Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 43-- 1/100 போதும்...இந்த வாழ்க்கைக்கு...

ஒரு தெருவில், சில பெண்கள் அரிசி குத்தி பிழைப்பு நடத்தி வந்தனர். அவர்கள் தொழில் செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும். ஆன்மிகத்தில் "அப்பியாச யோகம்' என்ற ஒன்று உண்டு. அதாவது, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளைச் செய்வது!
அவர்களில் ஒருத்தி உலக்கையை மேலிருந்து கீழாக உலக்கையை உரலுக்குள் போட, உலக்கை உரலுக்குள் விழுவதற்குள் அரிசியிலுள்ள உமி உதிர்ந்து விட்டதா எனகையை விட்டுப் பார்த்தாள். அந்நேரத்தில் குழந்தை அழும். அதை மடியில் வைத்து பாலூட்டியபடியே வேலையைக் கவனிப்பாள். இந்நேரம் பார்த்து வாடிக்கையாளர் வருவார். அவருக்கு அரிசியை அளந்து போடுவாள். இடையிடையே உரலுக்குள் கையை விட்டு நெல் அரிசியாகி விட்டதா என கவனிப்பாள். இந்நேரத்தில், வாடிக்கையாளர் ""என்னம்மா இது! போனவாரம் கிலோ 25 ரூபாய்க்கு கொடுத்தே! இந்த வாரம் 30 ரூபாய் வாங்கிட்டியே!'' என்பார். ஒருவழியாய் பேரம் பேசி 28 ரூபாய்க்கு முடிப்பாள். ஆக, நெல்லைத் தள்ளுதல், உரலுக்குள் கையை விட்டு நெல்லை சோதித்தல், பாலூட்டுதல், அளத்தல், பேரம் பேசுதல் என ஒரே நேரத்தில் செய்தாள்.
""இப்படி இவர்களால் எப்படி செய்ய முடிகிறது?'' என்று வாடிக்கையாளர் திகைத்தார்.
அன்று மாலை ஒரு நூலைப் படித்தார். அதில் அதற்கு விடை இருந்தது.
""அரிசி குத்தும் பெண் பல செயல்களைச் செய்தாலும், நூறில் 99 பங்கு கவனம் உரலுக்குள் இருக்கும் தன் கை மீது உலக்கை பட்டுவிடக்கூடாது என்பதில் இருக்கிறது. அதுபோல், இல்லறத்தில் இருப்பவன், தனது மனதில் நூறில் 99 பங்கை இறைவனிடம் வைக்க வேண்டும். ஒரு பங்கைக் கொண்டு வேறு வேலைகளைச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால், வாழ்நாள் பாழாகி விடும்'' என்றிருந்தது. உண்மை தானே!

No comments:

Post a Comment