Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் -42எல்லாருமே இறைவன் தான்!

ஒரு மடத்தில் இருந்த துறவிகள் தினமும் யாசகம் செய்து, அதில் கிடைக்கும் <உணவை இறைவனுக்கு அர்ப்பணித்த பிறகு சாப்பிடுவார்கள். ஒருநாள், ஒருதுறவி சில வீடுகளுக்கு யாசகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில், ஜமீன்தாரின் வீடு இருந்தது. அவர், தன் வேலைக்காரனை ஏதோ காரணத்தால் நையப் புடைத்துக் கொண்டிருந்தார். வலி தாங்காமல் அவன் அலறினான்.
கருணை உள்ளம் படைத்த துறவி இதைப் பார்த்துவிட்டார். ஓடிச்சென்று, ""ஜமீன்தாரே! தாங்கள் இப்படி செய்யலாõமா? பணியில் அவன் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவனைக் கண்டியுங்கள். மாட்டை அடிப்பது போல இப்படி வெளுத்துக்கட்டினால், அவன் இறந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஏதும் நடந்தால், நீங்களும் வழக்கில் சிக்கிக் கொள்வீர்களே! கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். அது வாழ்வுக்கு மிகவும் நல்லது,'' என்றார். அவ்வளவுதான்! ஜமீன்தாரின் கோபம் துறவியின் மீது திரும்பியது.
""யோவ் சாமியாரே! வந்தோமா! பிச்சை எடுத்தோமா! போனோமா! என இருக்க வேண்டும். அதை விட்டு எனக்கே உபதேசம் செய்கிறீரா! இங்கிருந்து போய்விடும், மரியாதை கெட்டுவிடும்,'' என்று விரட்டியவர், மீண்டும் அந்தத் தொழிலாளியை அடித்தார்.
துறவி அவரருகில் சென்று தடுத்தார். ஆத்திமடைந்த ஜமீன்தார் துறவியையும் புரட்டி எடுத்துவிட்டார். அவர் மயங்கி விட்டார். வேலைக்காரர்கள் துறவியை சாலையில் தூக்கிப் போட்டனர். இதைப் பார்த்த சிலர், அவர் தங்கியிருந்த மடத்துக்கு தகவல் அனுப்பினர். மற்ற துறவிகள் ஓடிவந்து அவரை மடத்துக்கு தூக்கிச் சென்றனர்.
அவருக்கு முதலுதவி செய்தனர். ஒருவர் அவரது வாயில் பால் ஊற்றினால் மயக்கம் தெளியும் என்றார். அதன்படி பால் ஊற்றினர். அவர் மெதுவாக கண்விழித்தார்.
""சாமி! இப்போது பரவாயில்லையா! உங்களுக்கு பால் ஊற்றியது யார் என்று தெரிகிறதா?'' என பால் செம்புடன் இருந்த துறவியை அடையாளம் காட்டி கேட்டனர்.
அந்தத்துறவி மெதுவான குரலில்,""என்னை அடித்தவர் தான் எனக்கு பாலும் புகட்டினார்,'' என்றார்.
ஆம்..பாலூற்றியவரை தெய்வமாகப் பார்த்தது போல, அடித்தவரையும் கடவுளாகவே நினைத்தார் துறவி. அடிப்பவரையும் அணைப்பவரையும் கடவுளாகக் கருதினால், உலகில் ஏது சண்டை!

No comments:

Post a Comment