Monday, February 7, 2011

குழந்தை மனம் வேண்டும்

குழந்தை மனம் வேண்டும்

வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதைக் காட்டிலும் வராமலே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உபவாசம் ஒரு பத்தியம். மிகவும் கீழான இடத்தில் மனதை வைத்தால் கீழான பைத்தியம் உண்டாகிறது. மேலான இடத்தில் மனதை வைத்தால் மேலான பிரம்மவித்தாக ஆகிறோம். ஈசுவர சரணாரவிந்தத்தைப் பிடித்தால் நமக்கு அப்படிப்பட்ட உயர்ந்த நிலை உண்டாகும்.
குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைதான் தெய்வம். அவர்களிடத்தில் காமக்குரோதங்கள் இல்லை. 'குழந்தையாக இரு' என்று உபநிஷத் சொல்லுகிறது.
'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்களை எப்பொழுது சந்தர்ப்பம் நேர்ந்தாலும் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஜென்மம் வந்தாலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஜென்மமே இல்லாத பரம சாந்த நிலை உண்டாகும்.
ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் எப்பொழுதும் எதிரில் நின்று கொண்டு பிரபுவை ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டே இருக்கிறான். மற்றொருவன் பேசவே மாட்டான். பிரபு எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அந்தக் காரியத்தைச் செய்வான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, வணங்கிக் கொண்டு நிற்பவன் மீது தான் பிரபு அதிக பிரியம் வைத்துள்ளார் போலும் என கருதுவர். ஆனால், வேலை செய்கிறவனிடத்தில் தான் அவருக்குப் பிரியம் இருக்கும். இது போல் தான் ஈஸ்வரன். வெறும் ஸ்தோத்திரம் செய்கிறவனிடத்தில் மட்டும் அதிகப் பிரியமாக இருப்பான் என்று நினைத்து விடக்கூடாது.





No comments:

Post a Comment