Thursday, February 3, 2011

விநாயகருக்கு எலி வாகனம்

விநாயகருக்கு எலி வாகனம்
கந்தர்வர்களின் மன்னன் பெயர் கிரவுஞ்சன். விநாயகரின் பக்தனும் கூட! கந்தவர்கள், நினைத்த மாத்திரத்தில் ஆகாய மார்க்கமாக எங்கு வேண்டுமானாலும் செல்லும் திறனுடையவர்கள். அதன்படி ஒருநாள் இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன்.
திடீரென்று பூமியில் ஓரிடத்தில் ஏதோ ஒன்று அவனது கண்களை வசீகரிக்க... அப்படியே நின்றான். அந்த இடத்தை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான்.
ஆஹா... என்னவொரு அழகு?’ என்று தன்னை அறியாமலேயே புகழ்ந்தான். அவன் புகழ்ந்தது ஒரு அழகான இளம் பெண்ணை. அதுவும், ஒரு ரிஷி பத்தினியை...! அவள் பெயர் மனோரமை. சவுபரி என்ற முனிவரின் மனைவியான அவள் மிகவும் பேரழகி.
எவ்வளவு பேரழகியாக இருந்தாலும், எளிமையாக இறைபக்தியோடு வாழ்ந்து வந்தாள் அவள்.
தனது குடிலில், செடியில் இருந்து பறித்த பூக்களை அவள் மாலையாக தொடுத்துக் கொண்டிருந்த போதுதான் கிரவுஞ்சன் பார்வையில் சிக்கிவிட்டாள்.
அவளது அழகில் மயங்கிய அவன் அவளது குடிலுக்கு வந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்து விட்டாள் மனோரமை.
எதிரில் வருவது யார்? என்பது தெரியாததால் குழப்பமான பார்வையை அவன் மீது வீசினாள்.
ஆனால், அவனோ போதை தலைக்கேறியவன்போல் அவளது அழகை ரசித்தபடியே நெருங்கினான்.
இப்போது அவளை மிகவும் அருகில் நெருங்கி விட்டான். ரிஷி பத்தினிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அவளே பேசினாள்.

தாங்கள் யார் என்று தெரியவில்லை. என் கணவரும் இப்போது இங்கே இல்லை. தங்களுக்கு என்ன வேண்டும்?” என்று மனோரமை கேட்டாள்.
அவளிடம் பதில் சொல்லும் நிலைமையிலா இருந்தான் கிரவுஞ்சன்? அவளது அழகைப் பருகிய மாத்திரத்தில் போதையில் அல்லவா திளைத்துக் கொண்டிருந்தான்?
மனோரமை கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, பார்வையாலேயே தின்று விடுவதுபோல் அப்படியொரு பார்வை பார்த்தான்.
கூனிக் குருகி, லேசாகத் தலை குனிந்து நின்றிருந்தாள் மனோரமை. பருவச்செழிப்பு அவளது மேனியில் நிறையவே கொட்டிக் கிடந்தது. அவளது மீனைப் போன்ற விழிகளும், சிவந்த கன்னங்களும், சிறுத்த இடுப்பும், வாழைத்தண்டுக் கால்களும் அவனை என்னமோ செய்தன.
அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு பதிலாக, வேகமாக அவளது கையைப் பற்றினான். தன் மார்போடு இறுக அணைத்தான்.
இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மனோரமை அவன் பிடியில் இருந்து விடுபட திமிறினாள்.
உதவி... உதவி...’ என்று கத்தினாள்.
குடிலை நெருங்கிக் கொண்டிருந்த சவுபரி முனிவர், தனது பத்தினி மனைவியின் அலறல் கேட்டு அங்கே வேகமாக ஓடி வந்தார்.
தனது மனைவியை ஒரு கந்தர்வன் கவர முயன்று கொண்டிருப்பதைக் கண்ட அவர் கோபத்தில் பொங்கியெழுந்தார்.
“அடே கந்தர்வா...” என்று அவரது கொந்தளிப்பான குரலில் திடுக்கிட்டு நின்றான் கிரவுஞ்சன். அப்போதுதான் அவனுக்கு செய்த தவறு நினைவுக்கு வந்தது.
மனோரமையை தனது பிடியில் இருந்து விட்டுவிட்டு முனிவர் பக்கம் திரும்பினான்.
முனிவரின் கண்கள் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. அடுத்த நொடியே அவனுக்கு சாபமிட்டார்.
“எந்த ஆடவனையும் ஏறெடுத்துப் பார்க்காத என் தர்ம பத்தினியின் கையைப் பிடித்து இழுத்து, அவளை அடைய முயன்ற உன்னை மன்னிக்கவே முடியாது. இப்போதே நீ, மண்ணைத் தோண்டி வளையில் ஒளியும் பெருச்சாளியாக மாறுவாயாக...” என்று சபித்தார் முனிவர்.
கிரவுஞ்சனுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டினான்.
“என்னை மன்னித்து விடுங்கள் முனிவரே... தங்கள் தர்ம பத்தினியின் பேரழகு என் கண்களை மறைத்து விட்டது. அவளது அழகில் மங்கி, இப்படியொரு தவற்றை செய்யத் துணிந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு அளித்த சாபத்தைத் திரும்பப் பெறுங்கள்...” என்றபடி கிரவுஞ்சன் முனிவரின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு அழுதான்.
“தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனாலும், உன் மேல் எனக்கு இரக்கம் ஏற்படுகிறது. கொடுத்த சாபத்தைத் திரும்ப பெற முடியாது. நிச்சயம் நீ பெருச்சாளியாக மாறித்தான் ஆக வேண்டும்”.
“அப்படியென்றால், எனக்கு பாவ விமோசனமே கிடையாதா?”
கண்டிப்பாக உண்டு. அந்த விநாயகப் பெருமான் உன்னை காப்பாற்றுவார்...” என்றார் சவுபரி முனிவர்.
அடுத்தநொடியே மிகப்பெரிய பெருச்சாளியாக மாறிய கிரவுஞ்சன் காட்டுக்குள் ஓடினான்.
நாட்கள் வேகமாக நகர்ந்தன.
அதே பகுதியில் புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருந்த ஒரு மகாராணிக்கு ஐங்கரனாக அவதாரம் பிறந்த விநாயகரும் அவதரித்தார்.
ஒருநாள் பெருத்த அட்டகாசத்தில் ஈடுபட்ட கிரவுஞ்ச பெருச்சாளி மீது தனது பாசக்கயிற்றை வீசினார் விநாயகர். அதில் சிக்கிக்கொண்ட பெருச்சாளியால் தப்பிக்க முடியவில்லை. அப்போதுதான் அதற்கு, தன் மீது பாசக்கயிற்றை வீசியது விநாயகர் என்பது புரிந்தது. தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது.
கருணையே வடிவான விநாயகர் கிரவுஞ்ச பெருச்சாளியை மன்னித்தார். பின் அதைத் தனது வாகனமாகவும் ஏற்றுக் கொண்டு அருள் வழங்கினார்.

இப்படித்தான் விநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது.

No comments:

Post a Comment