Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 102 சூரியபுத்திரன்

சூரசேனன் என்ற மன்னன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு பிருகை என்ற அழகான மகள் இருந்தாள். சூரசேனனின் அத்தை மகன் (மைத்துனன்) குந்திபோஜன். அவனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் மிகச்சிறந்த சூரிய பக்தன். சூரியனை எண்ணி ஒருமுறை யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகப்பணிகளைக் கவனிக்க தனது மாமா உறவான குந்திபோஜன் வீட்டுக்கு பிருகை சென்றாள். அவளும் சூரியனின் மகாபக்தை. எனவே யாகப்பணிகளை பயபக்தியுடன் செய்தாள். அவளது பணிகளைக் கண்ட குந்திபோஜன் தன் மைத்துனன் சூரசேனனிடம், ""சூரசேனா! உன் மகள் என் உள்ளம் கவர்ந்து விட்டாள். அவளைப் போல அடக்கமான பெண்ணை, பொறுப்புள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை. எனக்கோ குழந்தை இல்லை. நீ இந்தப் பெண்ணை எனக்கு தத்துக்கொடு. நீ அவளே என் மகள். அவளைக் கண்போல காப்பது என் கடமை,'' என்றான். சூரசேனனுக்கு மகளைப் பிரிய மனமில்லாவிட்டாலும், குழந்தையில்லாத குந்திபோஜனின் வேண்டுகோளையும் புறக்கணிக்க இயலவில்லை. தன் மகளை அவனுக்கே தத்து கொடுத்து விட்டான். குந்திபோஜனின் மகளான பிறகு, அவள் மக்களால் "குந்தி' என செல்லமாக அழைக்கப்பட்டாள். ஒரு முறை துர்வாச முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்தார்.தன் விரதம் பங்கமின்றி முடிய குந்திதேவியை அனுப்பும்படி கேட்டார்.குந்திபோஜன் மகிழ்ந்தான். ""தங்களைப் போன்ற மகான்களின் அருளாசி அவளுக்கு கிடைக்குமானால், என் மகள் உலகம் உள்ளவரை புகழ் உள்ள பெண்ணாக விளங்குவாள்,'' என்று கூறி, அவளை அனுப்பி வைத்தான். துர்வாசரின் ஆஸ்ரமத்தில் தங்கிய குந்தி, அவரை மிகுந்த பணிவுடன் உபசரித்தாள். துர்வாசர் ஒருநாள் கூட அவளிடம் கோபப்படவில்லை என்றால், அந்த பணிவிடையின் தரத்தை சொல்லவா வேண்டும்! அவர் அவளை வாழ்த்தினார். ஆனால், அவர் முகம் வாடியது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ""அம்மா! குந்தி, இங்கேவா,' 'என அழைத்தார். குந்தியும் பணிவுடன் அவர் முன்னால் நின்றார். அவளது முகத்தையே உற்று நோக்கிய அவர், ""பாவம், இந்தப் பெண், இவளுக்கு சாபம் ஒன்றைப் பெற்ற கணவனே அமைவான் என்ற விதி இருக்கிறது. அந்த சாபத்தின் படி இவளுக்கு குழந்தை பிறக்காது. இவளோ ராஜகுமாரி. குழந்தைகள் இல்லாவிட்டால், இவள் வாழ்க்கைப்படும் கணவனின் நாட்டை ஆள்வது யார்? எனவே, இப்படி செய்யலாம்,'' என நினைத்து சில மந்திரங்களை அவளுக்கு கற்றுக் கொடுத்தார். ""மகளே! இந்த மந்திரங்களை உச்சரித்து நீ எந்த தேவனை அழைத்தாலும் அவன் உன் முன்னால் நிற்பான். அவனது அம்சமுள்ள புத்திரன் உனக்கு பிறப்பான்,'' என்றார். குந்தி அவரிடம் விடை பெற்று திரும்பினாள். தான் பெற்ற மந்திரத்தை விளையாட்டாக சோதிக்க விரும்பினாள். அவள் சூரியனின் பக்தை என்பதால், சூரியனை எண்ணி மந்திரம் சொன்னாள். கோடி பிரகாசத்துடன் சூரியபகவான் அவள் முன் வந்தார். அவரை வணங்கி, மந்திரத்தை சோதிக்கவே அவ்வாறு செய்ததாகச் சொன்னாள். சூரியன் அவளிடம்,""நீ உச்சரித்தது குழந்தைக்கான மந்திரம். எனவே, குழந்தையை அளிக்காமல் நான் எனது உலகத்துக்கு திரும்ப முடியாது. இருப்பினும், குழந்தை பெற்றதும் நீ கன்னியாக மாறிவிடுவாய்,'' என்று சொல்லி மறைந்தார். அவ்வாறு அவள் பெற்ற குழந்தையே கர்ணன். அவன் கவச குண்டலத்துடன் பிறந்தான். காதில் குண்டலம் இருந்ததால் "கர்ணன்' என்ற பெயர் அவனுக்கு வந்தது. ("கர்ணம்' என்றால் "காது') சூரியபுத்திரனாக கர்ணன் பிறந்ததால் தான், அவன் விஷ்ணுவின் தரிசனம் பெற்று வைகுண்டம் அடைந்தான். கொடை வள்ளலாகத் திகழ்ந்து, மக்கள் மனதில் இன்றும் நிற்கிறான்.

No comments:

Post a Comment