Sunday, July 24, 2011

“உணவே மருந்து, மருந்தே உணவு”---அறுசுவை உணவு

நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களை சார்ந்துள்ளது. உடலுக்கு ஏற்ற உணவாக உண்ண வேண்டும் என்பதற்காகவே அறுசுவைகளை நம்முன்னோர்கள் நமக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளனர். துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு ஆகியவையே இந்த ஆறுசுவைகள்.

உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை “யாக்கை” என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர் நம் முன்னோர்கள். இதனைக் கொண்டுதான் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்று கூறியுள்ளனர். அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்துள்ளது.

அறுசுவைகளின் தொடர்பு

துவர்ப்பு சுவை இரத்தத்தைப் பெருக்குகின்றது, இனிப்பு சுவை தசையை வளர்க்கின்றது, புளிப்பு சுவை கொழுப்பினை அதிகரிக்கின்றது, கார்ப்பு சுவை எலும்புகளை வளர்க்கின்றது, கசப்பானது நரம்புகளை பலப்படுத்துகின்றது, உவர்ப்பு சுவை உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது.

துவர்ப்புச் சுவை

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளிலும் பாக்கு போன்றவற்றிலும் துவர்ப்பு சுவை அதிகம் காணப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற சுவை இது. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப் போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப் போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமானால் இளமையில் முதுமை தோற்றத்தை ஏற்படுத்தும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

இனிப்புச் சுவை

அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகளிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் காணப்படுகின்றது.

மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவை இனிப்பாகும். ஏராளமானோர் இந்த சுவையை விரும்புகின்றனர். குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

புளிப்புச் சுவை

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை அதிகம் காணப்படுகிறது.

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமானால் பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். உடல் தளரச் செய்யும் தாக உணர்வு அதிகமாகும்.

காரச் சுவை (Pungent)

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்றும்.

கசப்புச் சுவை

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்தசுவை மிகுதியாய் உள்ளது.

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இதுதான். மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் கொண்டு செல்லும்.

உவர்ப்புச் சுவை

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் காணப்படுகின்றது.

தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவை களைச் சமன் செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.

இது அதிகமாயின் உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். தோல் தளர்வினை ஏற்படுத்தி சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.

இந்த அறுசுவைகளையும் நாம் உண்ணும் உணவில் சரிவிகிதமாக சேர்த்துக்கொண்டால் நம்மை நோய் அண்டாது என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

No comments:

Post a Comment