Sunday, July 10, 2011

கண்ணேறுபடுதல்-

வானியல், ஜோதிடம், எண் கணிதம், வேதியியல், கணிதவியல், வடிவியல் போன்ற பல கலைகளையும் ஒன்றிணைத்து- மந்திர, தந்திரங்களை உபயோகித்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம். சொல்லொணா துயரங்களில் நாம் ஆட்படும்போது அதிலிருந்து நிவாரணம் பெற பெரிதும் உதவுபவை யந்திரங்கள் என்றால் மிகையல்ல.

கண்ணேறுபடுதல்- கண்திருஷ்டி என்பது எல்லாவற்றுக்கும் பொதுவானது. உயர்ந்த கட்டடங்களைக் கட்டும்போதும் புது வாகனம் வாங்கினாலும் கண் திருஷ்டி யந்திரம் வைப்பது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. அதனை பொதுக்கருத்தாக எண்ணி சென்னை மாநகராட்சி கண்ணில் படும் சுவரிலெல்லாம் வண்ணமயமான காட்சிகளை வாரி இரைத்துள்ளனர். இதைக் கண்டு சென்னை மாநகரம் பெருமிதம் கொள்கிறது. குப்பைமேடுகள் திடீரென தோன்றினாலும் அதன் பின்னும் அழகிய வண்ணவண்ண காட்சிகள்! அதிலும் பல மந்திர- தந்திர- யந்திர காட்சிகள் மனநிறைவைத் தருகின்றன. இதை பிற மாநகராட்சிகள் கடைப்பிடித்தால் வாஸ்து குறைகள் அகன்றுவிடும்.

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்பது அனுபவ பழமொழி. ஒரு நாட்டுப் புறப் பாடலைப் பாருங்கள்.

"கண்ணான கண்ணனுக்கு
கண்ணூறு பட்டுச்சுன்னு
சுண்ணாம்பும் மஞ்சளும்
சுத்தியெறி கண்ணனுக்கு
மிளகாயும் உப்பும்
வீசியெறி கண்ணனுக்கு.'

பாதம்பட்ட மண்ணெடுத்து, உப்பு, ஐந்து மிளகாய் வற்றல், சுண்ணாம்பு, மஞ்சள் இவற்றை துணியில்கட்டி, குழந்தையின் தலைக்குமேல் மூன்று முறை வலது, இடது- இடது, வலதாகச் சுற்றி, உடம்பை மேலிருந்து கீழாகத் தடவிய பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண் திருஷ்டி மறைந்துவிடும் என்பது பாரம்பரிய முறை.


ஜெர்மனியில், கால்நடைகளுக்கு ஆத்மா இல்லை என்றும்; எனவே அது அந்த எஜமானர்களுக்கும் வீட்டாருக்கும் வரும் தீவினைகளையும் ஏவல்களையும் தடுத்து நிறுத்திவிடும் என்றும் நம்புகின்றனர். நாமும் சனியின் பார்வை, கெட்ட கண்திருஷ்டி விலக கருப்பு பசுவுக்கும் கருப்பு நாய்க்கும் உணவு தந்தால் தொல்லைகள் விடை கொடுக்கும்.

தீய பார்வையுடையோர் கால்நடைகளைப் பார்ப்பதால் அவற்றுக்கு நோய் உண்டாகும் என்பார்கள். பசுக்கள் திடீரென்று பால் கறப்பதைக் குறைக்கும். இதற்குப் பரிகாரமாக சங்கஞ்செடியின் முள்ளை கிளையுடன் ஒடித்து வந்து, பால் கொடுக்கும் காம்பில் தடவி மந்திரம் சொல்வார்கள். நொச்சி இலையை கிளையோடு தடவினாலும் கண் திருஷ்டி அகன்றுவிடும். இவையாவும் கால்நடை மருத்துவர்கள் உருவாவதற்குமுன் ஈடேறியவை. எப்படியாவது உயிரையும் மிருகத்தையும் காப்பாற்ற, "பட்ட கண்ணு, பாழுங்கண்ணு, கொடுங்கண்ணு, கொள்ளிக்கண்ணு ஒரு கண்ணும் படக்கூடாது; பட்டிருந்தாலும் விலகிப்போ' என ஓதுவார்கள்.

"ஓம் மாதங்கி, ஓம் பரமேஸ்வரி, பார்வதி, லட்சுமி, கொம்போடே வந்த கோமாரி, அழல் வெக்கை, சீத வெக்கை தோன்றும் எப்பேற்பட்ட வியாதியெல்லாம் நான் ஓதிய தண்ணீரோடு போகப் போக சுவாகா' என்று மந்திரம் சொல்லி மாடுகளுக்குத் தண்ணீரைப் பருகச் செய்வார்கள்.

புல்லும் தண்ணீரும் ஓதிக்கொடுக்க கால்நடை யந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த யந்திரத்தை மாட்டுத் தொழுவங்களில் எழுதி வைத்தால் மாடுகள் காணாமல் போவதில்லை. புல் மேயச் சென்ற மாடுகள் மாலையில் தொழுவம் வந்துவிடும்.

மாதர்களுக்கு...


சிலருக்கு குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் சரியாகச் சுரப்பதில்லை. திருஷ்டி ஏற்பட்டாலும் இந்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில் அதற்கான எண் யந்திரத்தை வெள்ளித் தகட்டில் சிறிதாக எழுதி, இடுப்பில் தாயத்தாகக் கட்டிக் கொண்டால் திருஷ்டிகள் அகன்றுவிடும். அடிக்கடி அழுத பிள்ளையும் சுகம் பெறும். இதை வெள்ளை அட்டையில் எழுதி வைத்துக் கொண்டாலும் போதுமானது.

பிரசவ நாளில் அந்த அறையில் சிறிது பாலும் வெள்ளை சர்க்கரையும் கலந்து வைத்து, பிரசவம் முடிந்ததும் அந்தப் பாலை அரச மரத்தின் வேர் பாகத்தில் ஊற்றிவிட்டால், பிரசவகால திருஷ்டிகளிலிருந்து விடுபடலாம்.

மந்திரம் ஓதுவதற்கு எது தேவை?
சிவசக்தி மந்திரம் ஓதுவதற்கு ருத்திராட்ச மாலை.

விஷ்ணு மந்திரம் ஓதுவதற்கு கிருஷ்ண துளசி மாலை.

பண வரவுக்கு 30 ருத்திராட்ச மாலை.


மோட்சம் அடைய- 50 ருத்திராட்ச மாலை.


பொது ஆசைகள் நிறைவேற 27 ருத்திராட்ச மாலை.


சிற்றின்பச் சிறப்பு பெற 54 ருத்திராட்ச மாலை.


எல்லா எண்ணங்களும் நிறைவேற 108 ருத்திராட்ச மாலை.


பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக உலகளாவிய எச்சரிக்கை உலா வருகிறது. சாஸ்திர, சம்பிரதாயமாக என்ன செய்யலாம்?


வீட்டு விலக்கான பெண்கள் முதல் நான்கு நாட்கள் கலவியில் ஈடுபடக் கூடாது.


பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூசம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நாட்களிலும் உடலுறவு வேண்டாம். பிதுர் திதி மற்றும் கிரகணத்தன்றும் வேண்டாம்.

பெண் குழந்தை பிறக்க: விலக்கிற்குப்பின் 5, 7, 9, 13-ஆம் நாட்களில் உடலுறவு கொண்டால் பெண் மகவு, (7 மற்றும் 11-ஆவது நாளில் உறவு கொண்டால் குடும்பத்திற்குக் கேடான பெண் குழந்தை பிறக்கும் என்பது பொதுக் கருத்து.)

ஆண் குழந்தை பிறக்க: 6, 8, 10, 12, 14, 16-ஆவது நாட்களில் உறவு கொண்டால் ஆண் மகவு பிறக்கும். 8, 14-ஆவது நாள் உறவில் பிறக்கும் குழந்தை கல்வியில்- திறமையில்- புத்தியில் ஜொலிக்குமாம்.
12, 16-ஆம் நாளில் இணைந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்குமாம்.

No comments:

Post a Comment