Wednesday, February 9, 2011

விரதத்தின் பொருள்-பயன்

விரதத்தின் பொருள்

விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள். உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே “விரதம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இது விரதத்தின் முதற் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும். உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல. எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே ’விரதம்’ என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியும் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.
விரதத்தின் பயன்
மனம் ஒடுங்க புலன் ஒடுங்கம். புலன் ஒடுங்க அகம் ஒடுங்கும். அகம் ஒடுங்க, ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அந்த ஆன்ம ஒளியை அகத்திலே கண்டு தரிசிப்பதே விரதத்தின் பயன். பொறிகள் அடங்க வேண்டுமானால் உணவு ஒடுங்க வேண்டும். “அன்னம் அடங்க அஞ்சும் அடங்கும்” என்பது ஆன்றோர் முது மொழி. அதை உள்ளபடி உணர்ந்து விரதம் இருக்க வேண்டும். இறையருள் பெற முயற்சிக்க வேண்டும்.



No comments:

Post a Comment