Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 79விருந்துக்கும் விதியிருக்கு!

நீங்கள் யார் வீட்டுக்கு விருந்தினராகச் செல்லலாம் என்பதை கண்ணபிரான் நம் முன் வாழ்ந்து காட்டி அறிவுறுத்தியுள்ளார். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த சூதாட்டத்தில் பாண்டவர்கள் நாடிழந்தனர். குறிப்பிட்ட கால வனவாசம், பிறகு ஓராண்டு யார் கண்ணிலும் படாமல் வாழும் வாழ்க்கை முடிந்த பின் இங்கு வந்தால் இழந்த நாட்டைத் திரும்பத் தருவோம் என கவுரவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், சொன்னபடி செய்யவில்லை.
இதனால், கண்ணபிரான் பாண்டவர்களுக்காக கவுரவர்களிடம் தூது சென்றார். கவுரவர்களின் தலைநகரான அஸ்தினாபுரத்தை அவர் அடைந்தார். கண்ணன் தூது வருகிறார் என்பதை அறிந்த துரியோதனன், அவர் அவைக்குள் வரும் போது யாரும் எழுந்து நின்று மரியாதை செய்யக்கூடாது என்று அறிவித்திருந்தான்.
கிருஷ்ணர் அரண்மனைக்கு வரவில்லை. கவுரவர்களின் சித்தப்பா விதுரர் கிருஷ்ணனின் தீவிர பக்தர். தர்மம் தெரிந்தவர். அந்த நல்லவரின் வீட்டுக்கு கண்ணன் சென்றார். விதுரர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு வெளியே வந்து அவரது பாதங்களைக் கழுவி, தீர்த்தத்தை தலையில் தெளித்து வரவேற்று அழைத்துச் சென்றார். அவரது மனைவி, கண்ணனுக்கு சிறப்பான விருந்து பரிமாறினாள்.
பின்பு விதுரரும், கண்ணனும் உரையாடினர்.
""கண்ணா! துரியோதனன் அகம்பாவி, தர்மத்தைப் புறக்கணித்தவன். அவனிடம் நீ சமாதானம் பேச நினைப்பது விழலுக்கு இறைத்த நீரே ஆகும். பீஷ்மர், துரோணர் போன்றவர்களின் பேச்சையே அவன் புறக்கணிக்கிறான். சகுனி, கர்ணன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு தன்னை உயர்ந்தவனாக எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனிடம் சமாதானம் பேச வேண்டாம். இந்த தூது பலனளிக்காது. நீ அவர்களிடம் அவமானப்படுவதை என்னால் சகிக்க இயலாது,'' என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
""விதுரரே! என்ன இருந்தாலும், தூதுவன் என்று வந்துவிட்டேன். திரும்பிப்போனால் நன்றாக இராது. நான் தூதுவன் தானே! சொல்வதைக் கேட்பதும், கேட்காததும் அவன் இஷ்டம். பிரச்னை எனக்கும் துரியோதனனுக்கும் அல்ல! பாண்டவர்களுக்கும் அவனுக்கும் தான்! பாண்டவர்கள் சொன்னதை நான் துரியோதனனிடம் சொல்லப்போகிறேன். இவன் தரும் பதிலை அவர்களிடம் போய் சொல்வேன். முடிவு அவர்கள் கையில்,'' என்றார் நமட்டுச் சிரிப்புடன்.
கண்ணனின் லீலா வினோதங்களை அறியாதவரா விதுரர். அதற்கு மேல் அவர் ஏதும் சொல்லவில்லை. துரியோதனனின் அவைக்குள் அவர் சென்றார். அவர் நுழைந்தாரோ இல்லையோ, அவையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். துரியோதனன் உட்பட... தெய்வம் உள்ளே வந்ததும் கெட்ட எண்ணங்கள் எங்கோ போய் மறைந்து கொள்ளும் போலும்!
பிறகு, சுதாரித்து அனைவரும் அமர்ந்தனர்.
கண்ணனிடம் துரியோதனன், ""தூது வந்த நீர் எதற்காக விதுரர் வீட்டுக்குச் சென்றீர்! இங்கே அல்லவா வந்திருக்க வேண்டும்!'' என்றான்.
""விதுரர் வாசல் வரை வந்து என்னை வரவேற்றார். நம்மை எதிர்கொண்டு அழைப்பவர் யாரோ அவர் வீட்டுக்கு மட்டுமே விருந்தினன் செல்ல வேண்டும். நீயோ, நான் வருவது தெரிந்தும் என்னை வரவேற்க வரவில்லையே! அழையாத வீட்டுக்கு எப்படி விருந்தாளியாக முடியும்? இன்னொன்றையும் கேள் துரியோதனா! நான் உன் வீட்டுக்கு வந்து உணவருந்தி இருந்தால், நன்றி மறக்கக்கூடாது. உனக்கு சாதகமாகவே இருக்க வேண்டும். நானோ பாண்டவர் தூதன். அவர்களுக்கு சாதகமானவன். அதன் காரணமாகவும் நான் உன் இல்லத்துக்கு விருந்தாளியாக வரவில்லை,'' என்றார் கண்ணன்.
இப்போது புரிகிறதா! நீங்கள் யார் வீட்டுக்கு விருந்துக்குச் செல்ல வேண்டும் என்பதும், அங்கு விருந்து சாப்பிட்டு விட்டால், அவர்களுக்கு நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற விஷயமும்!

No comments:

Post a Comment