Tuesday, February 8, 2011

மகளாய் வந்த அம்பிகை

மகளாய் வந்த அம்பிகை

ஒரு கிராமத்தில் தேவிசரண் என்ற பக்தர் இருந்தார். அவருக்கு மனைவியும், சர்வ மங்களா என்றொரு மகளும் இருந்தனர். துர்க்கை மீது பக்தி அதிகம். அவர் தன் மகள் திருமணத்திற்காக பொருள் ஏதும் சேர்த்து வைக்கவில்லை. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். கோயிலுக்குச் சென்று அம்பிகை யிடம் முறையிட்டார்.
தன் பக்தனின் மனக்குறை தீர்க்க எண்ணம் கொண்டாள் தேவி. சர்வமங்களாவின் அழகைக் கண்ட ஒரு பணக்காரர் தன் வீட்டு மருமகளாக்கிக் கொண்டார். தேவிசரணுக்கோ எல்லையில்லாத மகிழ்ச்சி. தன் மகள், பெரிய வீட்டு மருமகளாகி விட்டாளே என்று அம்பிகைக்கு தன் நன்றிகளைக் காணிக்கை யாக்கினார். அந்த மகளோ, திருமணத்துக்குப் பிறகு, தாய் தந்தையை மறந்து விட்டாள். புகுந்தவீட்டை விட்டு எங்கும் செல்வதில்லை.
தேவிசரணுக்கு மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவளது வீட்டுக்குச் சென்றார். ""சர்வமங்களா'' என்று அழைத்தார். ""அப்பா'' என்று வாய்நிறைய அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள் மகள். அவள் முகமே அவள் அவ்வீட்டில் நன்றாக இருக்கிறாள் என்பதை தேவி சரணுக்குப் புலப்படுத்தியது. ""சர்வமங்களா! உன் அம்மா உன்னைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவசியம் நவராத்திரி பண்டிகைக்கு நீ நம் வீட்டுக்குவர வேண்டும்'' என்றார்.
சர்வமங்களா வீட்டினர், ""மருமகள் இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் எதுவும் நடக்காது. இந்தவீட்டுக்கு எஜமானி, மந்திரி எல்லாம் இவள் தான்!'' என்று சொல்லி அவளை அனுப்ப மறுத்துவிட்டனர். இதைக் கேட்ட தேவிசரணுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், பாச மேலீட்டால் வருத்தமும் மிஞ்சியது. வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார். மனைவியிடம் சர்வமங்களா பற்றி சொன்னார். அவளுக்கும் மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் தோன்றியது. இருந்தாலும், அடிக்கடி மகள் வீட்டுக்குப் போகக்கூடாது என தேவிசரண் சொல்லிவிட்டதால், வருத்தத்தில் உடம்புக்கு முடியாமல் படுத்துவிட்டாள். வீட்டு வேலைகள் போட்டது போட்டபடி கிடந்தன. நவராத்திரி நெருங்கியது. பூஜைக்கு முதல்நாள் சர்வமங்களா தாய்வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள்.
""சர்வமங்களா வந்துவிட்டாள்'' என்று மகிழ்ச்சி யில் கத்தினாள் அம்மா. மகளைப் பார்த்ததும் அவளது நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. தாயும், மகளும் தேவி பூஜைக்கு ஆயத்தமானார்கள். பூஜையை சர்வமங்களாவே செய்தாள். அம்மாவை ஒருவேலை கூட செய்ய அவள் சம்மதிக்கவில்லை. மகள் செய்த பட்சணம் சாப்பிட அமிர்தமாக இருந்தது. புகுந்த வீட்டில் பழகிய புதுவிதமான பதார்த்தங்களை எல்லாம் சர்வமங்களா தயாரித்து பிரசாதமாகப் படைத்தாள். பூஜைக்கு வந்த பெண்கள் சர்வமங்களாவின் செயல்பாட்டைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு, ""என்ன ருசி என்ன ருசி !'' என்று பாராட்டாதவர்களே இல்லை. தேவி சரணின் மனதில் இனம் புரியாத ஆனந்தமும், தெய்வீகமும் உண்டானது. நவராத்திரி நிறைவு நாளில் தேவிக்குப் படைக்கவிருந்த பிரசாதத்தை சர்வ மங்களா சாப்பிட்டுக் கொண்டே, ""அப்பா! என் வயிறு நிறைந்து விட்டது! பரமதிருப்தி!'' என்று மகிழ்ச்சி பொங்க சொன்னாள்.
""ஏனம்மா இப்படி செய்தாய்? உனக்கு புத்தி பேதலித்து விட்டதா! பூஜைக்கு முன்பே சாப்பிட்டு விரதத்தை பாழாக்கிவிட்டாயே! முதலில் வெளியே போ! '' என்று கோபத்தில் கத்தினார் தேவிசரண். தன் மனைவியிடம் புதிதாக பிரசாதம் தயார் செய்யச் சொன்னார். தேவி சரணின் மனைவி, ""ஏங்க! ஊரில் இருந்து வந்த குழந்தையை இப்படி கோபிக்கிறீங்க!'' என்று சமாதானப்படுத்தினாள். அம்மாவின் சமாதானத்தைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சர்வமங்களா தன் கணவன் வீட்டுக்குக் கிளம்பினாள். அன்று இரவு தேவிசரணுக்கு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்தவுடன் தன் மகள் வீட்டுக்குக் கிளம்பினார். அங்கு சர்வமங்களா இருப்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டார்.
""என்மேல் கோபமா அம்மா'' என்று வருத்தத்துடன் கேட்டார். ""எதற்கு உங்கள் மீது நான் கோபப்பட வேண்டும்'' என்று அப்பாவித்தனமாய் கேட்டாள் சர்வமங்களா. தேவிசரண் ஒன்றும் புரியாமல் நவராத்திரி கடைசி நாளில் நடந்ததை மகளிடம் சொல்ல, ""நான் அங்கு வரவே இல்லையே,'' என்றாள் மகள். அப்போது தான் மகளின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்ற உண்மையை அறிந்து பரவசப்பட்டார். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு மகளாய் வருவாள் அம்பிகை

No comments:

Post a Comment