Monday, January 16, 2012

ராமபாணத்தை விட ராமபாதுகை விசேஷமானது.

ராமபிரானின் வில்லைக் கண்டு நடுங்காதவர்களே உலகில் கிடையாது. ராமபாணம் தப்பாது என்பார்கள். ஆனால், ஒரே ஒருவன் மட்டும் அதைக் கண்டு பயப்படவில்லை. யார் அவன்? இலங்கை செல்வதற்காக சேதுவில் பாலம் கட்ட ஏற்படாயிற்று. கடலோ பெரும் கொந்தளிப்புடன் இருந்தது.
""சமுத்திரராஜா! ஒரு நல்ல காரியத்துக்காக இலங்கை செல்கிறோம். அமைதியாக இரு!'' என்று ராமன் சொல்லிப்பார்த்தார். அவனோ, அடங்குவதாக இல்லை. கோபத்துடன் ராமபிரான், தன் பாணத்தை எடுத்து விட்டார்.
உடனே சமுத்திரராஜன் வெளியே வந்தான்.
சாதாரணமாக அல்ல! கைதட்டிக்கொண்டே, எக்காளமான சிரிப்புடன்! ராமனுக்கு ரொம்ப ஆச்சரியம்!
""என் வில்லின் பலம் தெரியாமல், மமதையில் அட்டகாசமாகவா சிரிக்கிறாய்! இது கனல் கொழுந்து. உன்மேல் பட்டால் தீய்ந்து போவாய். சொட்டு தண்ணீர் இல்லாமல் செய்து விடுவேன்,'' என எச்சரித்தார். அப்போதும் சமுத்திரராஜன் கலங்கவில்லை.
""ராமா! நீ யாரிடம் என்ன பேசுகிறாய். இந்த பூலோகத்தை ஆளும் பரதன், உனது பாதுகையைப் பெற்று வந்தான் அல்லவா! அதற்கு அவன் தினமும் அபிஷேகம் செய்கிறான். அந்த நீர் தமஸா நதியில் விழுந்து, அது சரயூ நதியில் கலந்து என்னுள் வந்து ஐக்கியமாகிறது. அந்த தீர்த்தத்தைக் குடித்து குடித்து என் உடல் வஜ்ரம் பாய்ந்து வலிமையாக இருக்கிறது. என்னை, உன்னால் கொன்று விட முடியுமா என்ன!'' என்றான்.
ராமபாணத்தை விட ராமபாதுகை விசேஷமானது. உங்கள் ஊர் ராமர் கோயில்களில், பாதுகாபூஜைக்கு ஏற்பாடு செய்யுங்கள். நமது நாட்டை எந்த சக்தியும் எதுவும் செய்து விட முடியாது.

No comments:

Post a Comment