Monday, February 14, 2011

இடங்கழிநாயனார்

இடங்கழிநாயனார் புராணம்

கோனாட்டுக் கொடும்பாளு ரிருக்கும் வேளிர்
குலத்தலைவ ரிடங்கழியார் கொங்கிற் செம்பொ
னானேற்றார் மன்றின்முக டம்பொன் மேய்த்த
வாதித்தன் மரபோர் நெற் கவர்ந்தோ ரன்பர்
போநாப்ப ணிருளின்கட் காவ லாளர்
புரவலர்முன் கொணரவவர் புகலக் கேட்டு
மானேற்று ரடியாரே கொள்க வென்று
வழங்கியர சாண்டருளின் மன்னி னாரே.
கோனாட்டிலே கொடும்பாளுரிலே, குறுநிலமன்னர் குலத்திலே, கனகசபையின் முகட்டைக் கொங்கிற் செம்பொன்னால் வேய்ந்த ஆதித்தன் குடியிலே, இடங்கழிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சைவநெறியும் வைதிக நெறியுந் தழைக்க, சிவாலயங்களெங்கும் நித்திய நைமித்திகங்கள் சிவாகம விதிப்படி நடக்க, அரசியற்றுங்காலத்திலே, சிவனடியார்களைத் திருவமுதுசெய்விக்கும் ஓரடியவர் ஒருநாள் திருவமுதுசெய்வித்தற்குப் பொருள் எங்கும் அகப்படாமையால் மனந்தளர்ந்து, மாகேசுரபூசைமேல் வைத்த அத்தியந்த ஆசையினால் விழுங்கப்பட்டமையால் செயற்பாலது இது என்பது தெரியாமல், அவ்விடங்கழி நாயனாருடைய பண்டாரத்திலே நெற்கூட்டு நிரைகள் நெருங்கிய கொட்டகாரத்தில் அந்த ராத்திரியிலே புகுந்து முகந்து எடுத்தார். காவலாளர்கள் அதைக் கண்டு, அவரைப் பிடித்து இடங்கழிநாயனாருக்கு முன்கொண்டு வந்தார்கள். இடங்கழி நாயனார் அவ்வடியவரைப் பார்த்து, "நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்" என்று வினாவ, அவ்வடியவர் "நான் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தற்குப் பொருள் இன்மையால் இங்ஙனஞ் செய்தேன்" என்றார். இடங்கழிநாயனார் அது கேட்டு மிக இரங்கி, "எனக்கு இவரன்றோ பண்டாரம்" என்று சொல்லி, "சிவனடியார்களெல்லாரும் நெற்பண்டாரத்தை மாத்திரமின்றி மற்றை நிதிப் பண்டாரங்களையும் எடுத்துக் கொள்க" என்று எங்கும் பறை யறைவித்தார். பின்னும் நெடுங்காலம் திருநீற்றின் நெறி தழைக்கும்படி தண்ணளியோடு அரசியற்றிக்கொண்டிருந்து சிவபதத்தை அடைந்தார்.






No comments:

Post a Comment