Sunday, February 6, 2011

வாயில்லா ஜீவன்களுக்காக பிரார்த்தனை

வாயில்லா ஜீவன்களுக்காக பிரார்த்தனை
மனிதன் முதல் புழு, பூச்சி வரையில் உள்ள சகல ஜீவராசிகளும், ஏதோ ஒரு காரணமாக பிறக்க நேரிடுகிறது என்பர். அப்படி பிறவி எடுத்த ஜீவன்களில், மனிதர் மட்டுமே அறிவு பெற்றவர்களாகவுமிருந்து நற்கதியடையவே விரும்புவர்; இதர ஜீவன்களுக்கு, இப்படியொரு எண்ணம் ஏற்பட வழியில்லை. அதிக பாவம் செய்த இப்படிப்பட்ட ஜீவன்கள் கர்ம வினைப்படி, பல ஜென்மமெடுத்து வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமாம்.
ஏதோ அபூர்வமாக ஒரு சில ஜீவன்கள்… யானை, கோழி, சிலந்தி போன்றவை, ஏதோ ஒரு மகானின் அருள் பெற்றோ, புண்ணிய தீர்த்தங்களின் சம்பந்தத்தாலோ நற்கதி அடைந்ததாக புராணங்களிலும், சரித்திரங்களிலும் காண்கிறோம். இப்படிச் செய்தால் நமக்கு நற்கதி கிடைக்கும் என்று நம்பி, சில காரியங்களைச் செய்கிறோம்.
ஒரு மகான் இருந்தாராம். அவருக்கு ரொம்பவும் இளகிய மனசு. சிறு ஜீவன்களிடம் அன்பும், இரக்கமும் உள்ளவர். சாப்பிடும்போது எதிரில் எது வந்தாலும், அதற்கும் சிறிது போடுவார். “பாவம்… அதுவும் ஒரு ஜீவன் தானே…சாப்பிடட்டும்!’ என்பார்.
ஏதாவது ஒரு ஜீவன், நாயோ, பூனையோ, ஆடோ, மாடோ விபத்தில் அடிபட்டு இறக்க நேரிடுவதைப் பார்த்தால், ரொம்பவும் வேதனைப்படுவார்… “பகவானே… இதற்கு நல்ல கதியை கொடுப்பா!’ என்று பிரார்த்திப்பார். இதென்னடா பைத்தியக்காரத்தனம் என்று, மற்றவர் எண்ணலாம்.
ஆனால், அவர், “ஐயா… இந்த ஜீவனுக்கு நல்ல கதியைக் கொடு…’ என்று நாம் மனமாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இந்த ஜீவனுக்கு மரண காலத்தில் பகவான் நாமாவைச் சொல்லவோ, எண்ணவோ முடியாது. இந்த ஜீவனின் மரண காலத்திலாவது, நாம் பகவானிடம் இதற்கு நல்ல கதியைக் கொடு என்று பிரார்த்திக்கலாமே!
“நம்முடைய பிரார்த்தனையை ஏற்று, பகவான் அதற்கு நற்கதியளித்தால் அளிக்கட்டுமே! ஒரு ஜீவன் நற்கதியடையும்படி செய்த புண்ணியமாவது கிடைக்கட்டும். புண்ணியம் இல்லாவிட்டாலும் ஒரு ஜீவன் நற்கதி பெறட்டுமே!’ என்பார்.
இப்படி துன்பப்படும் ஜீவன்கள் எதைக் கண்டாலும் அவர் பிரார்த்திப்பது வழக்கம். மனிதர்களில் எத்தனை பேர் இப்படி, பிற ஜீவன்களுக்காகப் பிரார்த்திக்கின்றனர். ரொம்ப, ரொம்ப அபூர்வம். நல்ல உள்ளம் கொண்ட ஓரிரு நல்லவர்களே உள்ளனர் எனலாம். அவர்களிடம் தான் இந்த குணம் உண்டு!

No comments:

Post a Comment