Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 67 மானம் காத்த மனைவி

வாழ்க்கையில் கஷ்டப்படாத மனிதர்களே இல்லை. அதிகக் கஷ்டப்படுவர்கள் காலையில் எழுந்ததும் நினைக்க வேண்டியது நள மகராஜாவை! இவனது சரித்திரத்தை சமஸ்கிருதத்தில் எழுதியவர் ஸ்ரீஹர்ஷர்.
இவரது தந்தை ஸ்ரீஹீரர் பெரும் புலவர். இவரது புலமையால் ஈர்க்கப்பட்ட மன்னர், தனது ஆஸ்தானப் புலவராக்கிக் கொண்டார். பொன்னும் பொருளும் தந்து ஆதரித்தார். ஸ்ரீஹீரரின் இல்லத்தரசி மாமல்லதேவி.
ஒருமுறை, வெளிநாட்டுப் புலவர் ஒருவர் மன்னனின் அரசவைக்கு வந்தார். ""மன்னா! நானே புலமையில் உயர்ந்தவன்.
என்னோடு போட்டி போடுவார் யாரும் இல்லை. உம்நாட்டில், என்னை வெற்றி கொள்ளும் புலவர் இருந்தால் போட்டிக்கு அனுப்புங்கள். இல்லையென்றால், எனக்கு ஒரு கோடி பொன்னைக் கொடுத்து உங்கள் தேசத்தில் புலமையே இல்லை என்று எழுதியும் தாருங்கள்,'' என்றார்.
மன்னன் சிரித்தான்.
""புலவரே! பெருமைப்படாதீரும். என் சமஸ்தானப் புலவர் ஸ்ரீஹீரரது புலமையின் சக்தி அறியாமல் பேசுகிறீர்! நாளை அவருடன் போட்டி,'' என சொல்லிவிட்டான்.
ஸ்ரீஹீரரும் தேசத்தின் பெருமையைக் காப்பாற்ற அந்தப் புலவருடன் போட்டியிட்டார். ஆனால், வெளிநாட்டுப் புலவரின் புலமையின் முன் அவரது புலமை எடுபடாமல் தோற்றுப்போனார். மன்னன் குனிந்த தலையுடன் ஒரு கோடி பொன்னை அளித்ததுடன், தங்கள் தேசத்தின் புலமையைத் தாழ்த்தி ஓலையும் கொடுக்க வேண்டியதாயிற்று.
வெட்கிப்போன ஸ்ரீஹீரர் வீட்டுக்குச் சென்றார். "தன் மானத்துடன் நாட்டின் மானத்தையும் இழக்கச் செய்து விட்டோமே' என்று வருந்தினார். மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் போல, அந்த வருத்தத்திலேயே இறந்து போனார்.
மாமல்லதேவி துடித்தாள். கணவன் இறந்தபின் வாழ விரும்பாத அவளும் தன் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த வேளையில், தன் மகனை என்ன செய்வதென்ற நிலை ஏற்பட்டது. அவளது தந்தை சிறுவயதில் அவளுக்கு "சிந்தாமணி" என்ற மந்திரத்தை உபதேசம் செய்திருந்தார்.
""மகளே! 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த மந்திரத்தை ஜெபித்தாலோ, அல்லது ஒருநாள் இரவு முழுக்க ஒரு பிணத்தின் மீது ஏறி அமர்ந்து, எவ்வித பயமும் இன்றி அதை உச்சரித்தாலோ சரஸ்வதிதேவி உன் முன் தோன்றுவாள். விரும்பும் வரத்தைப் பெறலாம் என்று சொல்லியிருந்தார்.
தன் கணவரால் தேசத்துக்கு ஏற்பட்ட களங்கம், மகன் ஸ்ரீஹர்ஷனால் நீங்க வேண்டுமென விரும்பிய அவள், அந்தச் சிறுவனுக்கு சிந்தாமணி மந்திரத்தை உபதேசித்தாள். தொடர்ந்து பயிற்சி கொடுத்தாள். சிலநாட்களிலேயே பயிற்சி ஆகி விட்டது. ஒருநாள் இரவில், தன் மார்பின் மீது அவனை படுக்க வைத்து, மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லும்படி வலியுறுத்தினாள். அந்தச் சிறுவன் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், இருளைப் பயன்படுத்தி தன் கழுத்தை அறுத்து இறந்து போனாள்.
இதையறியாத சிறுவன், தாயின் அணைப்பில் தானே இருக்கிறோம் என்ற எண்ணத்தில் மந்திரத்தை விடிய விடிய உச்சரித்துக் கொண்டிருந்தான். அவன் முன்னால் சரஸ்வதி தேவி பேரொளியுடன் தோன்றினாள்.
சிறுவனின் நாவில் "ஓம்' என்று எழுதினாள். அவன் தலைசிறந்த கவிஞனாவான் என்று வாக்களித்தாள். தாய் இறந்து கிடப்பதைக் கண்ட மகன், அவளுக்கு மீண்டும் உயிரளிக்க கேட்டுக்கொண்டான்.
சரஸ்வதிதேவி அவளை எழுப்பினாள். உலகம் போற்றும் கவிஞனாக ஸ்ரீஹர்ஷன் விளங்குவான் என உறுதிபடக் கூறினாள்.
இவரே, நளசரிதம் எழுதியவர். ஒரு மனிதன் எந்தக் கஷ்டத்திலும் மனம் கலங்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். இன்றும் கிரகசாரங்களால் மனிதன் கஷ்டப்படும் போது, நள சரிதத்தை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் எழுந்ததும் நளனை நினைத்து விட்டு பணிகளைத் தொடர்ந்தால், எதையும் சாதிக்கும் வல்லமை கிடைக்கும் என்பது நம்பிக்கை. நைஷதம் என்ற சமஸ்கிருத நூலை எழுதியவர் இவரே. வாழ்வின் ஒழுங்குமுறை குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் இந்த நூலை அதிவீரராம பாண்டியன் மொழி பெயர்த்துள்ளார்.

No comments:

Post a Comment