Sunday, February 6, 2011

மனைவிக்கு துரோகம் செய்யாதீர் -

மனைவிக்கு துரோகம் செய்யாதீர் -
மனைவி என்ற ஸ்தானம், தியாகத்தின் அடையாளம். பெருமையுடைய இந்த உறவுக்கு, துரோகம் செய்யும் ஆண்கள் பூமியில் இருக்கின்றனர். இவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக, சங்கரன்கோவில் எனும் திருத்தலத்தில் வழிபட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேளுங்கள். இங்குள்ள சங்கரநாராயண சுவாமி கோவில், ஆடித்தபசு விழாவுக்கு பிரபலமானது. சிவபெருமானையும், நாராயணனையும் ஒரே வடிவில் தரிசிக்க வேண்டுமென விரும்பினாள் பார்வதி. இதற்காக, பூலோகம் வந்து, ஒரு புன்னைவனத்தில் தவம் செய்தாள். தேவலோகப் பெண்கள் பசுக்களாகப் பிறந்து, அவளுக்கு உதவி வந்தனர். "ஆ' எனப்படும் பசுக்களை உடமையாகக் கொண்ட இவளுக்கு, "ஆவுடையம்மாள்' என்றும், "கோ' எனும் பசுக்களை உடையவள் என்பதால், "கோமதி' என்றும் அழைக்கப்பட்டாள். சிவநாராயணர் அவளது தவத்தை ஏற்று, ஒன்றுபட்ட வடிவில், "சங்கரநாராயணன்' எனும் பெயரில் காட்சி தந்தனர். பின்னர், லிங்க வடிவில் இவ்வூரில் தங்கினார் சிவன். அவருக்கு, "சங்கரலிங்கம்' என்று பெயர் ஏற்பட்டது. தவத்தை, "தபஸ்' என்பர்; எனவே, இங்கு நடக்கும் விழா, "தபசு' ஆனது.
பூர்வகாலத்தில் தக்கணை எனும் பெண், தன் தந்தை விண்டுசருமனுடன் வசித்து வந்தாள். இந்தப் பெண்ணை காசியில் வசித்த சத்தியகீர்த்தி என்பவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். வீட்டோடு மருமகனாக இருக்க, சத்தியகீர்த்தி சம்மதித்தான்; ஆனால், ஒரே மாதத்தில் அவன் இறந்து விட்டான்.
பூர்வஜென்மத்தில் ஒரு பெண் எப்படி நடக்கிறாளோ, அதைப் பொறுத்தே மறுபிறவியில் வாழ்க்கை அமையும். முற்பிறப்பில், தக்கணை ஒரு ஆணாகப் பிறந்திருந்தாள். கவிதையில் வல்ல அந்த ஆண்மகனுக்கு, திருமணமாகி இருந்தது; ஆனால், மனைவியைக் கைவிட்டு, பிற பெண்களிடம் தொடர்பு கொண்டிருந்தான். எனவே, அவனது மனைவி, தீராத வயிற்றெரிச்சலுடன் இறந்துவிட்டாள். அது, அவனை சும்மா விடவில்லை. மறுபிறப்பில் தக்கணையாகப் பிறந்து, இளவயதிலேயே விதவையாகும்படி ஆகி விட்டது. அதே போல சத்தியகீர்த்தியும் முற்பிறப்பில் கொலைகாரனாக இருந்தான். ஒரு தேவனும், அவனது மனைவியும் சந்தர்ப்பவசத்தால் முயல்களாகப் பிறந்து, பூமியில் வசித்தனர். அவை மகிழ்ச்சியாக இருந்த வேளையில், மாமிசத்திற்கு ஆசைப்பட்டு, ஆண் முயலைக் கொன்று விட்டான். பெண் முயல் சுயவடிவம் பெற்று, அவனுக்கு சாபம் விட்டது. அதனால், அவனும் கல்யாணமான புதிதிலேயே இறந்துவிட்டான். கணவனை இழந்த தக்கணை, ஆறுதலுக்காக பல தீர்த்தங்களில் நீராடினாள். கடைசியாக அவள் வந்த தலம் சங்கரன்கோவில். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தவத்தைத் துவங்கினாள். அந்த தவத்தை மெச்சிய சிவபெருமான், அவள் முன்தோன்றி, "உனக்கு இன்னும் ஏழு பிறப்பு இருக்கிறது. பிறவிக்கு ஒரு பிள்ளையைப் பெற்று, ஏழு பிறவி நீங்கிய பிறகே உனக்கு கைலாச பதவி அளிக்க முடியும்!' என்றார். கடவுள் தரிசனம் கிடைத்த பிறகும், பிறவிகள் தொடருமா என அவள் கேட்டதற்கு, "ஆம் மகளே... நீ ஒரு பிறப்பில் உன் மனைவிக்கு செய்த துரோகம், ஏழுபிறப்பும் தொடரும். இந்த துரோகத்துக்கு பரிகாரமே கிடையாது. இருப்பினும், இப்பிறப்பில் செய்துள்ள தவத்தால் ஏழு பிறப்புக்கு பிறகு உனக்கு கைலாயத்தில் இடம் உண்டு!' என்றார். பார்த்தீர்களா... மனைவிக்கு துரோகம் செய்தததால் வந்த வினையை! சங்கரன்கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி, மனைவியுடன் மட்டும் வாழ உறுதியெடுத்து வாருங்கள்.

No comments:

Post a Comment