Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 55 சிறிய உதவி பெரிய நன்மை

முனிவர் ஒருவர் காட்டில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அந்தக் காட்டிலுள்ள புல்வெளிக்கு பசுக்களை மேய்க்க தினமும் வருவான் ஒரு இளைஞன். ஒருமுறை, அவன் முனிவரைப் பார்த்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவரைப் பார்த்து அவனுக்கு இரக்கம் ஏற்பட்டது. பசியோடு இருப்பதைப் புரிந்து கொண்டான்.
ஒரு கலயத்தில் பால் கறந்து அவரிடம் கொண்டு சென்றான். தியானம் கலையும் வரை காத்திருந்த அவன், பாலை முனிவரிடம் நீட்டி, ""சாமி! நீங்க ரொம்ப பசியாய் இருக்கீங்க! இந்த பாலைக்குடியுங்க,'' என்றான். முனிவர் அவனைப் பாராட்டிவிட்டு குடித்தார்.
இரவெல்லாம் அங்கு தங்கும் அவருக்கு குளிரெடுக்காதா என இளைஞன் கேட்டான்.
""குளிரத்தான் செய்யும், என்ன செய்வது?'' என்றார் முனிவர்.
""சாமி! உங்களுக்கு விருப்பமென்றால், என்னுடைய இந்த போர்வையை ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்று நீட்டினான். அவரும் மறுப்பின்றி பெற்றுக்கொண்டார். இப்படி தன்னால் முடிந்த உதவியை அவன் செய்து வந்தான்.
சிலநாட்கள் கழித்து அவனைக் காணவில்லை. முனிவர் அவனது ஊர் பற்றி விசாரித்து அங்கு வந்தார். ஊர்மக்கள் யாரும் எழ முடியாத அளவு காய்ச்சலில் கிடந்தனர். இளைஞனும் அதில் அடக்கம். முருகபக்தரான அந்த முனிவர் இறைவனிடம் தியானம் செய்தார்.
""முருகா! நல்லவர் ஒருவர் இருந்தால், அவருக்காக ஊருக்கே மழை கொடுப்பாய். இந்த இளைஞன் ஏழையாயினும், அவன் எனக்கு செய்த உதவியை மறக்க இயலுமா? இப்படிப்பட்டவனால் ஊரே நன்மை பெறட்டுமே!'' என்று கண்ணீருடன் பிரார்த்தித்தார். முருகனின் செவிகளில் அது விழுந்தது போலும் ! மறுநாளே எல்லாருக்கும் காய்ச்சலின் தீவிரம் குறைந்து நடமாட ஆரம்பித்தனர்.
இளைஞன் செய்த உதவியை அறிந்த பெரியமனிதர் ஒருவர் அவனுக்கு தொழில் துவங்க நிதி கொடுத்து உதவினார். ஒரு சிறிய உதவியால் ஊரும் பாதுகாக்கப்பட்டது. அவனது வாழ்க்கைத்தரமும் உயர்ந்தது.

No comments:

Post a Comment