Saturday, September 17, 2011

நம: பார்வதீ பதயே என்பது ஏன்? - விளக்குகிறார் காஞ்சிபெரியவர்

சிவன் கோயில்களில் "நம:பார்வதீபதயே' என ஒருவர் சொல்ல, "ஹரஹர மகாதேவா' என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?
பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். "பார்வதீபதி' என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு "மகாதேவன்' என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை "ஹர ஹர' என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு "ஞானசம்பந்தர்' என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக "ஹர ஹர' நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் "அரோஹரா' என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது. வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது. "என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்,'' என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று.
""அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே'' அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன். இப்போது நான் (பெரியவர்) ""நம: பார்வதீபதயே!'' என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடு ""ஹர ஹர மகாதேவா'' என்று சொல்ல வேண்டும்.
நம: பார்வதீ பதயே!

No comments:

Post a Comment