Sunday, July 3, 2011

கடவுள் எங்கே

கடவுள் எங்கே இருக்கின்றார்?
கடவுள் இருக்கின்றாரா என்பது பலருக்கு ஐயப்பாடு. இருந்தால் அவர் எங்கே இருக்கின்றார் என்பதிலும் ஐயம். அவர் என்ன வடிவில் இருக்கின்றார் என்பதிலும் ஐயம்.
சில பொருள்களைக் கண்ணால் காணமுடியாது. காணமுடியாமையால் அப்பொருள் இல்லை யென்று கூறுவது அறிவுடமையாகாது. மலரில் மணம் இருக்கின்றது. அந்த மணத்தைக் கண்ணால் காண முடியாதல்லவா? ஒருவன், இம்மலரில் மணம் இருக்கின்றதா என்று முப்பது ஆண்டுகளாகக் கண்ணால் உற்றுப் பார்த்தேன். பூதக் கண்ணாடி வைத்தும் பார்த்தேன். வாசனை இருந்தால் என் கண்ணுக்குத் தெரியாதா? ஆகவே இம்மலரில் வாசனை இல்லை என்று முடிவு கட்டினான். அப்படி முடிவு கட்டிய மேதாவிக்கு மூக்கில் சதை வளர்ந்திருந்தது.

காற்று வாய் வழியாக வந்து போய்க் கொண்டிருந்தது. அவன் மலரின் மணத்தைக் கண்ணாலன்றி வேறு எதனால் அறியத் தலைப்படுவான்? அவனைப்  போலவே மூக்கில் சதை வளர்ந்தவர்கள் ஊருக்கு நான்கு பேர் ஒன்றுகூடி மலரில் மணம் இல்லையென்று தீர்மானம் செய்தால், அதை நல்ல மூக்குள்ள ஒருவன் ஒப்புக் கொள்வானா என்பதைச் சிந்தியுங்கள்.

மலரின் மணத்தை நாசியினால் அறிதல் வேண்டும். ஒரு செய்யுளில் பொதிந்து கிடக்கும் கருத்தை அறிவினால் அறிதல் வேண்டும். இனிக் கடவுளை மெய்யறிவினால் அறிதல் வேண்டும். மெய்யறிவு என்பது நூல்களைப் படிப்பதனால் வரும் கலையறிவு அன்று. நூலறிவால் வாலறிவனாகிய இறைவனை அறிய முடியாது. மெய்யறிவு என்பது அநுபவத்தில் விளைவது. சுட்டியறிகின்ற உலக அறிவு முழுவதும் அற்றுப்போன இடத்திலே அநுபவ அறிவு தலைப்படும். அந்த அளவில் அறிவுக்கறிவான இறைவனுடைய அருட்காட்சி தோன்றும். இதனை அநுபவ ஞானியாகிய அருணகிரிநாத சுவாமிகள் கந்தரநுபூதியில் இனிமையாகவும் அழகாகவும் கூறுகின்றார்

"அறிவொன் றறிநின் றறிவார் அறிவில்
 பிறிவொன் றறநின்ற பிரானலையொ
 செறிவொன் றறவந் திருளே சிதைய
 வெறிவென் றவரோ டறும்வே லவனே."
-  கந்தரநுபூதி

"அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
 அடியா ரிடைஞ்சல் தளைவோனே"
-             திருப்புகழ்

ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் அறிஞர்கள் பலர் ஒன்றுகூடி கடவுளைப் பற்றி ஆராய்ந்து விவாதித்தார்கள்.
ஒருவர், "கடவுள் கைலாயத்தில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், "கடவுள் சூரியமண்டலத்தில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், கடவுள் தேவேந்திர உலகத்தில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், "கடவுள் அண்ட முடிவில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், "கடவுள் வேத முடிவில் இருக்கின்றார்" என்றார்.
ஒருவர், "கடவுள் அறிஞர் நடுவே இருக்கின்றார்" என்றார்.
இவ்வாறு பலர் பலவாறு கூறித் தருக்கம் புரிந்தார்கள். தாம் தாம் கூறியதே சரியென்று வாதிட்டு வழக்கிட்டுக் கொண்டார்கள்.

அக்காலத்தில் காரைக்கால் என்ற திருநகரத்தில் அறிவின் கருவூலமாகப் புனிதவதியார் விளங்கிக் கொண்டிருந்தார். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஞானத்தைப் பெண்ணாகக் கூறுவது சாத்திரம்.

"சக்தி தான் யாதோ என்னில் தடையில்லா ஞானமாகும்".
- சிவஞான சித்தியார்

ஆதலினால் கடவுள் எங்கே இருக்கின்றார் என்று வாதிட்டுக் கொண்ட அறிஞர்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு காரைக்காலுக்கு வந்தார்கள். அங்கே அறிவும் அன்பும் ஆசாரமும் பண்பும் ஒழுக்கமும் கற்பும் சேர்ந்து ஓர் உருவாக அவதரித்தது போல் காரைக்கால் அம்மையார் இருந்தார். அவரிடம் அறிஞர்கள் சென்று வணங்கி, தாங்கள் கடவுள் எங்கே இருக்கின்றார் என்று வாதம் புரிந்ததையும் முடிவு காண முடியாமல் போனதையும் கூறி நின்றார்கள்.
அம்மையார் தனித்தனியே அவர்களை நோக்கி அவர்கள் கருத்தை வினவினார்கள். அவர்களும் கடவுள் வானத்திலும் வானவர்கோன் தானத்திலும் இருக்கின்றார் என்று தத்தம் கருத்தை கற்ற நூலறிவைக் கொண்டு கழறினார்கள்.

தலைமை சான்ற புலமை நிறைந்தவரும் மெய்யறிவு பெற்றவருமான அம்மையார் புன்னகை புரிந்து, கடவுள் இருக்குமிடம் இதுவென ஒரு நேரிசை வெண்பாவில் விடை பகர்ந்தார்.

"வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாருந் தாமென்க - ஞானத்தான்
முன்னஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்
என்னெஞ்சத் தானென்பன் யான்."

இறைவன் நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்பவன். பொதுவாக எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கின்றான். உள்ளம் உருகி நினையாதார் உள்ளத்துள் பாலில் நெய் போல் மறைந்திருக்கின்றான். உருகிய உள்ளத்துடன் ஓவாது உள்குவார் உள்ளத்துள் தயிரில் நெய் போல் வெளிப்பட்டுத் தோன்றி நிற்பான். அம்மையார் இடையறாது இறைவனை நினைந்தவராதலின் அவருடைய நெஞ்சிலே விளங்கித் தோன்றினான்.

ஆதலால் அம்மையார், ஆண்டவன் வானத்திலிருக்கின்றான், வானவர்கோன் தானத்திலிருக்கின்றான், வேத நடுவில் விளங்குகின்றான் என்று கூறுவாரெல்லாம் கூறுக. நான் கடவுள் என் நெஞ்சிலிருக்கின்றான் என்று கூறுவேன் என்று யாரும் மறுக்க முடியாத அளவில் அழகாகக் கூறினார்.

இப்பாடலின் மூன்றாவது வரி முன்னஞ்சத்தாலிருண்ட மெய்யொளி சேர் கண்டத்தான் என்பது மிகவும் அருமையானது. இறைவனுடைய கண்டம் நஞ்சினால் இருண்டு ஒளி செய்கின்ற இருளில் ஒளி என்ற முரண்தொடையணியாக மொழிந்த அழகு நனிபெருஞ் சிறப்புடையது.

எனவே இறைவன் இடையறாது எண்ணுவார் இதயத்தில் இருக்கின்றான் என்பதை யாவரும் அறிந்து ஐயந்தீர்ந்து அக மகிழ்ந்தார்கள்.

No comments:

Post a Comment