Monday, February 14, 2011

திருநீலநக்கநாயனார்

திருநீலநக்கநாயனார் புராணம்


நீதிதரு மறையோர்வாழ் சாத்த மங்கை
நீலநக்க ரயவந்தி நிமலர் மேனி
யூதிவிழுஞ் சிலம்பிகடிந் தவளை நீத்தார்க்
குமியாத விடநாத னுறுநோய் காட்டக்
காதன்மிகு மனைவியையு மகிழ்ந்து மேவிக்
காழியார்கோ னமுதுசெயக் களித்து வாழ்ந்து
வேதிகையிற் பாணனார்க் கிடமு நல்கி
விளங்குபெரு மணத்தரனை மேவி னாரே.

சோழமண்டலத்திலே, சாத்தமங்கையிலே, பிராமண குலத்திலே, திருநீலநக்கநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் வேதத்தின் உள்ளுறையாவது பரமசிவனையும் அவருடைய அடியார்களையும் அன்பினோடு அருச்சித்து வணங்குதலே என்று துணிந்து தினந்தோறுஞ் சைவாகம விதிப்படி சிவார்ச்சனைப் பண்ணி, சிவபத்தர்களுக்குத் திருவமுது செய்வித்தல் முதலாகிய பலவகைப்பட்ட பணிகளையுஞ்செய்வார்.
அப்படிச்செய்யுநாளிலே, ஒரு திருவாதிரை நக்ஷத்திரத்திலே சிவபூசையை முடித்துக்கொண்டு, அந்த ஸ்தலத்திலுள்ள அயவந்தி என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற சுவாமியையும் அருச்சிக்க விரும்பி, தம்முடைய மனைவியார் பூசைக்கு வேண்டும் உபகரணங்களைக் குறைவறக் கொண்டுவர, அவ்வாலயத்திற்சென்று, பூசைபண்ணிப் பிரதக்ஷிணஞ்செய்து, சந்நிதானத்தில் நமஸ்கரித்து, இருந்து கொண்டு, வேதாகமாதி சமஸ்த சாஸ்திரங்களின் உண்மைப்பொருளாகிய ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஜபித்தார். ஜபிக்கும் பொழுது, ஒரு சிலம்பி மேலே நின்று வழுவி, சிவலிங்கத்தின் மேல் விழுந்தது. அதைச் சமீபத்திலே நின்ற மனைவியார் கண்டு அச்சமடைந்து, விரைந்து, குழந்தைமேல் விழுச் சிலம்பி நீங்கும்படி ஊகித்துமிபவர்போல அன்பு மிகுதியினாலே அந்தச் சிலம்பி நீங்கும்படி ஊதித்துமிந்தார். திருநீலநக்கநாயனார் அதைக்கண்டு தம்முடைய கண்ணைப் புதைத்து, அறிவில்லாதவளே! "நீ இப்படிச் செய்ததென்னை" என்று சொல்ல மனைவியார் "சிலம்பி விழுந்தபடியால் ஊத்திதுமிந்தேன்" என்றார். நாயனார் மனைவியாருடைய அன்பின் செய்கையை நன்கு மதியாமல், அது அநுசிதம் என்று நினைந்து, அவரை நோக்கி "நீ சிவலிங்கத்தின்மேலே விழுந்த சிலம்பியை வேறொரு பரிசினாலே நீக்காமல் முற்பட்டுவந்து, ஊதித்துமிந்தாய் இந்த அநுசிதத்தைச் செய்த உன்னை நான் இனித் துறந்தேன்; நீங்கிவிடு" என்றார். அப்பொழுது சூரியாஸ்தமயனமாயிற்று மனைவியார் நாயனாருடைய ஏவலினாலே ஒருவழி நீங்க; நாயகர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி விட்டார். மனைவியார் அஞ்சுகின்ற உள்ளத்தோடும், அவரிடத்திற் செல்லாமாட்டாதவராகி, ஆலயத்தில் இருந்தார். நாயனார் நித்திரைசெய்யும்பொழுது, பரமசிவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, தம்முடைய திருமேனியைக் காட்டி "உன்மனைவி மனம் வைத்து ஊதித் துமிந்த இடமொழிய இப்புறம் சிலம்பியின் கொப்புளம்" என்று சொல்லியருளினார். நாயனார் அச்சத்துடனே அஞ்சலிசெய்து கொண்டு விழித்து எழுந்து, கூத்தாடினார்; பாடினார், சிவபிரானுடைய திருவருளை வியந்து நின்று அழுதார். விடிந்தபின், ஆலயத்துக்குப் போய், சுவாமியை நமஸ்கரித்து, ஸ்தோத்திரஞ்செய்து, மனைவி யாரையும் அழைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார். அதற்குப்பின், முன்னிலும்பார்க்க மிகுந்த மகிழ்ச்சியோடு சிவார்ச்சனையையும் மாகேசுரபூசையையுஞ் செய்து கொண்டு இருந்தார்.
அப்படியிருக்குநாளிலே, பரமாசாரியராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைத் தரிசிக்கவேண்டும் என்னும் அத்தியந்த ஆசையையுடையராயினார். அப்படியிருக்கும் பொழுது திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அயவந்திநாதரை வணங்கும் பொருட்டுத் திருக்கூட்டத்தோடும் சாத்தமங்கைக்கு எழுந்தருளி வர; திருநீலநக்கநாயனார் கேள்வியுற்று மிகுந்த மகிழ்ச்சியோடும் நடைப்பந்தரிட்டு, வாழைகளையும் கழுகுகளையும் நாட்டி, தோரணங்கள் கட்டி, நிறைகுடங்களும் தூபதீபங்களும் வைத்து, தம்முடைய சுற்றத்தார்கள் சமஸ்தரோடும் அவரை எதிர் கொண்டு நமஸ்கரித்து, தம்முடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய், திருவமுது செய்வித்தார். திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் அன்றிரவிலும் அங்கேதானே திருவமுது செய்து, திருநீலநக்கநாயனாரை அழைத்து, "திருநீலகண்டப்பெரும்பாணருக்கும் விறலியாருக்கும் இன்று தங்குதற்கு ஓரிடங்கொடும்" என்று சொல்லியருள; திருநீலநக்கநாயனார் வீட்டுக்கு நடுவிலிருக்கின்ற வேதிகையின் பக்கத்திலே அவர்களுக்கு இடங்கொடுத்தார். பெரும்பானார், அவ்விடத்திலே வேதிகையிலுள்ள நித்தியாக்கினி வலஞ்சுழித்து ஓங்கி முன்னையிலுஞ் சிறந்து பிரகாசித்து, வருணமன்று பத்தியே மகிமை தருவது என்பதை விளக்கவும், அதுகண்ட திருநீலநக்கநாயனார் மகிழ்ச்சியடையவும், விறவியாரோடு நித்திரை செய்தார்.
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார், விடிந்தபின் அயவந்தியிற் சென்று சுவாமி மேலே திருநீலநக்கநாயனாரைச் சிறப்பித்துத் திருப்பதிகம்பாடி, சிலநாள் அங்கிருந்து, பின் திருநீலநக்கநாயனாருக்கு விடைகொடுத்து, அந்தத்திருப்பதியினின்றும் நீங்கியருளினார். திருநீலநக்கநாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் மேலே பதிந்த அன்பும் அவருடைய கேண்மையும் அவருக்குப் பின் செல்லும்படி தம்மை வலிந்தனவாயினும், தாம் அவருடைய ஆஞ்ஞையை வலியமாட்டாமையால், அந்தத் திருப்பதியிலே அவருடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் செல்லுந்தலங்களிலே இடைநாட்களிற் சென்று அவரோடிருந்து, பின் திரும்பிவிடுவார். இப்படி நெடுநாட் சென்றபின், திருஞானசம்பந்தமூர்த்திநாயனாருடைய திருமணத்தைச் சேவித்துச் சிவபதமடைந்தார்.



No comments:

Post a Comment