Monday, February 14, 2011

பூசலார் நாயனார்

பூசலார் நாயனார் புராணம்



பொருவருந்தண் டகநாட்டு நின்ற வூர்வாழ்
பூசுரர்கோப் பூசலார் பந்தி யாலே
யிருநிதியந் தேடியா லயமு மாக்கி
யெழுந்தருளப் பண்ணுவதா வெண்ணுங் காலை

யரனதனைக் காடவர்கோற் கருள மன்ன

னந்நகர மணைந்தவ்வா றறிந்து தாழவிரவுமனக் கோயிலுற விருத்தி யங்கண்வேண்டுவகொண் டிறைஞ்சியருண் மேவி னாரே.

தொண்டை மண்டலத்திலே, திருநின்றவூரிலே, பிராமண குலத்திலே, பூசலார்நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றை எப்படியுந் தேடிக் கொடுத்து, பரமசிவனுக்கு ஓராலயங் கட்டுதற்கு விரும்பி, எங்கும் வருந்திப் பொருள்தேடி, அற்பமுங் கிடையாமையால் நைந்து, "இதற்கு யாதுசெய்வேன்" என்று ஆலோசித்து மனோபாவனையினாலே ஆலயங்கட்டத் துணிந்து, மனசினாலே அதற்கு வேண்டுந்திரவியங்களையும் உபகரணங்களையும் சிற்பரையும்தேடி, சுபதினத்திலே அடிநிலை பாரித்து, இரவிலும் நித்திரையின்றி, நெடுநாட்கூடக் கோயில் கட்டி முடித்து, பிரதிட்டை செய்தற்கு உரிய சுபதினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அது நிற்க.
காடவராஜாவானவர் காஞ்சீபுரத்திலே ஒரு சிவாலயங்கட்டுவித்தார் அதிலே பிரதிட்டை செய்ய நிச்சயித்த சுபதினத்துக்கு முதற்றினத்திலே பரமசிவன் பூசலார்நாயனாருடைய அன்பை விளக்கும் பொருட்டு அவ்வரசருக்குச் சொப்பனத்திலே தோன்றி, 'நின்றவூரில் இருக்கின்ற பூசலென்பவன் நமக்கு ஒரு கோயில் கட்டியிருக்கின்றான். அதிலே நாளைக்கு நாம்போவோம் உன் கோயிலில் பிரதிட்டையை நாளைக்கு ஒழித்து பின் கொள்வாய்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார். காடவராஜா விழித்து எழுந்து அந்தப் பூசலார்நாயனாரை வணங்குதற்கு விரும்பி, திருநின்றவூரை அடைந்து, அங்குவத்தார் சிலரை நோக்கி, "பூசலார்நாயனார் கூட்டிய திருக்கோயில் எவ்விடத்தது " என்று வினாவ; அவர்கள் "அவர் இங்கே கோயில் கட்டிற்றிலர்" என்றார்கள். உடனே காடவராஜா அவ்வூர்ப் பிராமணர்களை அழைப்பித்து "பூசலார் நாயனார் என்பவர் யாவர்" என்று வினாவ; அவர்களெல்லாரும் "அவர் பிராமணர் இவ்வூரார்" என்று சொல்லி அவரை அழைத்தற்குப் புறப்பட்டார்கள். அப்பொழுது காடவராஜா அவரை அழைக்க வொட்டாமல். தாமே அவரிடத்திற்சென்று அவரை வணங்கி "சுவாமீ! நீர் ஒருசிவாலயங்கட்டியிருக்கின்றீர் என்றும், பிரதிட்டைசெய்யும் நாள் இன்று என்றும், சிவபெருமானால் அறிந்து, உம்மைத் தரிசித்து வணங்குதற்கு வந்தேன் அவ்வாலயம் யாது" என்று விண்ணப்பஞ்செய்ய; பூசலார்நாயனார்மருண்டு நோக்கி, "சிவபெருமான் என்னை ஒருபொருளாகக் கொண்டு அருளிச்செயத்து நான் திரவியம் இல்லாமையால் மனோபாவனையிலே கட்டிய கோயிலையே" என்று நினைந்து நிகழ்ந்ததை எடுத்துச்சொன்னார். காடவராஜா அதைக் கேட்டு வியந்து, அவரைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துத் தோத்திரஞ்செய்து அநுமதி பெற்றுக்கொண்டு, தமது ஊருக்குத் திரும்பிவிட்டார். பூசலார் நாயனார் தரம் மனசினாலே கட்டிய திருக்கோயிலிலே சுபமுகூர்த்தத்திலே பரமசிவனைப் பிரதிட்டைசெய்து, நெடுங்காலம் பூசைசெய்து கொண்டிருந்து, சிவபதத்தை அடைந்தார்.





No comments:

Post a Comment