Sunday, September 18, 2011

ஆளுபவர்களின் தவறை தட்டிக்கேளுங்கள்

கொடுங்கோல் மன்னன் ஒருவன் ஆட்சி செய்த நாட்டில், பிறவியிலேயே பார்வை இழந்த புலவர் ஒருவர் இருந்தார். பாடல்கள் இயற்றுவதில் வல்லவரான அவரை மக்கள் போற்றிக் கொண்டாடினர். அவரது புகழ் பிற நாடுகளுக்கும் பரவியது. இதனால் அவர் மீது பொறாமை கொண்டான் அரசன்.
புலவரை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்து, கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தினான். அவரோ அதைக் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பலர் முன்னிலையில் இவ்வாறு செய்தாலும், அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், புலவர் பொறுமை காத்தார்.
புலவரது இந்தச் செய்கை, அரசனுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. எப்படியாவது அவரை கோபமூட்ட வேண்டும்! கோபத்தில் தன்னை எதிர்த்துப் பேசினால், உடனே தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசன், ஒரு நாள் அவரை அரண்மனைக்கு வரவழைத்தான்.
அவரிடம், புலவரே... எனக்கொரு சந்தேகம்!'' என்றான்.
புலவரும் புன்னகை மாறாத முகத்துடன், ""கேளுங்கள் மன்னா!'' என்றார். ""புலவரே... பொதுவாக இறைவன் ஒரு மனிதனுக்கு ஏதேனும் குறைகளை வைத்தால், அதை ஈடு செய்யும் பொருட்டு வேறு ஏதேனும் சிறப்புகளை அவனுக்கு அளிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! ஆனால், உம்மைப் பார்வையற்றவனாக படைத்த இறைவன், வேறு எந்த சிறப்பையும் அளிக்கவில்லையே! அப்படியானால் கடவுள் உமக்கு மட்டும் அருள் காட்டவில்லை என்றுதானே அர்த்தம்?'' என்றான்.
புலவர் ஏதும் பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்தார். அவரை மேலும் அவமானப்படுத்தும் விதமாக, மன்னன்,
""புலவரே! உம் நிலைமை குறித்து என் மனதுக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது! ஹும், என்ன செய்வது? ஆனாலும் கடவுளுக்கு உம்மிடம் ஓரவஞ்சனை அதிகம்தான்!'' என்றான்.
போலியான ஆதங்கத்துடன் பேசிய மன்னனை நிதானமாகக் கையமர்த்தினார் புலவர்.
பிறகு, ""மன்னா... பரம கருணாமூர்த்தியான அந்த இறைவன், என்மீது அருளை வாரி வாரி வழங்கியிருக்கிறானே தவிர, துளியேனும் ஓரவஞ்சனை காட்டவில்லை,'' என்றார் தெளிவாக.
இப்படி ஒரு பதிலை எதிர்பாராத மன்னன்,"" என்ன கூறுகிறீர்?'' என்றான்.
""மன்னா! என் மீது இறைவன் அருள் இருந்ததால் தான் நான் பார்வையற்றவனாகப் பிறந்தேன்!''
""புலவரே... உமக்குப் பித்துப் பிடித்துவிட்டதா? அந்த இறைவனுக்கு உண்மையிலேயே <உம்மீது அருள் இருந்திருந்தால், <உம்மைப் பார்வையற்றவனாகப் படைத்திருக்க மாட்டான்! நீரோ அருள் அது இதென்று புலம்பிக் கொண்டிருக்கிறீரே!'' என்றான் கோபமாக.
புலவர் அமைதியாகவும், அதே நேரம் தனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கிடைக்கட்டும் என்று சாட்டையடி கொடுக்கும் விதத்திலும் பதிலளித்தார்.
""மன்னரே! நீர் செய்யும் கொடும் செயல்களைக் கண்களால் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை! அப்படிப்பட்ட துன்பம் நேராமல் எனக்கு அருள் செய்தவன் அந்த இறைவன். நீர் நடத்தும் அராஜக ஆட்சி பற்றி பிறர் சொல்லக் கேட்கும்போதே என் மனம் தாங்கொணா வேதனையுறுகிறது! அவற்றை கண்களால் காண்பதாக இருந்தால் என் நிலைமை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்?'' என்றான்.
புலவரின் வார்த்தை கேட்டு அவமானத்தில் தலை குனிந்தான் மன்னன். ஆணவத்தால் பிறரை இகழ்வது எவ்வளவு பெரிய இழிசெயல் என்பதை அந்தக் கணமே உணர்ந்து தெளிந்தான். ஆளுபவர்களின் தவறை, உயிருக்கு அஞ்சாமல், உடனுக்குடன் சுட்டிக்காட்டுவதும், தட்டிக் கேட்பதுமே குடிமக்களின் கடமையாக இருக்க வேண்டும். புரிகிறதா!

No comments:

Post a Comment