Saturday, July 23, 2011

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாமா?

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வைக்கலாம் என்று பொதுவான ஒரு கருத்தை சொல்வார்கள். ஆனால், இப்படி பொய் சொல்லி திருமணம் செய்வது தவறு என்கிறது சாஸ்திரம். அப்படியானால், இந்த கலவடை எப்படி உருவானது? ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம் என்பதை ஒருவருக்கொருவர் ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. நிச்சயிக்கப்பட்ட திருமணம், கடைசி நேரத்தில் நின்று போகும் பட்சத்தில் அதை நடத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று சாஸ்திரம் அனுமதி தந்திருக்கிறது. ஒரு இல்லத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மணமேடையும் அமைந்தாயிற்று. அப்போது ஏதோ ஒரு பிரச்சனை எழுகிறது. இரு வீட்டாரும் தகராறு செய்துகொள்கின்றனர். திருமணம் நின்றுவிடுமோ என்ற சூழ்நிலை... இந்த சூழ்நிலையில் அந்த திருமணத்தை ஏதாவது ஒரு பொய்சொல்லி நடத்த சாஸ்திரம் சம்மதிக்கிறது. அவ்வாறு பொய் சொன்னால் அது பொய் ஆகாது. அதற்குரிய தண்டனையும் கிடைக்காது. ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்யும் போது சில நன்மைகள் கருதியும் பொய் சொல்லலாம். சீதாதேவியே ஒரு முறை பொய்சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆஞ்சநேயர் அசோக வனத்தை அழித்தார். அப்போது அங்கிருந்த ராட்சஷிகள் சீதையிடம், அந்த குரங்கு எங்கிருந்து வந்ததென உனக்கு தெரியுமா? உன்னிடம் பேசிக் கொண்டிருந்ததாக சொல்கிறார்களே என கேட்டதற்கு, யாரென்றே எனக்க தெரியாது. ஒரு வேளை இந்த வனத்தை அழித்தால் உங்கள் அசுர கூட்டத்தை சேர்ந்ததாக இருக்குமோ என நான் எண்ணியிருந்தேன், என பொய் சொல்லி ஆஞ்சநேயரை காப்பாற்றி விட்டாள். எனவே அவசியமான நேரத்தில் ஒருவரை காப்பாற்ற மட்டுமே பொய் சொல்லலாம். திருமணம் நடக்கும் முன்பே பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது பிற்காலத்தில் பிரச்சனைகளைத் தான் உருவாக்கும்.

1 comment:

  1. அது ஆயிரம் பொய் சொல்லி இல்லை. ஆயிரம் பேரிடம் போய் சொல்லி திருமணம் நடத்து

    ReplyDelete