Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 78அவன் நினைத்தானா இது நடக்குமென்று

சம்பத்துக்கு அன்று பள்ளி விடுமுறை. காலையிலேயே, தங்கள் ஊர் குளத்துக்குப் போய் மீன் பிடிக்க வேண்டும் என்பது அவனது திட்டம். தந்தையும் சம்மதம் தெரிவித்து விட்டார்.
காலை ஆறு மணிக்கெல்லாம் ஆர்வமாக விழித்து விட்டான். ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால் மழை கொட்டிக் கொண்டிருந்தது.
""சே! இந்த மழைக்கு வேறு நாள் நட்சத்திரமே இல்லையா! இன்னொரு நாள் பெய்திருக்கலாமே! என் மீன்பிடிக்கும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது இந்த மழை!'' அவள் அப்பாவிடம் சிணுங்கினான்.
அப்பா மகனிடம்,""சம்பத்! இயற்கையைப் பழிக்காதே. அது தன் கடமையைத் தானே செய்கிறது. நீ காலையிலேயே எழுந்து, எப்படி உன் கடமையைச் செய்ய தயாராகி விட்டாயோ, அதே கடமையை இந்த மாதங்களில் மழை செய்யும். இது மழை மாதம் தானே! மழை வெறித்தால் மீன்பிடிக்கப் போகலாம். இல்லாவிட்டால், இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோமே!'' என்றார்.
சம்பத்துக்கு இருப்பு கொள்ளவில்லை.
மழை பற்றி வள்ளுவர் சொன்ன திருக்குறள்களையெல்லாம் பொருளுடன் எடுத்துச் சொல்லி மகனை சமாதானப்படுத்தினார் தந்தை. அவன் பேருக்கு "உம்' கொட்டினானே தவிர மனசு என்னவோ சமாதானம் அடைய மறுத்தது. மதியம் வரை மழை விடவில்லை. அன்று, சம்பத் சரியாக சாப்பிடக்கூட இல்லை. அம்மா திட்டுவார்களே என்பதற்காக, பெயரளவுக்கு கொறித்து வைத்தான்.
மாலை மூன்று மணிக்கு மழை நின்றது.
""அப்பா! இன்னும் இரண்டு மணி நேரம் வரை குளத்தில் மீன் பிடிக்கலாம். போய் வரலாமா?'' என நச்சரித்தான் சம்பத்.
மகன் கெஞ்சுவதையும், கொஞ்சுவதையும் ரசித்த தந்தை, அவனைக் குளத்துக்கு அழைத்துச் சென்றார்.
என்ன ஆச்சரியம்! கொட்டிய மழையில் குளம் நிறைந்து கிடந்தது. மீன்கள் வழக்கத்தை விட அதிகமாக கால்வாய்களில் அடித்து வரப்பட்டு குளத்தில் சங்கமித்திருந்தன. காலையில் வெயில் அடித்திருந்தால் கூட, இந்தளவுக்கு மீன்களைப் பார்த்திருக்க முடியாது. சம்பத் மீன்களைப் பிடித்து தள்ளினான்.
அப்பா சொன்னார்.
""பார்த்தாயா சம்பத்! நீ காலையில் மழையைப் பழித்தாய். ஆனால், அந்த மழையின் காரணமாகத்தான் நீர் பெருக்கெடுத்து அதிக மீன்கள் குளத்திற்கு வர காரணமாயிற்று. இறைவன் எல்லாவற்றையும் அந்தந்த காலங்களில் சரியாகச் செய்கிறான். காலையில், மீன் பிடிக்க இயலாமல் போனதும், கதவு அடைக்கப்பட்டது போல் நீ உணர்ந்தாய்.
இப்போது, இன்னொரு கதவைத் திறந்த ஆண்டவன், உனக்கு அதிக பலனைத் தந்துள்ளான். இறைவன், நமக்கு ஒரு பலனைக் கிடைக்கவிடாமல் செய்கிறான் என்றால், அதை விட அதிகமான பலனை அவன் நமக்கு கொடுக்க இருக்கிறான் என்றே பொருள். அவர் நிகழ்த்தும் ஒவ்வொரு நிகழ்வும் நன்மைக்காகவே இருக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment