Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 44 -நன்மை செய்வதே விரதம்

முருகபக்தரான கந்தசாமி முருகனுக்குரிய எல்லா விரதங்களையும் அனுஷ்டிப்பார். இப்படி விரதம் இருப்பது தேவையா இல்லையா என்று கூட அவர் யோசித்ததில்லை. நோய்வாய்ப்படும் சமயத்திலும் கூட, சிரமப்பட்டு விரதமிருப்பார். அவரது மனைவி வள்ளியும் முருகபக்தை. என்றாலும், கணவரைப் போல, தீவிரமாக விரதத்தைப் பின்பற்ற அவரால் முடியவில்லை. கணவரிடம், ""விரதம் இருந்தால் தான் பக்தி என்று நினைக்காதீர்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால், கந்தசாமி அதைக் காதில் வாங்கவில்லை.
ஒரு கார்த்திகை விரதம். முருகன் கோயிலில் பக்தி சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. சொற்பொழிவாளர்
"விரதம்' என்ற தலைப்பில் பேசினார்.
""வள்ளியப்பன் என்றொரு இளைஞன்... நல்ல உழைப்பாளி. எதையும் வீணாக்க மாட்டான். நல்ல ஒழுக்கமும், பக்தியும் மிக்கவன். மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தான். அவனுடைய நேர்மையும்<, சிக்கனமும், உழைப்பும், பக்தியும் கடைக்கு மளிகை வாங்க வரும் பணக்காரப் பெண்மணிக்குப் பிடித்துப்போனது. தன் ஒரே மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள்.
மாமியார் வீட்டிற்கு விருந்துக்கு வள்ளியப்பன் சென்றான். வள்ளியப்பன், உணவை வீணாக்குவதில்லை, சாப்பிடும் நேரத்தில் பேசுவதில்லை என்ற இருவிஷயங்களை கோட்பாடாக வைத்திருந்தான். அவனுக்கு லட்டு, பாயாசம், ஏராளமான கூட்டு வகைகள், சித்ரான்னங்கள் என நிறையவே பரிமாறினர். வயிறு நிரம்பி விட்டது. இவன் சாப்பிட்டு முடிப்பதற்குள், இலையில் உணவை இட்டனர். இவன் தான் சாப்பிடும்போது பேசவும் மாட்டான், உணவை வீணாக்கவும் மாட்டானே!
சிரமப்பட்டு அதையும் சாப்பிட்டு முடித்தான். மாமியாரோ மருமகனுக்கு சாப்பாடு ரொம்பவும் பிடித்து விட்டது போலும் என்று எண்ணி, இன்னும் கொஞ்சம் உணவைப் போட்டாள். அதையும் சாப்பிட்ட அவன், வயிறு உப்பி, வலியால் துடிக்கத் தொடங்கினான்.
டாக்டரை வீட்டுக்கு வரவழைத்தனர். அவர் வள்ளியப்பனிடம் மிகவும் கோபித்துக் கொண்டார்.
""தம்பி! உணவை வீணாக்கக் கூடாது என்பதில் மட்டும் கவனம் இருந்தால் போதாது. அதிகம் சாப்பிட்டால் உடம்பும் வீணாகும் என்ற அக்கறையும் வேண்டும். உன்னைப் போல் பைத்தியக்காரனை உலகிலேயே பார்த்ததில்லை,"' என்று கேலியான தொனியில் எச்சரிக்கவும் செய்தார். வாந்தி எடுக்க மருந்து கொடுத்து வயிற்றைக் காலி செய்தார். போன உயிர் மறுபடியும் வந்தது போல உணர்ந்தான் வள்ளியப்பன்.
வள்ளியப்பனுக்கு மட்டும் இந்த விஷயம் பொருந்தாது. நம் ஒவ்வொருவருக்குமே இது பொருந்தும். ஆன்மிகம் என்றால் ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி,மனபலம், உடல்பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்படியான முன்னேற்றம் தான் நிலையான பலனைத்தரும் என்பதை <உணரவேண்டும். எந்த ஒரு விஷயத்தைக் கடைபிடிப்பதாக இருந்தாலும், நம்மைப் பற்றிய தெளிவு
வேண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத் தானே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும், உடலை வருத்தும் விரதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைத்து, பிறருக்கு நன்மை செய்வதே உண்மையான விரதம். பிறருக்கு சேவை செய்வதையே இறைவன் சிறந்த விரதமாக ஏற்றுக்கொள்வான்,'' என்று சொற்பொழிவாளர் நிறைவு செய்தார்.
இதைக் கேட்ட கந்தசாமிக்கு உள்ளத்தில் தெளிவு பிறந்தது. வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ப விரதமுறைகளைக் கடைபிடிக்க முடிவெடுத்தான். தம்பதியர் வீட்டுக்கு புறப்படும் போது மீண்டும் ஒருமுறை கருவறையைத் திரும்பி பார்த்தனர். முருகப்பெருமான் எப்போதும் போல சிரித்துக் கொண்டு நின்றிருந்தான்.

1 comment: