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமா? சீனாவிற்குப் போ, படிப்பு சம்பந்தப்பட்டதற்கு அமெரிக்காவிற்குப் போ, ஆன்மீகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? இந்தியா போ என்று ஆன்மீகத்திற்கு இனம்காட்டக் கூடிய நாடாகத்தான் இந்த நாடு இருக்கிறது. அப்படிப்பட்ட இந்த நாட்டில் பசுவினுடைய பங்களிப்பு என்பது மிக அதிகம்.
எனக்குத் தெரிந்த வேற்று மத சாமியார் ஒருவர், எங்களுடைய வழக்கப்படி பசுவை வைத்தெல்லாம் செய்ய முடியாது. ஆனால் எனக்குப் பசு மீது பெரிய நம்பிக்கை உண்டு. அதை நான் யதார்த்தமாகவும் பார்த்திருக்கிறேன். ஒரு வேலையாகப் கிளம்பும் போது எதிராக பசு வந்தால் அது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அன்றைக்கு அது முடிந்துவிடும். ஆனால் எங்களுடைய மதத்தவர்களிடம் சொன்னால், என்னை மதத்தை விட்டே தள்ளி வைத்துவிடுவார்கள். அதனால், இப்பொழுது கிரகப் பிரவேசம் செய்யலாம் என்று இருக்கிறேன். பசுவை வரவழைத்தால் என்னை ஒதுக்கியே வைத்துவிடுவார்கள். வேறு எதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். பசு மடத்தில் பசு 10, 15 வருடமாக படுத்திருந்த ஒரு கல், பெரிய பாறையை எப்படியாவது கேட்டு வாங்கித் தருகிறேன். அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் ஒருவரிடத்தில் கேட்டு வாங்கி கொண்டு சென்று அதை வைத்துக்கொண்டு சிலவற்றை செய்து கொண்டிருக்கிறார். இப்படி பல சொல்ல முடியாத விஷயங்களெல்லாம் கூட, நம்பிக்கையே இல்லாதவர்கள் கூட சிலவற்றைப் பார்த்துவிட்டு இதுமாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கேட்கிறார்கள்.
அதனால், பசு என்பது விருத்தி அம்சத்திற்கான அடையாளம். முழுமை, ஒரு பசு ஒரு வீட்டில் காலடி வைக்கிறதென்றால் ஒரு முழுமை பெறுகிறது. அங்கு ஒரு ஜீவ சக்தி உருவாகிறது. தானாக பசு வருவதும். வந்த இடத்தில் பசு தானாக கோமியம் இடுவது என்பதும், சாணமிடுவது என்பதும் பெரிய விஷயம். ஆனால், தற்பொழுது அதை வரவழைக்கிறோம். விருப்போ, வெறுப்போ ஏதாவது ஒரு வகையில் பசு வந்துவிட்டாவது செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கிரகப் பிரவேசத்தில் அதுபோல செய்கிறோம். உண்டு. அதனால் பசு வீட்டிற்குள் வந்துவிட்டுச் செல்வது என்பது நல்லது.

No comments:

Post a Comment