Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 46 சுமையை இறக்கி வைப்போம்

சுதாமன் என்ற சிறுவன் தன் அம்மாவிடம், ""அம்மா! இந்த பூச்சியின் முதுகில் சுருளாக ஏதோ இருக்கிறதே! இதன் பெயர் என்ன? இதை ஏன் சுமந்து கொண்டே திரிகிறது?'' என்றான்.
""மகனே! இதன் பெயர் நத்தை. கடவுள் இதற்கு கொடுத்த சாபத்தால் இப்படி சுமையுடன் திரிகிறது,'' என்ற அம்மா, கதையையும் விவரித்தார்.
ஒருமுறை எல்லா உயிரினங்களும் உலகத்தில் இருந்து புறப்பட்டு வந்து தன்னைப் பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார் கடவுள். அட! சாக்கடையில் நெளியும் சிறு கிருமிகள் கூட அவரை வந்து பார்த்து வணக்கம் போட்டு விட்டு சென்றன. கடவுள் சொன்ன நேரம் முடிந்த பிறகு, கடும் தாமதமாக வந்து நத்தை.
""ஏன் பூச்சியே இவ்வளவு தாமதம்?'' என்றார் கடவுள்.
""எனக்கு என் வீடு என்றால் உயிர். அங்கிருந்து எங்கும் கிளம்புவதென்றால் ரொம்பவே வருத்தப்படுவேன். என் வீட்டை ஒப்பிடும் போது, உங்கள் உலகம் கூட எனக்கு சாதாரணம் தான்,'' என்றது.
கடவுள் கோபித்தார்.
""வீடே சுகமென நினைக்கும் நத்தையே! உனக்கு எது பிடித்ததோ அதையே நிரந்தரமாக தருகிறேன். உன் வீட்டை முதுகில் சுமந்துகொண்டே திரி,'' என்று சொல்லிவிட்டார். அதில் இருந்து முதுகில் சுமையுடன் நத்தை திரிகிறது.
நத்தை சுமப்பது போல, நாமும் வீடு, வாசல், உறவு என பெரும் சுமையுடன் திரிகிறோம். இதில் இன்பத்தை விட துன்பத்தையே அதிகம் கண்டிருக்கிறோம். நித்திய இன்பம் என்பது இவற்றை விட்டு இறைவனுடன் ஐக்கியமாவதிலேயே இருக்கிறது. எனவே, இல்லறச்சுமையை ஆரம்பம் முதலே குறைப்போமா!

No comments:

Post a Comment