Monday, February 14, 2011

புகழ்ச்சோழநாயனார்

புகழ்ச்சோழநாயனார் புராணம்

பொழின் மருவுங் கருவூர்வாழ் புகழார் சோழர்
போதகம்போ லென்னுயிரும் போக்கு மென்றே
யழலவிர்வாள் கொடுத்தபிரா னதிகை மான்மே
லடர்ந்தபெரும் படையேவ வவர்கொண் டேய்ந்த
தழல்விழிகொ டலைகாண்பார் கண்ட தோர்புன்
சடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக்
கழல்பரவி யதுசிரத்தி னேந்தி வாய்ந்த
கனன்மூழ்கி யிறைவனடி கைக்கொண்டாரே.

சோழநாட்டிலே, உறையூரிலே, புகழ்ச்சோழநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் மற்றையரசர்கள் பணி கேட்க; உலகத் தம்முடைய செங்கோலின்முறை நிற்க, சைவசமயம் தழைக்க அரசியற்றினார். சிவாலயங்களெலாவற்றிலும் நித்திய நைமித்திகங்களை வழுவின்றி நடத்துவிப்பார். சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து கொடுப்பார்.
இப்படியிருக்குநாளிலே, கொங்கதேசத்தரசரும் குடக தேசத்தரசரும் தருந்திறையை வாங்கும்பொருட்டு, தங்கள் குலத்தார்களுக்கு உரிய கருவூர் என்னும் இராஜதானியிலே அரசுரிமைச் சுற்றத்தோடு வந்தணைந்தார். அங்குள்ள ஆனிலை என்னுந் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பரமசிவனை வணங்கி, மாளிகையிலே புகுந்து, அத்தாணி மண்டபத்திலே சிங்காதனத்தில் வீற்றிருந்து கொண்டு, கொங்க தேசத்தரசர்களும் குடக தேசத்தரசர்களுங் கொணர்ந்த திறைகளைக் கண்டு, அவர்களுக்கு அருள்புரிந்து, மந்திரிமாரைநோக்கி, "நம்முடைய ஆஞ்ஞாசக்கரத்துக்கு அமையாத அரசர்கள் இருக்கின்ற அரணங்கள் உளவாகில், தெரிந்து சொல்லுங்கள்" என்றார். இப்படி நிகழுநாளிலே, சிவகாமியாண்டார் கொணர்கின்ற புஷ்பங்களைச் சிதறிய தம்முடைய யானையையும் பாகர்களையும் கொன்ற எறிபத்தநாயனாரை அணைந்து, "என்னையுங் கொன்றருளும்" என்று தமது வாளைக் கொடுத்து; திருத்தொண்டிலே மிகச் சிறந்து விளங்கினார்.
மந்திரிமார்கள் புகழ்ச்சோழநாயனாரை வணங்கி, "திறை கொணராத அரசன் ஒருவன் உளன்" என்று சொல்ல, "அவன் யாவன்" என்று வினாவ, மந்திரிமார் "அவன் அதிகன் என்பவன். அவன் சமீபத்திலே மலையரணத்துள்ளே இருப்பவன்" என்றார்கள். அதுகேட்ட புகழ்ச்சோழநாயனார் "நீங்கள் படைகொண்டு சென்று அவ்வரணத்தைத் துகளாகப் பற்றறுத்து வாருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, மந்திரிமார் சேனையோடு சென்று, அம்மலையரணைப் பொடிபடுத்தி, அதிகனுடைய சேனைகளை வதைத்தார்கள்; அதிகன் அஞ்சி ஓடிப்போய்ச் சுரத்தில் ஒளித்துவிட்டான். புகழ்ச்சோழநாயனாருடைய படைவீரர்களிற் பலர் அதிகனுடைய படைவீரர்களின் தலைகளையும், மற்றவர்கள் நிதிக்குவைகளையும் யானை குதிரைகளையுங் கொண்டு, மந்திரிமாரோடு கருவூரிலே வந்து சேர்ந்தார்கள். புகழ்சோழநாயனார் தமக்கு முன்னே படைவீரர்கள் கொண்டுவந்த தலைக்குவைகளுள் ஒருதலையின் நடுவிலே ஒரு புன்சடையைக் கண்டார். கண்டபொழுதே நடுங்கி, மனங்கலங்கி, கைதொழுது, பெரும்பயத்தினுடனே எதிர்சென்று அத்தலையிற் சடையைத் தெரியப்பார்த்து, கண்ணீர் சொரிய அழுது, "நான் சைவநெறியைப் பரிபாலித்து அரசியற்றியபடி மிக அழகிது, சடைமுடியையுடையவர் பரமசிவன் அருளிச் செய்த மெய்ந்நெறியைக் கண்டவர். அவருடைய சடைத் தலையைத் தாங்கிவரக் கண்டும் அதிபாதகனாகிய நான் பூமியைத் தாங்குதற்கு இருந்தேனோ" என்று சொல்லி, ஒன்று செய்யத்துணிந்து, மந்திரிமாரை நோக்கி, "பூமியைக் காத்து அரசளித்துப் பரமசிவனுக்கு வழித்தொண்டு செய்யும்பொருட்டு என்னுடைய குமாரனுக்கு முடிசூட்டுங்கள்" என்று விதித்து, அதனைக் கேட்டு அயரும் மந்திரிகளைத் தேற்றி அக்கினி வளர்ப்பித்து, விபூதியை உத்தூளனஞ் செய்து, சடைச் சிரத்தை ஒருபொற்கலத்தில் ஏந்தி, தம்முடைய திருமுடியிலே தாங்கி, அவ்வக்கினியை வலஞ்செய்து உயிர்த்துணையாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை எடுத்து ஓதிக்கொண்டு, அதனுள்ளே புகுந்து, பரமசிவனது திருவடிநிழலிலே அமர்ந்திருந்தார்.



No comments:

Post a Comment