Saturday, March 5, 2011

கோயில் குளங்களுக்கு உள்ள முக்கியத்துவம் என்ன?

கோயில் குளங்களுக்கு உள்ள முக்கியத்துவம் என்ன?

கோயில் குளங்கள் என்பதே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் குளத்திற்காக வெட்டி எடுக்கப்பட்ட மண்ணை வைத்துத்தான் அந்த கோயிலின் அஸ்திவாரம் மற்றும் சுவர்களே கட்டப்பட்டிருக்கும்.
சாங்கியமாகவே இதுபோன்று செய்யப்படுகிறது. கோயிலின் சிலையும், விக்ரகங்களும் கல்லாலும், பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்தாலும், கோயில் கட்டப்பட வேண்டிய இடத்திற்கு அருகே தோண்டப்படும் குளத்தின் மண்ணில் இருந்துதான் கோயில் கட்டப்பட்டது.
எனவே கோயில் கட்டப் பயன்பட்ட அந்த குளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். கோயில் பகுதியை மேடாக்குவதற்கும் குளத்து மண்ணைத்தான் பயன்படுத்துவார்கள்.
கோயிலை சுத்தப்படுத்தவும், மேன்மைப்படுத்தவும் அந்த குளத்தின் நீரைத்தான் பயன்படுத்துவார்கள்.
அந்த காலத்தில் கோயில் குளங்களை அதிக பக்தியுடன் மக்கள் வைத்திருந்தனர். அந்த கோயிலில் தாமரை, அல்லி போன்ற தெய்வீக மலர்களை வளர்த்து, கோயிலில் பூஜை செய்பவர்கள் அந்த குளத்தில் குளித்து, பின்னர் சுத்தமான குளத்து நீரை எடுத்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் புஷ்கரனிகளுக்குச் (குள‌ம்) சென்று கால்களை நனைத்துக் கொள்ள வேண்டும். தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பழக்கங்கள் உள்ளன.இறைவனே நீராடக் கூடிய நீராக இருக்கும் அந்த புஷ்கரனி‌யி‌ன் நீர் மகத்துவம் வாய்ந்தது. கோயிலுக்காகவும், இறைவன் குளிக்கவும், இறைவனின் ஆடைகளை தூய்மைப்படுத்தவும் இந்த குளத்து நீர் தான் பயன்படுகிறது. அதற்காகவே உள்ள இந்த குளங்களில் பக்தர்கள் குளிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.அதாவது இறைவனை வணங்கும் பக்தர்களுக்கு இறைவன் தனது உயிர் நாடியை அளிப்பதால் அவர்களும் அந்த குளத்தில் குளிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுதான் கோயில் குளங்களின் சூட்சுமம்.
ஸ்தல விருட்சத்தைப் போல ஸ்தல தீர்த்தமும் முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனைக் காண வரும் தேவர்களும், மூவர்களும் கூட முதலில் குளத்தில் இறங்கி தங்களை தூய்மைப்படுத்திக் கொண்ட பின்னர் தான் கோயிலுக்குள் சென்று இறைவனை சந்தித்ததாக புராணங்கள் உண்டு.அதனால்தான் சில இடங்களில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்றெல்லாம் சொல்வார்கள். அந்த இடத்தில் சந்திரனே குளித்துவிட்டு இறைவனைக் கண்டதாகக் கூறப்படும்.திருச்செந்தூரில் எடுத்துக் கொண்டால் கடலே புஷ்கரணியாக இருக்கிறது. பல ஆழ்கடல்களும் உள்ளன. சம்ஹாரஸ்தலமாக இருப்பதால் கடலே புஷ்கரணியாக உள்ளது. அதனால்தான் திருச்சந்தூரில் கடலில் நீராடுதலே புனிதமாகக் கருதப்படுகிறது.திருப்பதியில் ஈசானிய மூலையில் உள்ள குளத்தில்தான் பிரம்மோற்சவ காலங்களில் உற்சவரான வெங்கடாச்சலபதியை நீராட வைத்து வீதி உலா கொண்டு வருவார்கள்.இறைவன் குளிப்பதற்குரிய, இறைவன் குளித்த அந்த நீர் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால் அந்த ஸ்தலத்தை மதிக்கிறோம். அதில் நமக்கு ஒரு சக்தி கிடைக்கிறது.

No comments:

Post a Comment