Monday, February 14, 2011

நமிநந்தியடிகணாயனார்

நமிநந்தியடிகணாயனார் புராணம்


நண்ணுபுகழ் மறையோர்வா ழேமப் பேறூர்
நமிநந்தி யடிகடிரு விளக்கு நல்க
வெண்ணெயம ணர்கள் விலக்க நீரா லாரு
ரிலங்குமா னெறியாருக் கேற்று நாளிற்

கண்ணமணர் கெடக்கண்பெற் றடிகள் வாழக்
காவலனா னிபந்தங்கள் கட்டு வித்தே
யண்ணலருள் காண்டாரு ரமர்ந்து தொண்டர்க்
காணியெனு மரசினரு ளடைந்து ளாரே.

சோழமண்டலத்திலே, ஏமப்பேறூரிலே, பிராமண குலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளை மிகுந்த அன்போடும் ஒழியாதே அகோராத்திரம் வழிபடுதலே இன்பமெனக் கொண்ட நமீநந்தியடிகள் என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் பலநாளுந் திருவாரூருக்குப் போய் வன்மீகநாதரை வணங்கினார். ஒருநாள் வணங்கிக் கொண்டு, புறப்பட்டுத் திருமுன்றிலை அடைந்து பக்கத்தில் இருக்கின்ற அரநெறி என்னும் ஆலயத்துட்புகுந்து, சுவாமியை நமஸ்கரித்து, அங்கே செய்யவேண்டிய பலதொண்டுகளைச் செய்து, இரவிலே அங்கே எண்ணில்லாத தீபமேற்றுதற்கு விரும்பி எழுந்தார். எழுந்தபொழுது செல்லும் என்று நினைந்து, சமீபத்திலே ஓர் வீட்டில், அது சமணர்வீடென்று அறியாமையினாலே புகுந்து, "சிவாலயத்தில் விளக்கேற்றுதற்கு நெய் தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள் "கையிலே சுவாலிக்கின்ற அக்கினியையுடைய பரமசிவனுக்கு விளக்கு மிகையன்றோ இங்கே நெய்யில்லை, விளக்கெரிப்பீராகில் நீரை முகந்து எரியும்" என்றார்கள். நமிநந்தியடிகணாயனார் அந்தச் சொல்லைப் பொறாதவராகி, அப்பொழுதே மிகுந்த மனவருத்தத்தோடும் திரும்பிப்போய், சுவாமி சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்தார். அப்பொழுது ஆகாயத்திலே "நமிநந்தியே! நீ உன்னுடைய கவலையை நீக்கு, இதற்குச் சமீபத்தில் இருக்கின்ற குளத்தில் நீரை முகந்து கொண்டு வந்து விளக்கேற்று" என்று ஒரு அசரீரிவாக்குத் தோன்றிற்று, நமிநந்தியடிகணாயனார் அதைக்கேட்டு, மனமகிழ்ந்து திருவருளை வியந்துகொண்டு எழுந்துபோய், குளத்தில் இறங்கி, சிவநாமத்தை உச்சரித்து, நீரை முகந்துகொண்டு, திருக்கோயிலிலே வந்து அகலிலே முறுக்கிய திரியின்மேலே அந்நீரைவார்த்து, விளக்கேற்றினார். அது சுடர்விட்டெழுந்தது. அது கண்டுஅவ்வாலயம் முழுதிலும் சமணர்களெதிரே மிகுந்த களிப்புடனே நாடறிய நீரினாலே திருவிளக்கெரித்தார். திருவிளக்கு விடியுமளவும் நின்று எரியும்படி குறைகின்ற தகழிகளுக்கெல்லாம் நீர் வார்த்து, இரவிலே தானே தம்முடைய ஊருக்குப்போய், சிவார்ச்சனைப்பண்ணி, திருவமுது செய்து நித்திரைகொள்வார். உதயகாலத்திலே பூசையை முடித்துக் கொண்டு, திருவாரூரை அடைந்து, அரநெறி என்னும் ஆலயத்திற்சென்று, சுவாமிதரிசனம்பண்ணி, பகன்முழுதினும் திருத்தொண்டுகள் செய்து, இரவிலே எங்கும் விளக்கேற்றுவார்.
இப்படி நிகழுங்காலத்திலே, தண்டியடிகளாலே சமணர்கள் கலக்கம் விளைந்து நாசமடைய; திருவாரூர் பெருமையடைந்து விளங்கியது. சோழமகாராஜா, நமிநந்தியடிகணாயனாரே அத்தியக்ஷராக, வன்மீகநாதருக்கு வேண்Dஉம் நிபந்தங்கள் பலவற்றையும் வேதாகமவிதி விளங்க அமைத்தார். நமிநந்தியடிகள் வீதிவிடங்கப் பெருமாளுக்குப் பங்குனி மாசத்திலே மகோற்சவம் நடத்துவித்தார். நடத்துவிக்கும் பொழுது, சுவாமி ஒருநாள் திருமணலிக்கு எழுந்தருள; சகல சாதியார்களும் ஒருங்கு சேவித்துப்போனார்கள். நமிநந்தியடிகணாயனாரும் சேவித்துப் போய், அங்கே சுவாமியுடைய திருவோலக்கத்தைக் கண்டு களிப்படைந்தார். பொழுதுபட, சுவாமி திரும்பித் திருக்கோயிலிலே புக, நமிநந்தியடிகள் வணங்கிக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, வீட்டினுள்ளே புகாமல், புறக்கடையிலே படுக்க, மனைவியார் வந்து, "உள்ளே எழுந்தருளிச் சிவார்ச்சனையையும் அக்கினிகாரியத்தையும் முடித்துக் கொண்டு பள்ளிகொள்ளும்" என்றார். நமிநந்தியடிகள் "இன்றைக்குச் சுவாமி திருமணலிக்கு எழுந்தருளியபோது நானும் சேவித்துப்போனேன். சகல சாதியும் கலந்து வந்தபடியால், தீட்டுண்டாயிற்று. ஆதலால் ஸ்நானம் பண்ணிப் பிராயச்சித்தஞ்செய்து கொண்டே உள்ளே புகுந்து சிவார்ச்சனையைத் தொடங்கல்வேண்டும். அதற்கு நீ ஜலமுதலாயின கொண்டு வா" என்று சொல்ல; மனைவியாரும் கொண்டு வரும் பொருட்டு விரைந்து சென்றார். அப்பொழுது நமிநந்தியடிகணாயனார் சிறிதுறக்கம் வர, நித்திரை செய்தார். செய்யும் பொழுது, வீதிவிடங்கப்பெருமாள் அவருக்கு சொப்பனத்திலே தோன்றி, "திருவாரூரிலே பிறந்தவர்களெல்லாரும் நம்முடைய கணங்கள்; அதை நீ காண்பாய்" என்று சொல்லி மறைந்தருளினார். நமிநந்தியடிகணாயனார் விழித்தெழுந்து, தாம் நினைத்தது குற்றமென்றுகருதி, எழுந்தபடியே சிவார்ச்சனையை முடித்து, மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொல்லி, விடிந்தபின் திருவாரூருக்குப் போனார். போனபொழுது, அந்தத் திருப்பதியிலே பிறந்தவர்களெல்லாரும் சிவசாரூப்பியமுள்ளவர்களாய்ப் பிரகாசிக்கக் கண்டு, பூமியிலேவிழுந்து நமஸ்கரித்து, அவர்கள் அவ்வுருவம் நீங்கி முன்போலாயினமையையும்கண்டு, "அடியேன் செய்த குற்றத்தைப்பொறுத்தருளும்" என்று சுவாமியைப் பிரார்த்தித்தார்.
பின்பு திருவாரூரிலே தானே குடிபுகுந்து, தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். நெடுங்காலம் சிவனடியார்களுக்கு நியதியாக வேண்டுவன எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தமையால், தொண்டர்களுக்கு ஆணிப்பொன் என்று, திருநாவுக்கரசுநாயனாராலே, தேவாரப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார். இவர் இந்தப்பிரகாரம் சமஸ்தலோகங்களும் தொழும்படி திருப்பணிகளைச் செய்துக்கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.







No comments:

Post a Comment