Saturday, March 10, 2012

நீக்கமற நிறைந்த சிவன்!

சைவ சமயத்தவரால் முழு முதற் பரம்பொருளாகக் கொண்டு போற்றி வழிபடப் பெறும் எல்லாம் வல்ல இறைவனை "சிவன்' என்றும், "சிவம்' என்றும், "சிவப்பரம்பொருள்' என்றும் போற்றி வழிபட்டு வருகின்றோம்.

முப்பத்தாறு தத்துவங்களை யும் கடந்து நின்ற சிவப்பரம்பொருள் சுத்த சிவம். அந்தத் தத்துவங்களில் நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை யும் போக்கி வீடுபேறு அருள அருவம், அருவுருவம், உருவம் ஆகிய திருமேனி கொண்டு விளங்குகின்றார்.

அருவத் திருமேனியுடைய சிவம் "சத்தர்' என்றும்; அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும்; உருவத் திருமேனியுடைய சிவம் "பிரவிருத்தர்' என்றும் அழைப் பர். இந்த மூன்று திருவுருவ வேறுபாடு சிவசக்தி வடிவ நிலை. அது மரமும் வயிரமும்போல சிவத்தோடு சக்தியும் பிரிவின்றித் திகழும் நிலை. மரம்- சக்தி; வயிரம்- சிவம்.




அருவ நிலை

இந்த சிவ வடிவம், சுத்த சிவ தத்து வத்திலும், ஞானமே திருமேனியாக வும் உள்ளது. இதை "நிட்கள சிவம்' என்றும்; "நின்மல சிவம்' என்றும் கூறுவது உண்டு. நிட்களம் என்பது வடிவம் இல்லாதது என்றும்; அதில் ஞானசக்தி தனித்தும் கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபிக்கும். இந்நிலையை "லய சிவம்' என வழங்கு வர். லய சிவம் என்பது படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞான சக்தியைப் பொருந்தி நின்றால் சிவன் என வும்; கிரியா சக்தி யைப் பொருந்தி நின்றால் சக்தி எனவும் வழங்கு வர். அருவ நிலை யாகிய நிட்கள சிவத்தை, கண் ணால் பார்க்க முடி யாது. ஆனால் மனதி னால் தியானித்து வழி படத்தக்க ஞான வடிவம் கொண்டது.

அருவுருவ நிலை

இந்த சிவத் திருவுருவம் சாதாக்கிய தத்துவத் தில் (மூர்த்தி தத்துவம்) போற்றிப் புகழப்படுவது. இதை "சகள நிட்கள சிவம்' என்றும் கூறுவர். இது வடிவுடையதும் வடிவில்லாததுமாகிய இரு தன்மையும் கூடி நிற்பது; ஞான சக்தியும் கிரியா சக்தியும் சமஅளவில் பொருந்தி தியானிப்பது. இதை போக சிவம் என்றும் அழைப்பர். இந்த சகள நிட்கள சிவமே சிவலிங்க வடிவமாகும். சிவலிங்கம் "அசவலிங்கம்' என அழைக்கப் பெறும். அசவம் என்பது போக்கு வரவு இல்லாதது எனப் பொருள்படும். மூலஸ்தானத் தில் உள்ளது. சிவலிங்கத்தில் காணக்கூடிய அந்த உருவம்- சகளம்; இன்னது என கூற முடியாதது. உறுப்புகள் இல்லாமல் இருப்பது அருவம். நிட்களத்திற்கு உருவம் உண்டு; உறுப்புகள் இல்லை. இவ்விரு தன்மைகளும் பெற்றதால் சிவ லிங்கம் அருவுருவத் திருமேனி.

ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்தும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்தும் நிற்கும் நிலையில் அதிகார சிவம் என்று பெயர்பெறும். அதிகார சிவம் ஐந்தொழிலைச் செய்வது. ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்து நிற்கும்போது மகேஸ்வரன் என்றும்; ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்கும்போது சுத்த வித்தை என்றும் பெயர் பெறும்.

மகேஸ்வர வடிவம் இருபத் தைந்து பேதங்களை உடையது. இந்த வடிவத்தில் எல்லா உறுப்புகளையும் கண்ணால் பார்க்க முடியும். எனவே இவ்வடிவம் சகளம் ஆயிற்று. சந்திரசேகரர், உமா மகேஸ்வரர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிட்சாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சுவந்தராரி, மாதங்காலி, வீரபத்திரர், அரியர்த்தர், அர்த்தநாரீசுவரர், கிராதர், கங்காளர், சண்டேசானுக்கிரகர், நீல கண்டர், சக்கரப் பிரதானர், கஜமுகானுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் என இருபத்தைவரும் மகேஸ்வரமூர்த்தியாவர். இவர்களைத் தவிர இவற்றின் பேதமாக சரபமூர்த்தி, வாகமூர்த்தி, க்ஷேத்திரபாலக மூர்த்தி, ஏகபாத திரிமூர்த்தி முதலிய பல சிவமூர்த்தங்களும் உள்ளன.

இம்மூர்த்திகள் அனைவரும் சிவலிங்க மூர்த்தி யின்- சதாசிவ மூர்த்தி யின் ஈசானம், சத்தியோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்னும் ஐந்து முகங் களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை.

சிவாலயங்களில் நிகழும் திருவிழாக்களில் மூலஸ்தான சிவலிங்க மூர்த்தியின் பிரதிநிதியா கவே இம்மகேசுவர மூர்த்திகளில் ஒருவர் வீதி உலாவிற்கு எழுந்தருளுவதை நாம் காண்கிறோம்.

மகேசுவர மூர்த்தி வகை

அம்மையாரோடு கூடிய இன்ப நிலையில் எழுந்தருளி உள்ள சந்திரசேகரர், உமா மகேசுவரர், இடபாரூடர், சோமாஸ்கந்தர் முதலியோர் போகமூர்த்தியாவர். இம்மை- மறுமை இன்பங் களைப் பெற விரும்பு வோரும், உலகப்புகழ் சம்பாதிக்க விரும்புவோரும் போக மூர்த்தியை வழிபடுதல் வேண்டும். அம்மையார் இன்றி வீரநிலையில் எழுந்தருளியுள்ள காமாரி, காலாரி, கங்காளர், வீரபத்திரர் முதலியோர் கோரமூர்த்தியாவர். உலகில் பகையை வெல்ல விரும்புவோர், வினையை ஒழிக்கக் கருதுவோர் கோரமூர்த்தியை வழிபடுதல் வேண்டும். யோக நிலையில் எழுந்தருளிய சுகாசீனர், தட்சிணாமூர்த்தி முதலியோர் யோகமூர்த்தி யாவர். வீடுபேற்றைப் பெற விரும்புவோர் யோகமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

சிவசக்தி

சிவனாரின் திருமேனியில் அர்த்தநாரீசுவரத் திருமேனி என்ற ஓர் அற்புதக் காட்சி யைக் காண்கின்றோம். ஒரே வடிவத்தில் பாதி ஆண், பாதி பெண். இறைவனை இயற்கையில் காணும்போது இது பொருந் துமோ என ஐயுறலாம். தாவர உலகில் ஒரே வடிவத்தில் ஆண் இயல்பும் பெண் இயல்பும் சேர்ந் திருக்கின்றது. ஒரே மலரில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளது. இவ்விரண்டின் கூட்டுறவால் ஒரு புதிய விதை உண்டாகின்றது. தாவரங்களுள் ஒவ்வோர் உயிரும் அதனதன் தாய்- தந்தையரின் பாதிப் பகுதி அம்சம் பெற்றே விளங்குகின்றது. மனித சமுதாயத்தை ஓர் உருவாகக் கருதினால், அதில் ஒரு பகுதி ஆணும் மற்றொரு பகுதி பெண்ணும் ஆகின்றது.

இயற்கை என்பது சைதன்யம், ஜடம் என்னும் இரண்டு தத்துவங்களைக் கொண்டது. எது அறிகின்றதோ அது சைதன்யம். எந்த உடலின் மூலமாக- எந்தக் கருவியின் மூலமாக அறிவு விளங்குகின்றதோ அந்தக் கருவி ஜடம். உயிர்த் தத்துவம் சிவம்; உடல் தத்துவம் சக்தி. உடல் இல்லாமல் உயிர் தன்னை விளக்காது. உயிர் இல்லாமல் உடல் எதற்கும் உதவாது. இரண்டின் கூட்டுறவால் இயற்கைத் திட்டம் நிறைவேறுகின்றது. சிவ தத்துவத்திற்கும், சக்தி தத்துவத்திற்கும் புறம்பாக இயற்கையில் எது வுமில்லை. சிவசக்தியாக- மாதொரு பாகமானவராக எம்பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்றார் என அறியலாம்.

சிவாலயங்கள்

ஆலயம் என்பது ஆன்மா இறைவனிடம் சேர்வதற்குரிய இடம். ஆன்மாவின் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் ஆலயம் என்றும் கொள்ளலாகும். பழத்தின் ரசம் போலவும், விறகில் தீ போலவும், எள்ளில் நெய் போலவும், பாலில் வெண்ணெய் போலவும் எங்கும் நீக்க மற நிறைந்து, மறைந்து நின்ற சிவ பரம்பொருள், ஆலயங்களில் தயிரில் நெய் போல் நின்று ஆன்மாக்களுக்கு அருள்புரிந்து இயங்குகின்றார். அன்பர்கள் எளிதில் இறைவனின் அருளைப் பெறும் இடங்களாகத் திகழ்வன சிவாலயங் கள்.



பாடல் பெற்ற சிவத்தலங்கள்

புண்ணிய பாரத பூமியில் எண்ணிறந்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. அவற் றுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றால் சிறப்பு டைய சிவத்தலங்கள் மிகப் பல. அவற்றில் 274 சிவத் தலங்கள் முக்கியமானவையாகப் போற்றப்படுகின் றன. இச்சிவத்தலங்களில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தலங்களும் இடம்பெற் றுள்ளன. இவை தாமாகவே முக்கியத் துவம் வாய்ந்தன. புகழ்பெற்ற சைவ சமயக் குர வர்களாகிய அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோரால் போற்றிப் பாடப் பெற்றதால் மேலும் பெருமை பெற்று விளங்குகின்றன.

சிவத்தலத் தொகுதிகள்

சிவத்தலங்கள் பலவற்றுள் சிற்சில தலங்கள் ஒவ்வொரு வகைச் சிறப்பு காரணமாகத் தொகுதி களாக வகுக்கப் பெற்றும் போற்றப்பட்டும் வருகின்றன.

தென் கயிலாயத் தலங்கள்: காளத்தி, திருச் சிராப்பள்ளி, திரிகோணமலை என்ற மூன்று தலங்கள்.

பஞ்சபூதத் தலங்கள்: திருவாரூர் அல்லது காஞ்சிபுரம் பிருதிவி தலம்; திருவானைக்கா

அப்புத்தலம்; திருவண்ணாமலை தேயுத்தலம், காளத்தி வாயுத்தலம்; சிதம்பரம் ஆகாயத் தலம்.

பஞ்ச சபைத் தலங்கள்: திருவாலங்காடு ரத்தினசபை; சிதம்பரம் கனகசபை; மதுரை இரஜிதசபை; திருநெல்வேலி தாமிரசபை; திருக்குற்றாலம் சித்திரசபை.

பஞ்ச காட்டுத் தலங்கள்: திருவெண்பாக்கம் இலந்தைக்காடு; திருப்பாசூர் மூங்கிற்காடு; திருவாலங்காடு ஆலங்காடு; திருவெவ்வூர் ஈக்காடு; திருவிற்கோலம் தர்ப்பைக்காடு.

காசிக்கு சமமான தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, திருவாஞ்சியம்.

மூன்று காயாரோகணத் தலங்கள்: காஞ்சி, குடந்தை, நாகப்பட்டினம்.

மூன்று மயானங்கள்: காஞ்சி, திருக்கடவூர், திருநாவலூர்.

எட்டு வீரட்டான தலங்கள்: சிவபெருமான் அசுரர் முதலியோரைத் தண்டித்த எட்டுத் தலங்கள்.

திருக்கண்டியூர்- பிரம்மாவின் 5-ஆவது தலையைக் கொய்தது;

திருக்கோவலூர்- அந்தகாசுரனைக் கொன்றது;

திருவதிகை- திரிபுரம் எரித்தது;

திருப்பறியலூர்- தக்கன் சிரங்கொய்தது;

திருவிற்குடி- ஜலந்தராசுரனைக் கொன்றது;

வழுவூர்- கஜாசுரனைக் கொன்றது;

திருக்குறுக்கை- காமனை எரித்தது;

திருக்கடவூர்- யமனை உதைத்தது.

ஏழு விடங்கத் தலங்கள்: உளியால் செதுக் கப்படாமல், தான்தோன்றியாக- சுயம்புவாகச் சிவபெருமான் விளங்கும் தலங்கள். இத்தலங் களில் உள்ள உற்சவ மூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி விசேஷம். இம்மூர்த்தம் வீதிவலம் வரும் பொழுது ஒரு தனி நடனமாடிக் கொண்டு வருவர். இவ்வகையாலும் இத்தலங்கள் விசேடம்.

திருவாரூர்: வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு: நகவிடங்கர்- உன்மத்த நடனம்.

நாகைக் காரோணம்: சுந்தர விடங்கர்- பாராகார தரங்க நடனம்.

திருக்காறாயில்: ஆதிவிடங்கர்- குக்குட நடனம்.

திருகோளிலி: அவனிவிடங்கர்- பிருங்க நடனம்.

திருவாய்மூர்: நீலவிடங்கர்- கமல நடனம்.

திருமறைக்காடு: புவனி விடங்கர்- அசம்பாத நடனம்.

பாடல் பெற்ற சிறப்போடு அற்புதங்களின் சிகரமாக அமைந்துள்ள சிவத்தலங்களைப் போற்றி வழிப்பட்டு உய்தல் நம்மவரின் கடமை ஆகும்.      

No comments:

Post a Comment