Monday, February 14, 2011

புகழ்த்துணைநாயனார்

புகழ்த்துணைநாயனார் புராணம்


புண்ணியர்கள் புகழழகார் திருப்புத் தூர்வாழ்
புகழ்த்துணையா ரகத்தடிமைப் புனிதர் சின்னாண்
மண்ணிகழ மழைபொழியா வற்க டத்தால்
வருந்துடல நடுங்கிடவு மணிநீ ரேந்தி
யண்ணன்முடி பொழிகலச முடிமேல் வீழ
வயர்ந்தொருநாட் புலம்பவர னருளா லீந்த
நண்ணலரு மொருகாகப் படியால் வாழ்ந்து
நலமலிசீ ரமருலக நண்ணி னாரே.

செருவிலிபுத்தூரிலே, ஆதிசைவர் குலத்திலே, புகழ்த்துணைநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவாகம விதிப்படி பரமசிவனை அருச்சனைசெய்து வருங்காலத்திலே பஞ்சம் உண்டாயினமையால் பசி மிகப் பெற்றும், "அருச்சனையை விடுவேனல்லேன்" என்று அல்லும் பகலும், அருச்சிப்பார். ஒருநாள் திருமஞ்சனமாட்டும் பொழுது, மிகுந்த பசி நோயினால் கைசோர்ந்து கலசந் திருமுடிமேல் விழ, தாந்திருவடியிலே விழுந்து அயர்ந்து, திருவருளினாலே நித்திரை அடைந்தார். அப்பொழுது பரமசிவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "பஞ்சம் நீங்கும் வரைக்கும் உனக்குத் தினந்தோறும் இங்கே ஒவ்வொரு காசு வைப்போம்" என்று அருளிச்செய்தார். புகழ்த்துணை நாயனார் விழித்து எழுந்து பீடத்தின்கீழே ஒருகாசு இருக்கக் கண்டு, அதனைக் கைகொண்டு வாழ்ந்தார். அந்நாளிலே போல எந்நாளிலும் அப்படியே ஒவ்வொரு காசு பெற்று, பஞ்சநீங்கிய பின்னும் நெடுங்காலம் மெய்யடிமைத் தொழில்செய்து, பரமசிவனது திருவடிநிழலை அடைந்தார்.



No comments:

Post a Comment