Monday, February 14, 2011

கலியநாயனார்

கலியநாயனார் புராணம்


தடமதில்சூ ழொற்றியூர் நகருள் வாழுஞ்
சக்கரப்பா டியர்குலமெய்த தவமா யுள்ளார்
படர்புகழார் கலியனார் நலியுங் கூற்றைப்
பாய்ந்தவர்க்கு விளக்கெரிக்கும் பரிவான் மற்றோ
ருடலிலராய்ச் செக்குழல்வார்க் கதுவு நேரா
துயர்மனைவி யைக்கொள்வா ருளரு மின்றி
மிடறுதிர மகனிறைய வரிய நாதன்
வியன்கைகொடு பிடிப்பவருண் மேவி னாரே.

தொண்டைமண்டலத்திலே, திருவொற்றியூரிலேயுள்ள சக்கரப்பாடியிலே, செக்கார் குலத்திலே, கலியநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருஞ்செல்வராகி செல்வநிலையாமையையும் யாக்கை நிலைமையையும் உணர்ந்து, சிவபுண்ணியஞ் செய்தல்வேண்டும் எனத் தெளிந்து, அந்தத் திருப்பதியில் உள்ள சிவாலயத்தின் உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் எண்ணிறந்த திருவிளக்கு ஏற்றுவாராயினார்.
பரமசிவன் நெடுங்காலம் இத்திருத்தொண்டைச் செய்துவரும் அவ்வடியாருடைய பத்திவலிமையைப் பிறர்க்குப் புலப்படுத்தும் பொருட்டு, அவரிடத்து உள்ள செல்வமெல்லாங் குன்றும்படி அருள்செய்தார். அவர் தாம் வறுமையெய்தியும் தமது மரபில் உள்ளோர் தரும் எண்ணெயை வாங்கிக் கூறிவிற்றுக் கொணர்ந்து, கூலி பெற்று, தாஞ்செய்யுந் திருத்தொண்டை வழுவாது செய்தார். சில நாளாயினபின் அவர்கள் கொடாதொழிய; அவர் மனந்தளர்ந்து, எண்ணெயாட்டும் இடத்திற்சென்று, தொழில் செய்து கூலி வாங்கி, திருவிளக்கிட்டார். பின்பு அத்தொழில் செய்வோர்கள் பலராய்ப் பெருகினமையால், அத்தொழிலால் வரும் பேறுங் கிடையாதுமுட்ட; ஒருநாள் கவலைகொண்டு, தம்முடைய மனைவியாரை விற்பதற்கு நகரெங்குங்கூறி, வாங்குவார் இன்மையால் மனந்தளர்ந்து, ஆலயத்தை அடைந்து, திருவிளக்கேற்றுஞ் சமயத்திலே, "திருவிளக்குப்பணி மாறில் நான் இறந்துவிடுவேன்" என்று துணிவுகொண்டு, திரியிட்ட அகல்களைப் பரப்பி, எண்ணெய்க்குப் பிரதியாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே கழுத்தை அரிந்தார். அப்பொழுது கிருபாசமுத்திரமாகிய பரமசிவன் நேர்வந்து அவருடைய கையைப் பிடித்து, அவருக்குமுன் இடபாரூடராய்த் தோன்றியருள; அவர் தாம் உற்ற ஊறுநீங்கி, சிரசின்மேல் அஞ்சலி செய்துகொண்டு நின்றார். சிவபெருமான் அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார்.







No comments:

Post a Comment