Monday, February 7, 2011

திரு என்ற சொல்

திரு என்ற சொல்லுக்கு அழகு என்றும், மகாலட்சுமி என்றும் பொருள் கூறுவர். இதை ஒரு மங்களமான சொல்லாக பாவித்து வேறு சில வார்த்தைகளுக்கு முன் இதைச் சேர்ப்பதும் வழக்கம். இந்த, "திரு' என்ற சொல்லை எல்லாருமே உபயோகப்படுத்துவதை காண்கிறோம்.

திருமால், திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், திருவாராதனம், திருப்பாத சேவை...
இப்படி நிறைய உண்டு. பாற்கடலை திருப்பாற்கடல் என்றும், பாயசத்தை திருக்கண்ணமுது என்றும் சொல்வர். திவ்ய தேசங்களை திருப்பதிகள் என்கின்றனர். மொத்தம் நூற்றியெட்டு திருப்பதிகள் .
இவைகளில் நூற்றியேழு திருப்பதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வரலாமாம். நூற்றியெட்டாவது திருப்பதிக்கு போகலாமாம்; ஆனால், திரும்பி வர முடியாதாம். அதுதான் வைகுண்டமாம்.
திரு என்ற சொல்லுக்கு இவர்கள் அவ்வளவு பெருமையும், மரியாதையும் கொடுத் திருக்கின்றனர். "தேவரீர் திருநாமம் என்னவோ?' என்று தான் கேட்பர். நெற்றியில் இட்டுக் கொள்ளும் நாமத்தை கூட திருமண் என்றுதான் சொல்கின்றனர். திருச்சின்னம், திருமண் காப்பு என்றெல்லாம் உள்ளது. துளசியை திருத்துழாய் என்று சொல்வர்.

"என்ன சார்! திருடன் திருதிருவென்று விழித்தான் என்பதிலும் தான் திரு சேர்ந்திருக்கிறதே! இதிலே என்ன அழகு உள்ளது?' என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு மற்றொருவர், "ஐயா! கண்ணன் வெண்ணை திருடி விட்டு அகப்பட்டுக் கொண்டபோது, கோபிகை அவனை பிடித்துக் கொண்டாள். அப்போது கண்ணன் திரு, திருவென்று விழித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.
"இவன் எல்லாருக்கும் தெரிந்த திருடன். இவனிடம் எல்லா கோபிகைகளுமே அன்பு செலுத்தியுள்ளனர். கண்ணன் வெண்ணை திருடும்போது அகப்பட்டுக் கொள்வோமென்று தெரிந்துதான் திருடினான். அகப்பட்டுக் கொண்டபோது, புன்முறுவலுடன், குறும்புத்தனத்துடன், குறும்புப் பார்வையுடன் விழித்து நின்றான். அந்தப் பார்வையிலே கோபிகைகள் மயங்கி நின்றனர். "ஆகவே, அவன் கண் விழித்து நின்றபோது அந்த விழிகளிலே ஒரு அழகு இருந்தது. அதனால், திரு, திருவென்று விழித்தான் என்று சொல்லப்பட்டது!' என்று விளக்கினாராம்.
ஆனாலும் அவர் விடவில்லை. "சரி! அப்படியானால், "திரு, திரு'வென்று என்பதாக இரண்டு திரு ஏன் போட்டு சொல்ல வேண்டும்?' என்று கேட்டார். "அடடா! இது கூடத் தெரியவில்லையா? இரண்டு கண்கள் உண்டல்லவா. இரண்டுமே விழித்தன. அதனால், இரண்டு திரு போட்டனர். புரிகிறதா?' என்றாராம் அவர்.இப்படியாக, "திரு'வுக்கு பலவிதத்தில் ஏற்றம் சொல்லப்படுகிறது. யாராவது போய் விட்டால் கூட திருநாட்டுக்கு ஏகினார் என்றோ, ஆசாரியான் திருவடியை அடைந்தார் என்றோதான் சொல்வர், எழுதுவர்.
நல்ல விஷயங்களுக்கும், நல்ல வார்த்தைகளுக்கும் இந்த, "திரு' பயன்படுகிறது.

No comments:

Post a Comment