Saturday, February 12, 2011

வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயம்

வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயம்


வர இருக்கும் ஆபத்தை நீக்கும் உபாயத்தை முன்னமே அறிந்துக் கொள்ளக் கூறப்பட்ட கதை
..பீஷ்மர் தருமருக்கு 'வரவிருக்கும் ஆபத்தை அறிந்து செயல்படுபவன் இன்பமாக வாழ்வான்.மந்த புத்தியுள்ளவன் துன்பம் அடைவான்,இவ்விஷயத்தில் செய்யத் தக்கது,தகாதது ஆகியவற்றை ஆராயாத மந்த புத்தியுள்ளவன் கதையைச் சொல்கிறேன்' என்று சொல்ல ஆரம்பித்தார்.
ஆழமற்ற சிறு குட்டையில் பல மீன்கள் இருந்தன.அவற்றில் மூன்று மீன்கள் நட்புடன் வசித்து வந்தன.அவற்றில் ஒரு மீன் சமயோசித புத்தியுடையது.மற்றொன்று ஆழ்ந்த சிந்தனையையுடையது.மூன்றாவது மந்த புத்திக் கொண்டது.
ஒரு சமயம் வலைஞர்கள் குட்டை நீரைக் கால்வாய் அமைத்துப் பள்ளங்களில் வடிய வைத்தனர்.அது கண்டுபயந்தது ஆழ்ந்த சிந்தனையுள்ள மீன்.மற்ற இரண்டு மீன்களை நோக்கி'ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விரைந்து கால்வாய் வழியே வேறிடம் சென்றிடுவோம்' என்றது.
மந்த புத்தியுள்ள மீன்..'இங்கேயே இருக்கலாம்' என்றது.
சமயோசித புத்தி மீன்'சமயம் வரும்போது ஏதாவது யுக்தியைக் கண்டுபிடுத்துத் தப்பித்துக் கொள்ளலாம்.இப்போது போக வேண்டாம்' என்றது.இதைக் கேட்ட ஆழ்ந்த சிந்தனை மீன் கால்வாய் வழியே வெளியேறி ஆழமான குளத்தைச் சேர்ந்தது.
தண்ணீர் வடிந்ததும்..குட்டையை கலக்கி வலைஞர்கள் மீன் பிடிக்கத் தொடங்கினர்.அப்போது மந்த புத்தி மீன் மற்ற மீன்களுடன் வலையில் சிக்கியது. வலை கயிறுகளால் கட்டப்பட்டுத் தூக்கப்படும் போது சமயோசித புத்தியுள்ள மீன் கயிற்றை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தது.எடுத்துச் சென்று வேறு குட்டையில் கழுவும் போது அந்த மீன் விரைந்து தண்ணீருக்குள் நுழைந்து தப்பித்துக் கொண்டது.மந்தபுத்தியுள்ள மீன் வலையில் சிக்கி இறந்தது.
இதுபோல சமயோசித புத்தியில்லாதவன் மந்த புத்தியுடைய மீனைப் போல சீக்கிரம் அழிவான்.வருமுன்னர் தன்னைக் காத்துக் கொள்ளாவிடினும்.சந்தேகமான தயக்க நிலையில் சமயோசித புத்தியுள்ளவன் தன்னைக் காத்துக் கொள்வான்
இதனால், வர இருக்கும் ஆபத்தை முன்னரே அறிந்துக் கொள்பவனும்,சமயோசித புத்தியுள்ளவனும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவர் என்பதும்..மந்த புத்தியுள்ளவன் அழிவான் என்று உணர்த்தப் பட்டது

No comments:

Post a Comment