Sunday, May 29, 2011

"ஒன்றும் தெரியவில்லையே' இப்படி ஒரு வருத்தம் எதற்கு!

உலகத்தில் பலருக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. இந்த மனப்பான்மை பல சமூக, குடும்ப பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது.
அதாவது, கிரிக்கெட் விளையாடி பெரும்புகழ் பெற்று விட்டவர்களைப் பார்த்து, நம்மால் முடியவில்லையே என்று ஒருசாரார் வருந்துகிறார்கள். நன்றாக மேடையில் பேசுபவர்களைப் பார்த்து ஒருசாரார், கடையில் போய் பேரம்பேசி பேச்சு சாமர்த்தியத்தால் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கும் ஒருசாரார், ஆங்கிலம் பேசுவோரைப் பார்த்து ஒரு பகுதியினர்...
இப்படி பல தினுசாக இந்த மனப்பான்மை ஏற்படுகிறது.
ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை அலசுவார்கள். ரமணரும் அவர்களுடன் உரையாடுவார். அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பார்.
""ஐயோ! இந்த வேதவிற்பன்னர்களைப் போல நம்மாலும் ரமணருடன் பேச முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே,'' என வருந்துவார். அவரது ஏக்கத்தைப் புரிந்துகொண்டார் ரமணர்.
ஒருநாள், தனக்கு அவர் பணிவிடை செய்து கொண் டிருந்த போது, ""இன்று சவரம் செய்து கொண் டாயா?'' எனக் கேட்டார்.
அவர் ஏதும் புரியாமல், ""ஆமாம் சுவாமி,'' என்றார்.
""கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?'' என்று திரும்பவும் கேட்டார் ரமணர்.
பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல்,""ஆமாம்,'' என்று பணிவுடன் தலையாட்டினார்.
""கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது <உதவுகிறது. ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?'' என்றார்
ரமணரிடம், ""முடியாது சுவாமி,'' என்றார் பக்தர்.
""அதேபோல் தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், முக்தியடைய அவை உதவும். அவ்வளவு தான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும். அதை மட்டும் நீ செய்தால் போதும்,'' என்றார்.
பார்த்தீர்களா! தெரியாததைப் பற்றி வருத்தப்படுவதை விட, தெரிந்ததைக் கொண்டு எந்தச்செயலையும் செய்யுங்கள். அதை சிரத்தையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment