Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 96 மனதை மாற்றிய சாம்பல்

மாணிக்கத்திற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. திருநீறை வெறும் சாம்பல் என்று நண்பர்களிடம் சொல்வான். அவனுக்கு பிறர் பொருளைத் திருடி சாப்பிடுவதில் அலாதி இன்பம்.ஒருமுறை, ஒரு தோட்டத்துக்குச் சென்ற அவன் அங்கிருந்த மாம்பழங்களை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து மூடையாகக் கட்டி வெளியே கொண்டு சென்றான்.
ஒன்றிரண்டு பழங்களை ருசித்து விட்டு, மற்றதை நல்ல விலைக்கு விற்றான். தோட்டக்காரனுக்கு கடும் வருத்தம். கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்த மாமரத்தின் பழங்களை யாரோ பறித்துச் சென்று விடுகிறார்களே என்று வாடினான்.
இப்படியே சில நாட்கள் தொடர்ந்தது. சுதாரித்துக் கொண்ட தோட்டக்காரன் இரவு வேளையில் தோட்டத்தைச் சுற்றி சில காவலர்களை நிறுத்தினான். அவனும் ஒருபுறம் நின்று கொண்டான். இதையறியாத மாணிக்கம் தோட்டத்துக்குள் புகுந்து பழங்களை பறிக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்ட காவலர்கள் மெதுவாக அவன் நிற்குமிடம் நோக்கிச் சென்றனர். ஆனாலும், காய்ந்த இலைகளின் மேல், அவர்கள் நடந்து வந்த சப்தத்தைக் கேட்ட மாணிக்கம் <உஷாராகி விட்டான். மறைவாக நின்று, அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த சாம்பலை நெற்றியிலும், உடலிலும் குழைத்துப் பூசிக்கொண்டு தவத்தில் இருப்பது போல் நடித்தான். காவலர்கள் திருடன் யாரையும் காணாமல், யாரோ ஒரு சாமியார் மட்டும் அங்கே இருப்பதைப் பார்த்து வணங்கினர். போலிச்சாமியாரோ நிஷ்டை கலையாதது போல் நடித்தார்.மறுநாள், ஊருக்குள் இந்த தகவல் செல்ல, மக்கள் பழம், தேங்காய், கற்பூரம், காணிக்கைப் பணத்துடன் தோட்டத்தில் இருந்த சாமியாரைத் தரிசிக்க வந்தனர். மாணிக்கம் அவர்களை ஆசிர்வதிப்பது போல நடித்து, தானாக கிடைத்த பணத்தை வாரிக்கொண்டான். ஆனால், அவன் மனம் மாறிவிட்டது. நாத்திகனாக இருந்த போது, திருட்டு புத்தி தான் இருந்தது. இப்போது, போலியாக சாம்பலைப் பூசியதற்கே மக்கள் இவ்வளவு மரியாதை தந்தனர். நிஜத்திலேயே சாமியாராகி விட்டால், தன் மதிப்பு இன்னும் அதிகரிக்குமே என எண்ணினான். நாத்திகத்தை கைவிட்டான். ஆத்திக நூல்களைப் படித்தான். நிஜமாகவே சாமியாராகி விட்டான். ஆத்மதிருப்தி கிடைத்தது. மக்களுக்கு நல்லதைச் செய்ய ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment