Sunday, July 3, 2011

வாரியார் பொன்மொழி

 வாரியார் பொன்மொழி

பூஜை
நினைக்க நெஞ்சத்தையும், பேசுவதற்கு வாயையும் இந்த இரண்டையும் தாங்கி நின்று தொழிற்படுகிற உடம்பையும் தந்த இறைவனை, நாம் ஒவ்வொருவரும் நன்றி மறவாமையின் பொருட்டுப் பூவும் நீரும் கொண்டு வழிபட வேண்டும். பூ- பூர்த்தி, ஜா-உண்டாக்குவது. மல மாயா கன்மங்களைப் பூர்த்தி செய்து சிவஞானத்தை உண்டாக்கும் புனிதமான செயல் பூஜா எனப்படும். பூஜா என்ற சொல்லே பூஜை என வந்தது. பூஜைக்கு முக்கியமான சாதனங்கள் பூவும் நீருமாகும். நல்ல மலர்களைக் கொண்டு இறைவனை நாள்தோறும் அர்ச்சனை செய்ய வேண்டும். அதுவே மெய்யும் கையும் பெற்றதற்கு பயனாகும்.

பாவத்தை ஒளிக்காதே

ஒருவன் எந்தப் பாவத்தொழிலை எவ்வளவு மறைவாக ஒருவரும் அறியாமல் செய்தாலும், அதற்கு இராப்பகல்களும் ருதுக்களும் சாட்சியாக இருக்கும். எனவே பாவத்தைச் செய்யாதே. ஒருவன் நல்ல விசயத்தைச் செய்யும் போது, ஒருவேளை பாவம் செய்யும்படி நேரிடலாம். அதனால் அவனுக்குச் சிறிதும் பாவமே வராது. அதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் ஒளித்து வைத்தால் தான் பாவம். பொதுவாக தரும சங்கடங்களில் அவசியம் செய்யும்படி நேர்ந்த பாவத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் சிறிதும் கூசாமல் வெளியிடுவதே அதற்குத் தக்க பரிகாரமாகும். 

சத்தியம்

சத்தியத்திலும் உயர்ந்த தர்மமில்லை. அசத்தியத்திலும் தாழ்ந்த அதர்மமில்லை. பூகம்பத்தால் உலகம் அசையினும் சத்தியம் அசையாது. அதை மேற்கொண்டவன், எக்காலத்திலும் தாமரைத் தடாகத்தில் இருப்பது போல் இன்பமுற்றிருப்பான். ஆதலால் எக்காலத்திலும் யாவரிடத்தும் சத்தியத்தையே பேச வேண்டும். அவ்வாறின்றி உண்மையை ஒழிப்பதனால் பற்பல கேடுகள் உண்டாகும். உண்மையை ஒழிப்பவனுடைய தனம், தானம், தர்மம், கல்வி முதலியவை தேய்பிறைச் சந்திரனைப் போல் தேயும்.

உண்மை மனிதன்
நான் யார்? என் உள்ளமார்? நான் எங்கிருந்து வந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? இந்த உடம்பு தானே வந்ததா? ஒருவன் தந்து வந்ததா? தந்தவன் தன் பொருட்டுத் தந்தானா? என் பொருட்டுத் தந்தானா? நான் எங்கே போக வேண்டும்? இந்த உடம்பைத் தந்த ஒருவன் தன்மை யாது? அவனை அடையும் வழி யாது? அடைந்தவர்கள் யார்? இவை போன்ற வினாக்களை உள்ளுக்குள் கேட்டுக் கொண்டு, அவைகளைப் பற்றி ஆழமாக நினைத்துத் தகுந்த விடைகளை அறிந்து, அறவொழுக்கத்தில் நிற்பவன் தான் மனிதன். இல்லையேல் அவன் மனித உடம்பெடுத்த விலங்கு தான்.

பெரும் பயன் பெற 

இறைவழிபாடு குறைகளை நீக்கி நிறைவு தரும். முக்கியமாக சோமவாரம், சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்தரம், கந்தர் சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, சூரிய சந்திர கிரகண காலங்கள், திருவாதிரை போன்ற புண்ணிய நாட்களில் அன்புடன் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களினின்றும் நீங்கி, புண்ணியம் பெற்று இகம், பரம், வீடு என்ற மும்மை நலங்களையும் எளிதில் பெறுவார்கள்.
 

விரத நாட்களில் 

காலத்துக்கு அதிக வலிமை உண்டு. காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும். "பாலோடாயினும் காலமறிந்து உண்" என்பது பழமொழி. விரத நாட்களில் உண்ணாது, நோன்பிருந்து ஆலய வழிபாடு செய்து, திருமுறைகளை ஓதி, திருவைந்தெழுத்தை ஜபிக்க வேண்டும். ஆலய வழிபாடு உடல் நலத்தையும், திருமுறைகள் ஓதுவது வாக்கு நலத்தையும்,பஞ்சாட்சர ஜபம் மன நலத்தையும் தந்து காக்கும். வினைகள் விலகும். அருளாற்றல் உண்டாகும்.

நாம் டன் பட்டவர்களே 

 
துன்பத்திற்கெல்லாம் பெருந்துன்பம் கடன் பட்டவனுடைய துன்பமே. அதனாலன்றோ "கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்றார் கம்பர். நமக்கு அருமையான உடல், நல்ல மனம், புத்தி முதலிய கரணங்களையும், நன்கு இருப்பதற்கும் உலவுவதற்கும் இந்த உலகத்தையும், இதன் கண்ணே வாழ்ந்து அனுபவிப்பதற்குப் போகத்தையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறார். அவரிடத்தில் நாம் கடன் பட்டவர்களே. மனம், மொழி, மெய்களால் அந்த ஆண்டவனை வழிபடுவது தான் நம் கடனைத் தீர்க்கும் வழியாகும். அந்தத் தனிப்பெரும் தலைவனை வாயார வாழ்த்தி வணங்க வேண்டும். நெஞ்சார நினைக்க வேண்டும். தலையாரக் கும்பிட வேண்டும். 

வினைகளைச் சாம்பலாக்கும்


வெயில் கொளுத்துகிறது. வெயிலில் பஞ்சை வைத்தால் அது வெதும்புமேயன்றிச் சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை வெயிலிலே வைத்து அதன் கீழே வருகிற வெயிலில் பஞ்சை வைத்தால் அது எரிந்துவிடும். அந்த ஆற்றல் நேர் வெயிலுக்கு இல்லை. பரந்து விரிந்து இருக்கின்ற வெயிலின் ஆற்றலை ஈர்த்து மிகுதிப்படுத்தித் தன் கீழே அனுப்புவதனால் சூரிய காந்தக் கண்ணாடியின் கீழேவருகிற வெயிலுக்குப் பஞ்சை கொளுத்துகிற ஆற்றல் ஏற்படுகிறது. ஆலயத்திலுள்ள மூர்த்தி சூரிய காந்தக் கண்ணாடியைப் போன்றது. மற்ற இடங்களிலே இறைவனை வழிபட்டால் வினைகள் வெதும்பும். ஆலயத்திலுள்ள மூர்த்திகளுக்கு முன் வழிபட்டால் வினைகள் வெந்துசாம்பலாகும். ஆதலால் ஆலய வழிபாடு இன்றிமையாதது.

அனைவருக்காகவும் வேண்டு
 
இறைவனிடம் நீ நின்று அன்பு செய்யும் போது, "ஆண்டவனே! உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் இன்புற அருள்புரிவீர்" என்று வேண்ட வேண்டும். அவ்விதமின்றி "என்னைக் காப்பாற்று" என்று மட்டும் வேண்டாதே. உலகத்திலுள்ள உயிர்களை எல்லாம் காப்பாற்று என்று வேண்டுவாயானால், அந்த உயிர்களில் நீயும் ஒருவன் தானே. என் வயலுக்கு மழை பொழிய வேண்டும் என்று வேண்டுவதை விட உலகமெல்லாம் மழை பொழிய வேண்டும் என்று வேண்ட வேண்டும். உலகமெங்கும் மழை பொழிந்தால் உன் வயலிலும் அந்த மழை பொழியுமன்றோ?

வழிபடும் உருவத்தில் அருள்வார்
 
 விளக்குக்கு ஒரு நிறமுமில்லை. ஆனால் பல நிறங்களுடைய கண்ணாடி கூட்டுக்குள் அந்த விளக்கு எரிகிறது. பச்சை நிறமுடைய கண்ணாடியின் பக்கம் நின்று பார்த்தால் பச்சையாகவும், சிவப்பு நிறமுடைய     கண்ணாடியின் பக்கம் நின்று பார்த்தால் சிவப்பாகவும், நீல நிறமுடைய கண்ணாடியின் பக்கம் நின்று பார்த்தால் நீல நிறமாகவும் தோன்றும். நிறமில்லாத விளக்கு,  கண்ணாடியால் நிறத்தைத் தாங்கியது போல் தோன்றுகிறது. அதுபோல் பக்தன் எந்த எந்த வடிவாக ஆண்டவனை வழிபடுகிறானோ, அந்த அந்த வடிவத்தை இறைவனும் தாங்கி அருள் புரிகின்றான்.

 
சிறந்த காட்சி

கோயிலில் புறக்கண் கொண்டு கண்ட இறைவனை, உள்ளமாகிய கோயிலில் அகக் கண்ணால் காண முயற்சி செய். இறைவனுடைய சொரூபம் உனது உள்ளக் கமலத்தில் தோன்றும். அந்தக் காட்சி தான் சிறந்த காட்சி. அந்தக் காட்சியால் வரும் இன்பத்தை வேறு எதனாலும் பெறவே முடியாது.

ஞானவடிவம் காண

உன் உடம்பின் இரு பகுதிகளையும் காண வேண்டுமானால் நீ இரண்டு கண்ணாடிகளுக்கு நடுவே நின்று காண்கிறாய் அல்லவா. அதுபோல் பரஞானம், அபரஞானம் என்ற இரு கண்ணாடிகளினால் இறைவனுடைய ஞானவடிவத்தைக் காணலாம்.

கருணை வடிவமே இறைவன்

இறைவன் உருவம், நாமம், குணம், குறி யாவும் இல்லாத பரம்பொருள். ஆனால் அந்தப் பரமபதி உயிர்களை உய்விக்கும் பொருட்டு அருள் உருவம் தாங்குகின்றான். கருணை தான் அவனுடைய வடிவம். தண்ணீர் அதிகமாகக் குளிர்ந்த போது கட்டியாக (ஐஸ்) ஆகிறது. மீண்டும் அது தண்ணீராகக் கரைந்துவிடும். அதுபோல் கருணையின் மிகுதியால் இறைவன் எல்லையற்ற அருளே ஒரு திருமேனியாகக் கொள்கின்றான். அந்த வடிவம் மாயா சம்பந்தமானதன்று. ஏழு தாதுக்களானதன்று.

இறைவனைத் துதி

எங்கும் நிறைந்தவரே! நான் எனக்காக இவ்வுலகில் வாழாமல் ஈசனுக்காகப் பற்றற்ற தொண்டுகளைச் செய்து, எனது ஐம்புலன்களை அடக்கி, மனதை ஒரு நிலையில் நிறுத்தி, ஆணவ மலத்தை ஒழித்து, என்னை அறிந்து ஆத்மா பரம சாந்தி நிலையை அடையக் கருணை புரிவீராக என்று இறைவனைத் துதி.

பண்பு சிறப்பைத் தரும்
மனிதனுடைய நற்குணங்களில் நனி சிறந்து விளங்குவது அடக்கம் ஆகும்.   கல்வி, கேள்வி, செல்வம், பட்டம், பதவி முதலிய பல இருப்பினும் அடக்கம் என்ற ஒன்று இல்லையானால் அவன் சிறப்படையான். பணிவுடையார் தமது வாழ்வில் சிறப்புறுவார்கள்.
அடக்கம்
ஒரு குழம்பில் புளி, மிளகு, காயம், காரம் என பல இருப்பினும் உப்பு என்ற ஒன்று இல்லையானால் உண்பதற்கு உகந்ததாகாது. உணவுக்கு உப்பு இன்றியமையாதது போல் வாழ்வுக்கு அடக்கம் இன்றியமையாதது. 
வளர்க்க வேண்டியவை
நாம் நாளும் நாளும் உடம்பை வளர்க்கிறோம். தொழிலை வளர்க்கிறோம். வீடு நில புலன்களைப் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால் நமது குணங்களை வளர்க்கிறோமா?
தருக்கு கூடாது
"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும்.

கடவுளைக் காண
புறப்பற்றும் அகப்பற்றும் நீங்கப் பெறாதவர்கள் எத்தனை கோடி காலம் தவம் கிடந்தாலும் கடவுளைக் காண முடியாது. யான், எனது என்னும் பற்று அறுக்காதவரை ஈன சமயத்தார் என்கின்றார் அருணகிரிநாதர். இந்தப் பற்றுகள் இரண்டும் நீங்குவதற்கு உபாயம் பற்றற்ற பரமனை வழிபடுவதேயாகும்.
பிறவிப் பிணியை அகற்ற
 பிறருடைய உடமையோ, உயிருள்ளவையோ நமக்கு எட்டாக்கனி போல் கசக்க வேண்டும். பிறர் பொருளை விரும்புதல் கூடாது. பிறகு தன் பொருளில் வைக்கும் பற்றையும் அறவே அகற்ற வேண்டும். இதுதான் பிறவிப்பிணியை மாற்றும் மார்க்கமாகும்.

 
ஆகார நியமம்

நீ உண்பது பசியை நீக்குவதற்கு மட்டுமன்று, பசியாறுவதுடன் அந்த உணவினால் உடம்புக்கு வலிமையும், உள்ளத்திற்கு நற்பண்பும், நற்குணமும் உண்டாக வேண்டும். உணவினால் தான் நற்குணங்கள் எய்துகின்றன. ஆகார நியமம் மிக அவசியமானது. அறிவையும், அன்பையும் கெடுக்கக் கூடிய ஆகாரத்தை அருந்தாதே. தூய உணவை உண்டு, தூய குணங்களை வளர்த்துக்கொள்.
மெஞ்ஞானம் தலைப்பட
நான், நான் என்ற எண்ணம் தான் அகப்பற்று என்பது. நான் செய்தேன், நான் சம்பாதித்தேன், நான் எல்லோரையும் காப்பாற்றினேன், நான் மிகவும் சமர்த்தன் என்ற எண்ணங்களை அடியோடு தொலைக்க வேண்டும். இந்த நான் என்கிற எண்ணம் என்று நீங்குகிறதோ, அன்றே மெஞ்ஞானம் தலைப்படும். நான் என்ற எண்ணம் கெட்டழிந்தவுடனே, துன்பம் முழுவதும் நீங்கப்பெற்று, அருட்பெருஞ்சோதி தரிசனம் உண்டாகும். ஆனந்தம் உண்டாகும். என்றுமழியா இன்பம் தோன்றும்.
அரியதையும் சாதிக்கலாம்
நீ எப்போதும் பெரியோரைத் துணைக்கொள். கல்லின் தன்மை தண்ணீரில் மூழ்கிவிடுவது. கட்டையின் தன்மை தண்ணீரில் மிதப்பது. சிறிய கல்லோ, பெரிய கல்லோ தண்ணீரில் போட்டால் தண்ணீருக்குள் மூழ்கி அமிழ்ந்துவிடும். ஆனால் ஒரு கல்லைப் படகு மேல் வைத்தால் அந்தக் கல் தண்ணீரில் மிதந்து செல்கிறது. அதுபோல் அறிவாற்றலால் ஆன்ற பெரியோர்களை நீ அடுப்பாயானால் உனது அறிவாற்றலுக்கு இயலாத பெரிய கருமங்களை நீ செய்து முடிப்பாய்.
படுக்கும்போது 
நீ இரவில் படுக்கும் போது, நான் இன்று காலை கண் விழித்து எழுந்தது முதல் இப்போது கண் உறங்கப் படுக்கும் இதுவரை என்ன என்ன நன்மைகள் புரிந்தேன்? என்னால் இன்று யாருக்கு என்ன பயன் உண்டாகியது? மனதாலே, வாக்காலே, காயத்தாலே நான் இன்று செய்த நலங்கள் யாவை? என்று எண்ணுவாயாக.
 
பெரிய இன்பம்
இன்பங்களுக்கெல்லாம் பெரிய இன்பமாவது அறிஞர்களோடு பழகுவதேயாகும். அறிஞரோடு பழகும்போது உண்டாகும் இன்பம் இமையவர் உலகத்திலுமில்லை. மொழிக்கு மொழி தித்திக்கும் இனிய அறிவுரைகளும் அறிஞரிடம் உண்டாகின்றன. அவற்றால் உன் உள்ளம், உயிர், உணர்ச்சி ஆகிய அனைத்தும் குளிரும்.
கற்றவாறு ஒழுகு
நிரம்பவும் படிப்பதைவிட படித்தபடி நின்று ஒழுகுவதற்கு முயற்சி செய். படிப்பது உணவு உண்பது போலே, படித்தபடி ஒழுகுவது உணவு செரிப்பது (ஜீரணமாவது) போலே. உணவு நிரம்ப உண்டாலும் செரிக்கவில்லை யானால் என்ன பயன்? செரிக்காத உணவு துன்பம் செய்கின்ற தன்றோ? ஆதலினால் சிறிது கற்றாலும் கற்ற வண்ணம் நிற்க வேண்டும். "ஓதலின் நன்று ஒழுக்கமுடைமை."
 ஆன்றோர் துணை
அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த ஆன்றோர்களைத் துணையாகக் கொண்டு ஒழுகு. அதனால் உனது வாழ்வு உயர்ச்சி உறும். துன்பத்தில் அழுந்த மாட்டாய். கொடியானது உயர்ந்த மரத்தைப் பற்றிச் சுற்றிக் கொள்வதனால் வானம் நோக்கி உயர்கிறது. இல்லையேல் மண்ணில் படர்ந்து காலினால் மிதிபடுகிறது.
கல்வியின் பயன்
கற்பதும் கேட்பதும் இறைவனை அடைவதற்கே. கல்வியின் பயன் அதுவே. பட்டம் பெறுவதற்கென்றும், சிறந்த அறிவாளி என்று பிறர் மெச்சுவதற்கென்றும், கூட்டத்தில் மொழிக்கு மொழி தித்திக்க இனிமையாகவும் சதுரப்பாடாகவும் பேசுவதற்கென்றும் படிக்காதே. கல்வியின் பயன் கடவுளை அறிதலே.
 
பேரின்பம்

உலகில் சிறந்த பொருள்கள் ஒன்றோடு ஒன்று கூடுவதனால் இனிமை, சுகம் உண்டாகிறது. பாலும் தேனும் கூடுவதனால் சுவை அதிகப்படுகிறது. உணவுப் பொருள்களும் ஒன்றுடன் ஒன்று கூடிச் சுவையாகின்றன. அதுபோல் கணவனும் மனைவியும் கூடி இன்புறுகின்றனர். அந்த இன்பம் அணுத்துணையாயது. இனி பரம்பொருளாகிய பதியுடன் ஆன்மா கூடுவதனால் வரும் இன்பமே பேரின்பம். அந்த இன்பத்தைப் பெற முயற்சி செய்.

இன்றே தருமம் செய்
பின்புறத்திலேயே கூற்றுவன் நிற்கிறான். அவன் எந்த நிமிடத்தில் உயிரைப் பற்றுவானோ தெரியாது. வாழ்க்கையோ நிலையற்றது. நீர் மேல் குமிழிக்கு நிகரானது. "இன்றைக்கோ, நாளைக்கோ, இன்னும் அரை நாழிகைக்கோ, என்றைக்கோ ஆவியிழப்பு" என்ற முதுமொழியினை நினைந்து தீயவைகளை விட்டு இயன்ற அளவில் தருமம் புரிதல் வேண்டும்.
தருமம் செய்வதைத் தடுக்காதே
 பிறர் தருமம் புரியுங்கால் குறுக்கே விழுந்து "எதற்காக இப்படித் தருமம் புரிகிறாய்? சிறிது கொடுத்தால் போதாதா?" என்று தடுக்காமலிரு. அதுவே தருமம் செய்தது போலாகும். இதனையே "ஈவது விலக்கேல்" என்றார் ஒளவையார்.
  
தியானம் செய்
மனத்தை ஒருமுகப்படுத்த முடியாத நிலையிலும் நாம் அவ்வப்போது ஈசனைத் தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்த முயற்சிகளுக்குக் கூட ஓரளவு பயன் இருக்கத்தான் செய்யும். காலப் போக்கில் நம் மனம் அடங்கிவிடும். தியானநிலை அமைதியைத் தரும்.

இறைவனை நோவாதே
இறைவன் பாராட்சமில்லாதவன். விருப்பு வெறுப்பு இல்லாதவன். தண்ணருள் புரியும் தயாநிதி. மாம்பழங்களை அதிகம் உண்டவனுக்கு வயிற்றுவலி உண்டாகும். அவரவர் செய்த வினைகளை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும். நாம் செய்த வினைப்பயனை நாம் நுகர்வது முறைதானே. துன்பங்கள் நேரும்போது, நாம் செய்த வினையையும் நம்மையும் நோவதன்றி இறைவனையும் பிறரையும் நோவக்கூடாது.
 
 இறைவன் எழுந்தருள

குப்பை நிறைந்த இடத்தில் நீ இருக்க அருவருப்பு கொள்வாயன்றோ? அதுபோல் கோபம், காமம், வஞ்சனை, சூது, புலை, கொலை, பொய் முதலிய அசுத்தங்கள் நிறைந்த உள்ளத்தில் இறைவன் இருக்கமாட்டான். ஆகவே இறைவன் உன் உள்ளத்தில் எழுந்தருள வேண்டுமேயானால் உன் உள்ளம் தூய்மையாக இருக்க வேண்டும்.

எப்படி வழிபடலாம்?

உரத்த குரலில் மந்திரம் சொல்லிப் பூஜிப்பது, வாய் மூடி மௌனமாகத் தியானம் செய்வது, இரண்டுமே வழிபாட்டுக்கு உகந்தவை தான். முன்னது பள்ளியில் படிப்பது போன்றதாகும். பின்னது கல்லூரியில் படிப்பது போன்றதாகும். இந்தத் தியான நிலையைப் பயிற்சியினால் அடைய முடியும்.

தூங்குவதில் ஒழுங்கு
இரவில் தூக்கம் வந்தாலொழியப் படுக்கையில் படுக்காதே. தூக்கம் வராதபோது அறநூல்களைப் படி. தூக்கம் வந்தவுடன் படுத்து உறங்கு. காலையில் விழிப்பு வந்தவுடன் எழுந்துவிடு. சோம்பலாக, விழித்துக் கொண்டு படுக்கையில் படுத்துப் புரளாதே.
 இறைவனை நினைத்திரு
எந்த வேளையும் இறைவனை நினைக்க வேண்டும். அது ஆரம்பத்தில் முடியாவிட்டாலும் மூன்று வேளையாவது தவறாமல் நினைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் "இறைவனே, இன்று நல்வழியில் நிற்க அருள்புரி" என்று தொழுங்கள். உணவு உண்ணும் போது "இறைவனே, இந்த உணவினால் எனக்கு நல்ல அறிவும் அன்பும் உண்டாக அருள்புரி" என்று தொழுங்கள். இரவில் படுக்கப் போகும் போது "இறைவனே, இந்த உறக்கத்திலே உன் எண்ணமே நிற்க அருள்புரி" என்று தொழுங்கள்.
 அறிவுடைமையாகுமா?

உன் அகக் காட்சியில் தோன்றாமையால் கடவுளே இல்லை என்று கூறாதே. கலங்கிய தண்ணீரில் சந்திரனுடைய பிம்பம் தோன்றாது. அப்படித் தோன்றாமையால் சந்திரனே இல்லை என்று சொல்வது அறிவுடைமையாகுமா?
செல்கதிக்கு நலம் தேடு
 மரணம் எப்போது வரும்? எந்த இடத்தில் வரும்? எவராலும் அறிந்து கொள்ள முடியாது. அது எந்த விநாடியும் வரும். ஆகையால் நல்ல அறங்களைச் செய்து, தியானம் செய்து, செல்கதிக்கு நலம் தேடு.
அறநெறியில் பொருளை  ஈட்டுக
 உடம்புக்குச் சில ஆண்டுகள் தொடர்புடைய மனைவி மக்களுக்காகத் தீய வழியில் பொருள் ஈட்டி வைத்து விட்டு, நீ கணக்கற்ற பாவத்தைச் சுமந்து கொண்டு போவது எத்துணை மடமை என்று எண்ணிப்பார். அறநெறியில் பொருளை ஈட்டு.
 
 செல்வம் அழியாமல் இருக்க
உன்னுடைய செல்வம் அழியாமல் இருக்க நீ செய்யவேண்டியவை.

ஏழைகளின் கண்களில் இருந்து கண்ணீர் வரவொட்டாமல் நடந்து கொள்.
பிறருடைய பொருள் உனக்கு வரவேண்டும் என்று கனவிலும் கருதாதே.
நியாயம் அல்லாத வழியில் பொருளைச் சேர்க்காதே. 
அணிகலன்கள்
கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்.
காதுக்கு அணிகலன் நல்ல கேள்வி.
வாய்க்கு அணிகலன் சத்தியம்.
கரத்திற்கு அணிகலன் தானதருமம்.
மனத்திற்கு அணிகலன் தியானம்.  
பேரானந்தம்
 சித்தத்தைச் சிவன்பால் வைப்பது தான் தவம். வெறும் வறட்டு வைராக்கியமாக தழையைத் தின்பதோ, குகைக்குள் இருப்பதோ, பட்டினியாக இருப்பதோ தவம் ஆகாது. ஆடு பிறந்த நாள் முதல் தளையையே தின்கின்றது. பெருச்சாளி வளைக்குள்ளேயே இருக்கின்றது. மூட்டைப் பூச்சி பட்டினியாக இருக்கின்றது. இவைகள் மோட்சத்தை அடைவதில்லையே. இறைவனுடைய திருவடிகளை வாயார வாழ்த்த வேண்டும். தலையார வணங்க வேண்டும். இது தான் தவம். இத்தவத்தால் பேரானந்தம் உண்டாகும்.
 

தெய்வம் வரும்
ஒரு கட்டையை கட்டையினால் தேய்த்தால் கட்டைக்குள் இருந்தே நெருப்பு வரும். பாலைக் கடைந்தால் பாலுக்குள் இருந்தே வெண்ணெய் வரும். அதுபோல் தியானம் பண்ணினால் தெய்வம் நமக்குள் இருந்தே வரும்.

மனம் சாந்தி பெற
இறைவனின் பாதத்தை அடைக்கலமாகப் பற்றிக் கொள்வதன் மூலமாக மட்டும் தான் மனச்சாந்தி பெறமுடியும். இறைவன் வற்றாத கருணா சாகரம். இறைவனை எண்ணுவது, அவன் அழகில் லயிப்பது, அவன் புகழ் பாடுவது, அவன் பெருமை பற்றிய உவமைகளைக் கேட்பது ஆகியவை மன நிம்மதிக்கு வழிகாட்டும்.
இறைவன்
இறைவன் நித்தியப் பொருள். ஒரு நீண்ட நூலில் ஆயிரம் மணிகள் கோர்க்கப்பட்டிருக்க, அந்த நூல் அசைந்தால் ஆயிரம் மணிகளும் அசையும். அதுபோன்று எல்லா உயிர்களிலும் நிறைந்து உள்ளவன் இறைவன். அவனை வாழ்த்துவோமாக.
 
அழுதால் பெறலாம்
குழந்தை பிறந்ததும் பாலுக்கு அழுகிறது. தாய் பால் கொடுக்கிறாள். ஐந்து வயதுக் குழந்தை மிட்டாய், விளையாட்டுப் பொருள் கேட்டு அழுகிறது. பெற்றோர் குழந்தையின் ஆவலைப் பூர்த்தி செய்கின்றனர். இதேபோல் பலர் அழுகையின் மூலம் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர். அப்படியிருக்க ஆண்டவனிடம் அழுது மனம் உருகி அவனிடம் வயப்பட்டால் நாம் விரும்புவதை அவன் கொடுக்காமல் விடுவானா?
திருக்கோயில் 
பசுவின் உடம்பு முழுவதும் பால் பரந்து இருப்பினும் கொம்பைப் பற்றி இழுத்தாலோ வாலைப் பற்றி வருடினாலோ பால் கிடைக்காது. மடியில் கை வைத்தால் தான் பால் கிடைக்கும். அதுபோல் இறைவன் கருணை எங்கும் நிறைந்திருந்தாலும் திருக்கோவில் பசுவின் மடி போன்றதாகும். மந்திர யந்திரத்துடன் கூடியதும் ஆன்றோர்கள் வழிபட்டதுமாகிய ஆலயத்திலுள்ள மூர்த்தியை என்புருக அன்புடன் வழிபட்டால் இறைவனுடைய அருள் கிடைக்கும்.

விதியின் ஆற்றல்
இரண்டு பேர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் வெற்றி பெற்றார் என்றால், அவர் மற்றவரைவிட அதிக உறுதியோடும் ஆற்றலோடும் ஓடினார் என்று அறிகிறோம். ஆனால் ஒருவர் வெற்றி பெற்றார் என்பதை அடிப்படையாகக் கொண்டு, மற்றவர் ஓடவே இல்லை என்று சொல்வது பொருந்துமோ?  அதே போல் விதியின் ஆற்றலைவிட, நம் முயற்சிகளின் ஆற்றல் அதிகமாக இருந்துவிட்டால், நாம் விதியை வென்று விட்டதாக கருதுகிறோம். இதனால் விதி என்பது இல்லாமல் போய்விடாது என்பதை மறக்கக்கூடாது.
ஆசைவித்து
வித்துகளெல்லாம் காலம் தவறி விதைத்தால் முளைக்காது. முளைத்தாலும் பயன் தராது. ஆசையெனும் வித்து எந்தக் காலத்தில் எந்தச் சமயத்தில் விதைத்தாலும் முளைத்துவிடும். மறுபிறவியைக் கொடுத்துவிடும்.


நரை
வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத நரையை உனக்கு இறைவன் தந்தது எதன் பொருட்டு என்று சற்று எண்ணிப்பார். ஏனைய உயிரினங்கள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே ஏற்பட்டவை. மனிதனாகிய உன்னில் உறையும் உத்தமனை அடைய நீ வந்தாய். அதை மறந்தவர்க்கு, உணர்த்தும் பொருட்டே இறைவன் நரையைத் தந்தான். நரைக்கத் தொடங்கும் போதாவது உன் ஆவி ஈடேறும் நெறியிற் செல்.
பயங்கரமானது
ஒரு விநாடி மகிழ்ச்சி, ஒரு விநாடி கோபம், இவ்வாறு கணத்திற்கு கணம் மகிழ்ச்சியும் கோபமும் மாறி மாறி அடைகிற, உறுதியான புத்தி இல்லாதவர்கள் மூலம் நன்மை யாது கிடைத்தாலும் அது கூட பயங்கரமானது ஆகும். 
மூவகை மனிதர்கள்
 மனிதரில் மூன்று விதமானவர்கள் உண்டு. மனிதரில் விலங்கு, மனிதரில் மனிதன், மனிதரில் தேவன். ஆசை உள்ளம் படைத்தவன் விலங்கு, அன்பு உள்ளம் படைத்தவன் மனிதன், அருள் உள்ளம் படைத்தவன் தேவன். தனக்கென்று வாழ்கின்றவன் மிருகம், பாதி தனக்காகவும் பாதி பிறருக்காகவும் வாழ்கின்றவன் மனிதன், பிறருக்காகவே வாழ்கின்றவன் தேவன். 

தவம்
 தவம் என்றவுடன் யாரும் அஞ்சிவிடக் கூடாது. காட்டுக்குச் செல்வதும் பட்டினி கிடப்பதும் கனல் நடுவே நிற்பதும் தான் தவம் என்று கருதிவிடக்கூடாது. அவை யாவும் தவத்திற்கு அங்கங்களேயன்றித் தவமாகாது. தனக்கு வருகின்ற துன்பங்களைச் சித்த சமாதானத்துடன் தாங்கிக் கொள்ளுதல், இன்னொரு உயிருக்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டு பண்புகளும் சேர்ந்த குணமே தவமாகும்.

நற்குணங்களை நாடு
 கிளியைப் போல் இனிமையாகப் பேசு. ஆட்டைப் போல் நன்கு மென்று உண். யானையைப் போல் குளி. நாயைப் போல் நன்றியுணர்ந்து ஒழுகு. காகத்தைப் போல் குறிப்பறிந்து கொள். தேனீயைப் போல் உழை. எறும்பைப் போல் சுறுசுறுப்பாயிரு. கொக்கைப் போல் ஒருமையுடன் இறைவனை நினை.
தேடி வைத்துக் கொள்ள வேண்டியவை
 இரவுக்கு வேண்டியதை பகலில் தேடி வைத்துக் கொள். மழைக் காலத்திற்கு வேண்டியதை மற்றைய காலத்தில் தேடி வைத்துக் கொள். முதுமைக்கு வேண்டியதை இளமையில் தேடி வைத்துக் கொள். மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக் கொள்.
 
பங்குனி உத்தரம்

பங்குனி உத்தரம் மிகவும் நல்ல நாள். இந்த நல்ல நாளில் எந்த ஒரு சுபகாரியத்தையும் செய்யலாம். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தது இந்தப் பங்குனி உத்தரத்தில் தான். இராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடந்தது இந்தப் பங்குனி உத்தரத்தில் தான். பழனி முருகன் தேரோட்டமும்  இந்தப் பங்குனி உத்தரத்தில் தான்.

முருகு
செம்மொழியான தமிழுக்குச் சிறப்புடைத் தலைவன் முருகன். முருகு என்றாலும் முருகனைக் குறிக்கும். தமிழில் மூன்று இனங்கள் உண்டு. அவை மெல்லினம், இடையினம், வல்லினம் எனப்படும். மெல்லினத்தில் ஒரு எழுத்து - மு, இடையினத்தில் ஒரு எழுத்து - ரு, வல்லினத்தில் ஒரு எழுத்து - கு.  இந்த மூன்றும் சேர்ந்து முருகு என்றாகிறது. தமிழின் மூவினத்தில் மூன்று எழுத்துகளைக் கொண்டு தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் திருநாமம் அமைந்துள்ளது.
 கல்லும் கடவுள் விக்கிரகமும்
சுருக்கெழுத்தும், ரேகையும் படித்தவனுக்குத் தான் தெரியும். மற்றவனுக்குக் கோடாகத் தான் தெரியும். அதுபோல் கோயிலிலிருக்கும் விக்கிரகம் பக்தியுடையவனுக்குத் தெய்வமாகத் தெரியும். மற்றவனுக்குக் கல்லாகத் தெரியும்.
நாத்திகம் பேசுபவனையும்
அரசுக்கு எதிராக கைதிகள் கூச்சலிட்டாலும், கைதிகளுக்கு உணவு கொடுத்து அரசு காப்பாற்றுவது போல் கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசுபவனையும், கடவுள் காப்பாற்றுகிறார்.
மூலதனமும் வருவாயும்
இல்லறத்தானாக நீ இருப்பாயாகில் உனது மூலதனத்தைக் காப்பாற்றி அதன்மூலம் வரும் வருவாயை நல்ல வழியில் செலவிடு. அப்படிச் செய்வாயாயின் உனது மூலதனம் அழியாது. அதனால் நீ செய்யும் நல்லறம் தொடர்ந்து நடைபெறும்.
மாலை கட்டுபவன் செடிகளை வைத்துக் கொண்டு, மலருந்தோறும் மலர்களை எடுத்து விற்பது போலாகும் இது. செடி மூலதனம். மலர் அதன் வருவாய்.கரி வியாபாரி மரத்தைச் சுட்டுக் கரியாக்குகிறான். மரம் என்ற மூலம் அழிந்து விடுகிறது. அதுபோல் இருக்கக்கூடாது. பூக்கடைக்காரனைப் போல் இரு. கரிக்கடைக்காரனைப் போல் இருக்காதே.
 உயிருக்கு உறுதி தேடு
 நீ உடம்பை வளர்க்க முயற்சி செய்வதோடு உயிரையும் வளர்க்க முயற்சி செய். ஏனெனில் உயிர் சிறந்தது. உயிரில்லாத உடம்பை யாரும் பேணுவதில்லை. உயிர் நீங்கிய உடனே உடம்பை மண்ணிலே புதைத்து விடுகின்றனர் அல்லது எரித்து விடுகின்றனர். ஆதலினால் இந்த உடம்புக்குள் உறையும் உயிருக்கு உறுதி தேடு.
வளர்த்துக் கொள்
நல்ல உணவுகளை உண்பதனால் உனது உடல் வளரும். நல்ல நூல்களைப் படிப்பதனால் உனது உணர்ச்சி வளரும். நல்ல உள்ளத்துடன் சதா இறைவனை நினைப்பதனால் உனது உயிர் வளரும். ஆதலினால் உடம்பையும் உணர்ச்சியையும் உயிரையும் வளர்த்துக்கொள்.

 ஞான ஆசிரியன்
ஞானத்தைக் கொடுப்பவர் ஆசாரியர் ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை. ஆசாரியர் தம் பார்வையினாலேயே ஞானத்தைக் கொடுப்பார். வாக்கினாலேயே வாழ வைப்பார். நம் வாழ்க்கையிலேயே சிறந்த ஞான ஆசிரியனைப் பெற்று விட்டால் நிச்சயம் பிறவிக் கடலைத் தாண்டி விடலாம்.
துன்பம் வரும்போது
தாங்க முடியாத துன்பம் வரும்போது, இறைவனுடைய பாதத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். துன்பத்தைத் தாங்கும் சக்தியை இந்தப் பிறவியிலேயே கொடுக்குமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அப்படி வேண்டினால், அந்த வேண்டுகோளை இறைவன் ஒரு நாளும் புறக்கணிக்கமாட்டார்.
உயிரும் இறைவனும்
தங்கத்தின் மேல் இரத்தினக்கல் இருக்கிறது. அந்தத் தங்கம் உருகினால் இரத்தினக்கல் தங்கத்தில் நன்கு அழுந்திப் பதிந்து கொள்ளும். அதுபோல், நமது உயிராகிய தங்கத்தின் மீது இறைவனாகிய இரத்தினமணி விளங்குகிறது. உயிர் உருகியவுடன் இறைவன் அந்த உயிரில் ஒன்றபட்டுவிடுகிறான்

பாவச் செயல்
தாங்க முடியாத துயரம் ஏற்படுகிற போது, சிலர் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதுண்டு. தற்கொலை எண்ணம் மிகப் பெரிய பாவம் மட்டுமல்ல, அதற்குரிய தண்டனையும் மிகக் கடுமையானது.
அரிய பிறவி
இந்த உடலை ஒரு உன்னதமான நோக்கத்துடன் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார். அதை அழித்துவிட நமக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. அடுத்த பிறவியும் மானிடப் பிறவியாகவே இருக்க வேண்டும் என்ற உத்தரவாதமும் கிடையாது. புழுவாகவோ, பூச்சியாகவோ பிறக்கும்படி கூட நேர்ந்து விடலாம். 
 இறைவழிபாடு
மனிதப்பிறவிக்கு இறைவழிபாடு இன்றியமையாதது. ஒரு மாவட்டத்திற்கும் மற்றொரு மாவட்டத்திற்கும் அரசாங்கத்தார் ஓர் எல்லைக்கல் அமைத்திருப்பது போல் மனிதனுக்கும் விலங்குகட்கும் இடையில் இட்ட எல்லைக்கல்லே இறைவழிபாடு ஆகும். இறைவழிபாடு இல்லாத மனிதன் விலங்கு. இறைவழிபாடு செய்கின்ற மனிதன் தேவன்.
 வாசனை

தாழம்பூ பாம்புகளால் சூழப்பட்டிருக்கிறது. அதனிடம் பழங்கள் இல்லை. முள்ளோடு கூடியிருக்கிறது. எளிதான சேற்றில் நிற்கிறது. வாசனை என்ற ஒன்று இருப்பதால் மக்கள் அதனை எடுத்துப் பாராட்டி சூடிக்கொள்கிறார்கள். வாசனை என்ற ஒரு நற்குணத்தால் ஏனைய தீமைகள் மறைந்து விடுகின்றன. அதுபோல் கொடுக்கின்ற தரும குணமாகிய வாசனை ஒன்று மட்டும் இருக்குமானால் உலகம் உன்னைப் பாராட்டும், மதிக்கும்.

அறிவு

மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியன்று, குலமன்று, பருமனன்று, உயரமன்று. அறிவு ஒன்று தான் மனிதனை உயர்த்தும். அறிவுடையார் எல்லாம் உடையார் என்கின்றார் திருவள்ளுவர்.

நுண்ணறிவின் அளவு

நூலின் அளவுதான் நுண்ணறிவின் அளவு ஆகும். நல்ல நூல்களைக் கற்குந்தோறும் அறிவு நுணுகி நலம் எய்தும். இறைவன் கற்பவர் விழுங்கும் கற்பகக்கனி கல்லா மனத்துடன் நில்லாத் தன்மையன்.
 
கல்லாப்பிழை

உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக்கெல்லாம் தலையாய பிழை அறிவு நூல்களைக் கல்லாததே ஆகும். பிழைகள் இன்ன இன்ன என்று நமக்கு உபதேசிக்க வந்த பட்டினத்து அடிகளார் தலையாய பிழை கல்லாப்பிழை என்றார்.
 புராணம்

புராணம் என்றால் பழமை என்று பொருள். புராதனம் என்ற சொல்லே புராணம் என்று வந்தது. சில பேர் புராணம் என்றால் புளுகு என்பார்கள். நரம்பில்லாத நாவிலே எதையும் சொல்வார்கள். இது தவறு.
 
புராணமும் பூதக்கண்ணாடியும்

ஒரு கடிகாரம் பழுதானால் அதைப் பழுது பார்ப்பவன் பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு பார்ப்பான். நுண்ணிய சக்கரங்களைப் பார்க்கும் ஆற்றல் நம் கண்களுக்கு இல்லை. நுண்ணிய சக்கரங்களை விரித்துக் காட்டுவது பூதக்கண்ணாடி. அதுபோல் வேதத்திலே உள்ள புண்ணிய தர்மங்களை நமக்கு விரித்துப் புலப்படுத்துவது புராணம் ஆகும். 
 மும்மதங்கள்
மனிதனிடம் மதம் புகுந்தால் அழிவான். யானைக்குக் கன்ன மதம், கரட மதம், கபோல மதம் என்ற மும்மதங்கள் உண்டு. அதுபோல் மனிதனிடமும் தனமதம், வித்யாமதம், குலமதம் என்ற மும்மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்களான மும்மதங்களால் அழிகின்றனர் பலர்.

பரம்பொருள் 
 இறை என்ற சொல் இறு என்ற பகுதியடியாகப் பிறந்தது. எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள், இறைவன் என்று பேர் பெற்றது. எங்கும் நிறைந்த பரம்பொருளைக் காணும் வழிவகைகளை அறிவது தான் அறிவுடமை. முரட்டுத்தனமாகப் பேசுவது அறிவுடமையாகாது.
மெய்யுணர்வு


சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தையும், நாக்கு, கண், உடம்பு, செவி, நாசி என்ற கருவிகளால் அறிய வேண்டும். கடவுள் இந்த ஐந்துக்கும் அப்பாற்பட்டவர். அவரை இந்தப் பௌதிகக் கருவிகளால் அறியத் தலைப்படுவது அறிவுடமையாகாது. மனதாலும் அறிய இயலாது. வாலறிவனை நூலறிவினால் உணர்தல் இயலாது. அனுபவத்தால் உண்டான மெய்யுணர்வாலேயே அறிய இயலும்.                                           
மகா மந்திரம்
 
 சைவர்களுக்குச் சொல்கின்றேன். "ஓம் சிவாய நம" என்பதைவிட ஒரு மகாமந்திரம் கிடையாது. "சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" என்றார் ஒளவையார். மற்ற இனத்தவர்களும் அவரவர் தெய்வங்களின் மகா மந்திரங்களைத் தினசரி சொல்லி ஜெபசக்தி பெறவேண்டும்.
ஆத்மா பிரியும்போது உதவும்
நித்திய வாழ்க்கையில் தொடருந்திலோ, பேருந்திலோ, மகிழுந்திலோ அல்லது எந்த வாகனத்திலோ பிரயாணம் செய்யும் போதெல்லாம், உங்கள் வாழ்நாளில் எத்தனைக் கெத்தனை மகா மந்திரத்தை விடாமல் சொல்லிக் கொண்டே வந்தால், அத்தனைக் கத்தனை மகாமந்திரம் கடைசியாக உங்கள் ஆத்மா பிரியும் போது ஒரு தொகையாக வந்து உங்களுக்கு உதவும்.

உள்ளத்தில் பக்தி
மூன்று வேளை நன்றாக சாப்பிடுங்கள். நன்றாக ஆடை அணிந்து கொள்ளுங்கள். வேலைக்குப் போய்க் கொள்ளுங்கள். ஆனால் உள்ளத்தில் பக்தி இருக்க வேண்டும். பக்தி இருந்தால் தெய்வம் உங்களைத் தேடிக் கொண்டு வரும். வேலை செய்தால் கூலி தானாக வரும் தானே? வேலைக்குத் தகுந்த கூலி நிச்சயமாகக் கிடைக்கும். சோம்பேறித்தனமாக இருந்தால் எவன் கூலி தருவான்? 
அன்பு வைத்தல்

மக்கள் மீது அன்பு வைக்க வேண்டும். ஆசை வைக்கக் கூடாது. மகன் மீது அன்பு வைத்த கௌசலை வாழ்ந்தாள். ஆசை வைத்த சக்கரவர்த்தி மாய்ந்தார். அன்பு வாழ வைக்கும். ஆசை தாழ வைக்கும். 
துன்பம்

துன்பம் சூழ்ந்த காலத்தில் தான் உற்றார் உறவினர் ஆகியோரின் அன்பைத் துல்லியமாக அளந்தறிய முடியும். நமக்கு வரும் துன்பம் தான் நண்பர்களையும் உறவினர்களையும் அளக்கும் அளவுகோல். ஆதலால் அந்தக் கேட்டிலும் ஒரு பயன் இருக்கிறது.

நன்றி மறத்தல்

பாவங்களில் எல்லாம் மிகப்பெரிய பாவம் நன்றி கொல்வது. செய்த நன்றியை மறந்து விடுவது - நன்றி மறத்தல் பாவம். உதவி செய்தவனுக்கு மேற்கொண்டு கெடுதல் பண்ணுவது - நன்றி கொல்லல். நன்றி கொல்வது தான் மிகப் பெரிய பாவம்.
                                                     
ஜீரணம்

ஆடவர் இடது பக்கமாகவும் பெண்கள் வலது பக்கமாகவும் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதனால் ஆயுள் வளர்வதுடன் நன்கு ஜீரணமாகும். வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
ஆயுளும் ஐஸ்வர்யமும் பெற

கிழக்கு நோக்கி உண்பவர்களுக்கு ஆயுள் வளரும். மேற்கு நோக்கி உண்பவர்களுக்கு பொருள் சேரும்.தெற்கு நோக்கி உண்பவர்களுக்கு புகழ் உண்டாகும். வடக்கு நோக்கி உண்பவர்களுக்கு நோய் வளரும்.
 
 

கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகத்திற்குச் சேவை செய்வதோடு கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்.
 
 பக்தி

வேடன் கண்ணப்பனிடம் என்ன ஆசாரம்?  துருவனுக்கு என்ன வயது?  ஆதிமூலமே என்று கதறிய கஜேந்திரனுக்கு என்ன கல்வி?  விதுரர் என்ன ஜாதி?  யாதவ அரசனான உக்கிரசேனனுக்கு என்ன பலம்?  கூனியிடம் என்ன அழகு?  குசேலரிடம் ஏது பணம்?
பக்தி வயப்படும் பரமன் பக்தியினால் தான் மகிழ்ச்சி அடைகின்றார். எனவே பக்தி செய்வோம்.
  

அறம்

மானிடராய்ப் பிறந்த நாம் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றாலும் அறம் புரிய வேண்டும். மனத்தால் செய்யும் அறம் கடவுள் உணர்வும் நற்சிந்தனையும் ஆகும்.
மொழியால் புரியும் அறம் ஆண்டவன் திருநாமம் ஓதிப்புகழ் பாடுதலும் பிறருக்குத் துன்பம் பயலாத வார்த்தைகளைக் கூறுதலும் ஆகும். உடலால் புரியும் அறம் இறைவனை மலர் கொண்டு வணங்குதல், அடியார்கட்கு தொண்டு செய்தல், பிற உயிர்கட்கு நன்மை செய்தலுமாம்.
 
 
அன்பு
 
 கடவுளிடம் பக்தி செலுத்த வயதும் உருவமும் குறுக்கிடாது. கல்வியோ செல்வமோ வீரமோ முக்கியமல்ல. நல்ல ஆசாரம், நற்குணம் இவற்றில் கூட கடவுள் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை.  அவர் அன்பு ஒன்றையே எதிர்பார்க்கின்றார்.
 
உலகம்

இவ்வுலகம் ஒரு முட்செடி போன்றது. முட்செடியின் முள்ளில் மாட்டிக் கொண்டுள்ள துணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்குள் மற்றொரு பகுதி அதில் மாட்டிக் கொள்கிறது.  உலகமெனும் முட்செடியில் அகப்படடுக் கொண்டவர்களின் கதியும் அப்படியே.

No comments:

Post a Comment