Wednesday, June 1, 2011

கல்வி வளம் தரும் புத பகவான்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று பழமொழி உண்டு. சூரியக்குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோளான புதன், சுட்டெரிக்கும் சூரியனுக்கு அருகில் இருப்பதாலேயே சாதரணமாக கண்களுக்கு புலப்படுவதில்லை. காலை அல்லது இரவின் தொடக்கத்தில் மட்டுமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.

சோதிட சாஸ்திரத்தில் புதனை கல்வியின் நாயகன் என்று அழைக்கின்றனர். "மாதுல (மாமன்), கல்விக்காரகர்' என்று அழைக்கப்படும் புதன் உடலில் நரம்புக்கும், தோலுக்கும் அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை கை கூடும்.

திருவெண்காடு

நவக்கிரஹ ஸ்தலங்கள். புதன் கிரகத்திற்கான கோவில் சீர்காழி அருகில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக - வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

இங்கு இறைவன் பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வராக எழுந்தருளியிருக்கிறார். காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்துள்ளனர்.

கல்வியில் சிறக்க

புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசிக்க கூட்டிக்கொண்டு வந்து பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை..

படைப்புக் கடவுளான பிரம்மா இந்தத் தலத்தில்தான் அம்பிகையின் முன் தவமிருந்து ஞானம் பெற்றாராம் அதனால்தான் இங்குள்ள அம்பிகைக்கு பிரம்ம வித்தியாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது என்கின்றன தலபுராணங்கள். கல்வி மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெறத் திணறும் குழந்தைகளை இத்தலத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் இறைவியை வணங்கச் செய்வது நன்மையளிக்கும்! இசைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் மேன்மை பெற வழிபட வேண்டிய ஸ்தலம் இது. உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம்

புதன் தசை நடப்பவர்கள்

புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். அதனால் பிரதி புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சுலபமான பரிகாரமாகும். புத பகவான் ஜனவசிய (வியாபார) பிரிவினைச் சேர்ந்தவர். அதனால் வியாபாரிகள் இவரின் அருளைப் பெற ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும். ​மேலும் மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் வாக்கு வன்மையும், கல்வியில் மேன்மையும் உண்டாகும்.

No comments:

Post a Comment