Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 97 கடல் தாண்ட வைத்த கரடி

பிரம்மா படைக்கும் தொழிலை வேகமாகச் செய்து கொண்டிருந்தார். ஓய்வு ஒழிச்சல் என்பதே இல்லை. இதனால், தன்னால் ஸ்ரீமன் நாராயணனை வணங்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. எனவே கரடி வடிவெடுத்து பூலோகம் வந்தார்.அப்போது நாராயணன், ராமபிரானாக பூமிக்கு வந்து சீதையைப் பிரிந்தார். அவளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மூளையாக செயல்பட்டார் ஜாம்பவான். சீதை இலங்கையில் இருந்தபோது, வானர வீரர்கள் அவளைத் தேடிப் புறப்பட்டனர். இடையே கடல் குறுக்கிட்டது. அப்போது, அனுமானுக்கு அவரது பறக்கும் சக்தியை எடுத்துச் சொன்னார். உடனே அனுமான் இலங்கைக்கு பறந்து சென்று சீதையின் இருப்பிடத்தை அறிந்து வந்தார்.இலங்கை சென்ற பிறகு ராவணனின் மகன் இந்திரஜித் அனைவரையும் அடித்து வீழ்த்தினான். அவனுக்கு பதிலடி கொடுத்தவர் ஜாம்பவான் மட்டுமே. ஒரு கட்டத்தில் ராவணனைக் கூட மயக்கம் வருமளவுக்கு அடித்து வீழ்த்தினார் ஜாம்பவான்.அயோத்தியில் ராமபட்டாபிஷேகம் முடிந்து அனைவரும் ஊர் திரும்பினர். ஜாம்பவானுக்கு அவரைப் பிரிய மனமில்லை. கண்ணீர் வழிந்தது. ராமன் அவரைத் தேற்றி, ""ஜாம்பவான், உங்கள் இதயத்தில் நான் நிரந்தரமாக இருப்பேன். கவலையின்றி செல்லுங்கள். அடுத்த யுகத்தில் நான் உங்களுக்கு ராம வடிவிலேயே காட்சி தருவேன்,'' என வாக்களித்தார்.
துவாபரயுகத்தில் திருமால் கிருஷ்ணனாக அவதரித்தார். யாதவர்களில் ஒருவரான சத்ராஜித் என்பவர் சூரிய பகவானை வழிபட்டு அவரிடமிருந்து "சியமந்தகம்' என்னும் மணியைப் பெற்றார். நல்ல குணமுள்ளவர்களுக்கு இஷ்டப்பட்டதை எல்லாம் தரும் மணியாக அது இருந்தது. இந்த மணி பற்றிய விபரம் கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. அவர் கம்சனைக் கொன்று விட்டு மதுராபுரிக்கு <உக்ரசேனனை மன்னனாக்கி இருந்தார். அவனது நாட்டு மக்களுக்கு இந்த மணியைக் கொண்டு நன்மை செய்யலாம் என்ற எண்ணத்தில், மணியை உக்ரசேனனிடம் ஒப்படைக்கச் சொன்னார். சத்ராஜித் மறுத்து விட்டார்.
ஒருமுறை சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன் அந்த மணியை அணிந்து öக்õண்டு வேட்டைக்குச் சென்றான். சென்ற இடத்தில் ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டு மணியை எடுத்துக் கொண்டு ஒரு குகைக்குள் புகுந்தது. அங்கு ஜாம்பவான் தன் மகள் ஜாம்பவதியுடன் தங்கியிருந்தார். சிங்கத்துடன் போராடிக் கொன்று சியமந்தகப் மணியைக் கைப்பற்றினார். அதை தன் மகளுக்கு அணிவித்தார்.
இதை தவறாகப் புரிந்து கொண்வ சத்ராஜித், கிருஷ்ணன் தான் பிரசேனனைக் கொன்று மணியைப் பிடுங்கிச் சென்று விட்டதாகக் கருதினான். அவர் தன் மணியைப் பறித்துக் கொண்டார் என்று தவறாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தான். கிருஷ்ணர் இதைக் கேள்விப்பட்டு, தன் மீதான களங்கத்தை துடைக்க விரும்பினார்.ஜாம்பவான் சிறந்த மல்யுத்த வீரர். அவரிடம் யார் மோதியும் ஜெயிக்க முடியாது. தனக்கு ஈடான சக்தியுள்ள ஒருவனுடன் போராட வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. இந்த சமயத்தில் கிருஷ்ணர் மணியைத் தேடி காட்டுக்கு வந்தார். ஜாம்பவதியின் கழுத்தில் கிடப்பதைப் பார்த்த அவர் அவளைப் பின் தொடர்ந்தார். அவள் பயந்து போய் அப்பாவிடம் சென்று அடைக்கலமாகி, யாரோ ஒரு இளைஞன் தன்னை விரட்டி வருவதாகச் சொன்னாள். ஜாம்பவான் கோபம் மேலிட அந்த இளைஞனுடன் மோதினார். அவர் நாராயணனின் அம்சம் என்பது அவருக்குத் தெரியாது. இருவருக்கும் கடும் மல்யுத்தம் நடந்தது. 27 நாட்கள் நீடித்தும் போட்டி முடிவுக்கு வரவில்லை. ஒரு கட்டத்தில், ஜாம்பவான் தளர்ந்து விட்டார். அந்த இளைஞனிடம், ""இவ்வளவு வலிமை மிக்க நீ யார்?'' எனக் கேட்ட போது ராமனாக காட்சி தந்தார் நாராயணன். அவருக்கு சியமந்தக மணியைத் தந்தது மட்டுமின்றி, தன் மகளையும் திருமணம் செய்து வைத்தார்.
இவ்வாறாக ஜாம்பவான் நம் உள்ளங்களில் உயர்ந்து நிற்கிறார். கிராமங்களில் இவரை "கரடி மாடசுவாமி' என்ற பெயரில் காவல் தெய்வமாக மக்கள் வணங்குகின்றனர்.

No comments:

Post a Comment